
பல புதுமணத் தம்பதிகளைப் போலவே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோர் மகிழ்ச்சியான எதிர்காலக் கனவுகளுடன் தேனிலவுக்குச் சென்ற போது ஏற்பட்ட துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி- சோனம் ஆகியோருக்கு கடந்த மே 11ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக கடந்த மே 20ஆம் தேதி மேகாயாவுக்குச் சென்ற இவர்கள், திடீரென்று காணாமல் போனார்கள். குவஹாத்தி வழியாக ஷில்லாங்கிற்கு பயணம் செய்த இந்த தம்பதி, சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள சோஹ்ராவை (சிரபுஞ்சி) பார்வையிட இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்தனர். மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள நோங்ரியாட் கிராமத்தில் உள்ள தங்கியிருந்த இந்த தம்பதி, மே 23 அன்று காணாமல் போனார்கள்.
இது குறித்து அவர்களுடைய குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவே, அவர்களை போலீசார் தீவிரமாக தேடினர். அந்த தேடுதல் வேட்டையில், மே 24ஆம் தேதி தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர், சோஹ்ராரிம் கிராமத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன தம்பதிகளை தேட அவர்களுடைய உறவினர்கள் விமானம் மூலம் மேகாலயாவுக்கு வந்து போலீசுடன் தீவிரமாக தேடினர். தம்பதி காணாமல் போன 8 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவ்வர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார், அவரின் மொபைல் போனை மீட்டனர். மேலும், சம்பவ இடத்தில் ஒரு பெண்ணின் சட்டை, மருந்துகள், ஒரு மொபைலின் எல்.சி.டி திரையின் ஒரு பகுதி மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜா ரகுவன்ஷியின் உடலை கண்டுபிடித்த போதிலும், அவரது மனைவி சோனம் என்ன ஆனார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் எங்கு இருக்கிறார்? அவரை யாரேனும் கடத்திச் சென்றுள்ளனரா? என்று கேள்விகள் போலீசிடம் எழுந்துள்ளது. 11 நாட்களுக்கு மேலாக அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் 500 மிமீ மழைப்பொழிவு பதிவாகி வானிலை மோசமாக இருப்பதால், தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தம்பதியினர் கடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தம்பதியரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜா ரகுவன்ஷி தங்கியிருந்த இந்தூர் இல்லத்திற்கு வெளியே அவருடைய குடும்பத்தினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தம்பதியினரின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், ‘ராஜாவின் ஆன்மா மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது - நான் இறக்கவில்லை, நான் கொல்லப்பட்டேன், சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.