Skip to main content

புதுவையில் போதைப்பொருள்களின் புழக்கம் அதிகம்...தடுப்பு நடவடிக்கை இல்லை என அ.தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் பேசும் போது, “ புதுச்சேரி மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கஞ்சா விற்பனை தலைமை செயலகம் அருகில் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலம் முழுவதும் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன.
 

தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்ட இளைஞர்கள் பணத்திற்காக, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத குற்றச்செயல்களிலும் துணிச்சலோடு செய்வார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் அதிக மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்க்கு அடிமையாகி உள்ளனர். பல நேரங்களில் இருசக்கர வாகன விபத்தில் மரணமும் ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டிய அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை சீரழித்து கொண்டுள்ளனர். 

 

puduvai youngters going to wrong way admk mla anbalagan  Accusation in assembly


புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்வோர், கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் யார், யார் என்பது காவல்துறையில் சாதாரண க்ரைம் பிரிவு போலீசார் வரையில் தெரியும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான பல இளைஞர்கள் நகரில் பல இடங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி தவறு செய்பவர்கள் பிடிபட்டால் முகத்தை மூடி காவல்துறையினர் புகைப்படத்தை வெளியிடுவது எதற்கு என்றே தெரியவில்லை.
 

கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க அரசிடம் என்ன சட்டம் இருக்கிறது? சட்டம் கடுமையாக்கப்பட்டால் தான் தவறுகள் ஒரளவு தடுக்கப்படும். சமூக, சமுதாய சீர்கேடுகள் நிறைய நடக்கிறது. ஒரு சில திருநங்கைகள் கஞ்சா விற்பனை செய்வதுடன், வழிப்பறி செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களையும் அரசு நேர்வழிப்படுத்த வேண்டும். கோவா போன்ற பல சுற்றுலா நகரங்களில் கூட குறிப்பிட்ட  பகுதியில் ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையுடன் இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. 
 

சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் அனைத்து தவறுகளையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்களை மகிழ்விக்க பல ஒட்டல்களில் அரைகுறை ஆடையுடன் நாட்டியம் நடத்தப்படுகின்றது. குடி, கும்மாளம், ஆட்டம், பாட்டம், அரைகுறை ஆடையில் பெண்கள் அணிவகுப்பு இதுதான் சுற்றுலாவா? புதுச்சேரி மாநிலத்தை கேவலப்படுத்துகிறார்கள். பிற மாநிலத்தில் சுற்றுலா இல்லையா? ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, இயற்கை சுற்றுலா என இருக்கும். எத்தனையோ சுற்றுலாத்தலங்களில் மது அருந்தவும், புகை பிடிக்கவும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால் புதுச்சேரியில் அடுத்த தலைமுறை இளைஞர்களை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். இதுபோன்ற தவறான செயலை அரசு தடுக்க வேண்டாமா? இதற்கு முதல்வர் உரிய பதிலை அளிக்க வேண்டும்” என்றார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.