Skip to main content

ரூ. 5,000 அபராதம், சிறை தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்... ராமதாஸ் அறிக்கை

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

ramadoss

 

முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் 3,645 ஆக உயர்ந்திருக்கிறது. கரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

 

தமிழ்நாட்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 450 என்ற அளவுக்கு குறைந்திருந்தது. அதனால் ஏப்ரல் மாதத்தில், கரோனாவின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலையாகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் கரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 6ஆம் தேதி தினசரி கரோனா பரவல் 562 மட்டும்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவு 648% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு தினசரி கரோனா பரவல் 562-லிருந்து 3,645 ஆக அதிகரிக்க 56 நாட்கள் ஆயின. ஆனால், இப்போது 30 நாட்களில் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவது அலையில் கரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இந்த உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

 

கரோனா கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைபிடிக்காததுதான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு காரணம் ஆகும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட எவரும் முகக் கவசம் அணியாததுதான் கரோனா பரவலின் வேகம் அதிகரித்ததற்கு காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளும் கரோனா பரவலுக்கு காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

 

கரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டின் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுதான் அரசின் முதற்கடமையாக இருக்க வேண்டும். ஒருபுறம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி,  மறுபுறம் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடுமையாக கடைபிடிப்பதன் மூலம் நோய்ப்பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்ற இரு முனை அணுகுமுறையைத் தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. தமிழக அரசின் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமாக மட்டுமே கரோனா வைரஸ் பரவல் வேகத்தை முழுமையாக குறைத்து, நோயை முற்றிலுமாக போக்க முடியும்.

 

தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு கூறிவிட்டது. அதற்கு மாற்றாக தேவையற்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். கரோனா பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் வரை, ஒருமுறை வெளியில் செல்ல வேண்டுமென்றாலும் கூட, அத்தகைய பயணம் அவசியம்தானா? என நூறு முறை சிந்திக்க வேண்டும். ஒருவேளை தவிர்க்க முடியாமல் வெளியில் செல்ல வேண்டுமென்றால் கூட முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியை அடிக்கடி கைகளில் தெளித்துக்கொள்ளுதல், பொது இடங்களில் குறைந்தபட்சம் இரு மீட்டர் இடைவெளி விடுதல், வெளியில் சென்று வீடு திரும்பியதும் கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கரோனாவை தடுக்க இது மிக அவசியமாகும்.

 

பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பிறகும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ தண்டிப்பதற்காக அல்ல.... கரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து தங்களையும் காப்பாற்றிக்கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகத்தான் என்பதை பொது மக்கள் உணர வேண்டும். அரசு, மக்கள் என அனைவரும் கைகோர்த்து கரோனா என்ற பெருந்தீமையை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.