உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மூன்று இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்யும் நெதர்லாந்து நாட்டில் உள்ள டாம்டாம் டிராஃபிக் இன்டெக்ஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரமாக பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள மக்கள் சராசரியாக ஆண்டுக்கு 10 நாட்கள் 3 மணிநேரத்தை சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலிலேயே செலவிடுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் போகோடா நகரம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. நான்காவது இடத்தில் மும்பை நகரமும், ஐந்தாவது இடத்தில் புனே நகரமும் பிடித்துள்ளது. மும்பை நகர மக்கள் ஆண்டுக்கு 8 நாட்கள் 17 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார்கள். அதேபோல புனே நகர மக்கள் ஆண்டுக்கு 8 நாட்கள் 3 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலிலேயே செலவிடுகிறார்கள். இந்த பட்டியலில் டெல்லி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.