Skip to main content

'ஓட்டு' வீட்டிலிருந்து ஒரு வேட்பாளர்! - அள்ளிக் கொடுத்த தொழிலாளர்கள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

communist candidates who filed nomination with help of surrounded peoples

 

தேர்தல் காலம் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் அதிருப்தியாளர்கள், சுயேச்சைகள் எனப் பலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில், ஒரு சில வேட்பாளர்கள் இன்று வரை வறுமை நிலையில் உள்ளவர்களாகவே உள்ளனர். ஆனால், அவர்களுக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளதால், வாய்ப்புகள் தேடி வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையை, மாணவப் பருவத்திலேயே கம்யூனிசம் ஈர்த்ததால், அவ்வழியே புறப்பட்டுவிட்டார். 

 

எங்கே ஒரு அநீதி என்றாலும், முதல் குரலாக ஓங்கி ஒலித்ததால், மார்சிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்து மா.செ பதவியும் வகித்து, தற்போது மாநிலக்குழுவில் பயணிக்கிறார். மார்க்சிஸ்டாக தன்னை இணைத்துக் கொண்ட அன்று முதல் இன்று வரை பல நாட்கள் வீட்டுப்பக்கம் செல்வதே குறைவு. எப்போதாவது நடுராத்திரியில் வீட்டுக்குப் போய் அதிகாலையில் எழுந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசத் தொடங்கி விடுவது வழக்கம். இவரது அரசியல் பயணம் முழுமையாக மக்களோடு மக்களாக இருந்ததால், கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார்.

 

communist candidates who filed nomination with help of surrounded peoples

 

இந்த முறை, திமுக கூட்டணியில், கம்யூனிஸ்ட்களுக்கு தலா ஆறு தொகுதிகளைக் கொடுத்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற மனநிறைவோடு கூட்டணி துணையோடு களப்பணியில் கலக்கி வருகிறார்கள். கடைசி நாளான இன்று வேட்பு மனுத் தாக்கலுக்குத் தயாரானபோது, திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தொழிற்சங்க தொழிலாளர்களும் எங்கள் பணத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யுங்கள் என்று அள்ளிக் கொடுத்துள்ளார்கள். அப்போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். வேட்பாளர் மட்டுமின்றி சுற்றி நின்ற நண்பர்களும் பணம் கொடுத்ததால், யாருடைய மனமும் வருந்தக் கூடாது என்பதால், அனைவரின் பணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். பாகுபாடின்றி கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக இணைந்து ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  "ஒரு ஓட்டு வீட்டில் இருந்து கோட்டைக்குப் போக உங்கள் ஓட்டைக் கேட்கிறார், வாக்களித்து வாழ்த்தி அனுப்புங்கள் மக்களே!” என்ற கோஷத்துடன் கூட்டணிக் கட்சியினர், வீடுவீடாக வாக்குக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்