
ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வைத்ததால் பாலியல் வன்கொடுமை ஆளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பட்டியலின சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்த சிறுமியை, ரோஹித் குமார் சாஹ்னி (30) என்பவர் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கடந்த மே 26ஆம் தேதி வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமியை, அங்குள்ள ஒரு குளத்தில் அருகே வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தான் செய்த குற்றத்தை மறைப்பதற்காக சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து மற்றும் வயிற்றில் குத்தி தப்பிச் சென்றுள்ளார். இதில் அந்த சிறுமி படுகாயமடைந்த ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
தனது மகள் வீட்டில் இல்லாததை கண்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், ஊர் முழுக்க தேடியுள்ளார். அப்போது குளத்தில் அருகே மகள் ரத்த காயங்களோடு கிடந்திருப்பதை கண்ட தாயார் கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி பரிந்துரைக்கப்பட்டார்.
ஆனால், மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸில் சுமார் 2 மணி நேரமாக சிறுமி காத்திருக்க நேர்ந்துள்ளது. இதனால், ஆம்புலன்ஸிலேயே சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சில அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, பாட்னா மருத்துவமனைக்கு கடந்த 31ஆம் தேதி மாலை 5 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று (02-06-25) காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸில் காத்திருக்க வைக்காமல், சரியான நேரத்தில் பாட்னா மருத்துவமனையில் சிறுமி சேர்த்திருந்தால், சிறுமியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே போல், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மீது துர்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாகக் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘முசாபர்பூரில் ஒரு பட்டியலின சிறுமிக்கு எதிரான கொடூரமும் அதைத் தொடர்ந்து சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியமும் மிகவும் வெட்கக்கேடானது. அவளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவளுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இரட்டை இயந்திர அரசாங்கம் பாதுகாப்பை வழங்குவதில் மட்டுமல்ல, அவளுடைய உயிரைக் காப்பாற்றுவதிலும் அலட்சியமாக இருந்தது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். குற்றவாளிகள் மற்றும் அலட்சியமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வைத்த சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, பாட்னா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அங்கு காங்கிரஸ் கட்சியினர், சாலைகளை மறித்து, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது.