Skip to main content

வாடகை கார் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்... கவனிக்கவேண்டிய அம்சங்கள்...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

new rules for cab companies in india

 

 

வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்களை முறைப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் சிலவற்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 

வாடகை கார்களை இயக்கம் பெருநிறுவனங்கள் சவாரி கட்டணம், ஓட்டுநர்களுக்கான ஊதிய தொகை உள்ளிட்டவற்றை பெரும்பாலும் தாங்களே முடிவு செய்து வந்தன. இவற்றை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கான கட்டணத்தை அடிப்படை கட்டணமாக இந்நிறுவனங்கள் வசூலித்துக்கொள்ளலாம். இதுதவிர, அதிக சவாரிகள் உள்ள நேரத்தில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை 1.5 மடங்கு வரை உயர்த்திக்கொள்ளலாம் எனவும், சவாரிகள் குறைவான மற்ற நேரங்களில் அடிப்படை கட்டணத்திலிருந்து 50 சதவீதம் வரை இந்த கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனங்கள் அதிகபட்சம் 20% கமிஷன் மட்டுமே எடுத்துக்கொண்ட மீதத்தொகை 80சதவீதத்தை ஓட்டுநருக்கு வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெருநிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான வசதிகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களுக்காக மாநில அரசு 2% தொகையை வசூலித்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  

 

இதுதவிர, இதுபோன்ற நிறுவனங்களில் ஓட்டுநராக இணைவதற்கு, சரியான அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், KYC உடன் கூடிய வங்கிக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு ஆகியவற்றை ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும். கூடுதலாக, ஓட்டுநருக்குக் குறைந்தபட்சம் இரண்டு வருட ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும். அவ்வாறு அனுபவம் இல்லாத ஓட்டுநரை பணிக்குச் சேர்ப்பதானால், அவர்களுக்கு அந்நிறுவனங்கள் ஓட்டுநருக்கு 15 நாட்கள் பயிற்சி கொடுக்க வேண்டும். அதன்பின்னர், ஓட்டுநர் மீதான  வரலாறு, காவல்துறை சரிபார்ப்பு ஆகியவை செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 

பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கார் ஓட்டுநர் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லையென்றால் அந்நிறுவனங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் செல்வதுடன், அவர்கள் உடனடியாக ஓட்டுநரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும் (ஷேர் டாக்ஸி) முறையில், பெண் ஒருவர் பயணிக்க வேண்டுமானால், அவர் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும். மேலும், அவ்வாறு ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பைக் டாக்ஸி சேவையை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகில் இன்று (17.04.2023) இருசக்கர பைக் டாக்ஸி சேவைகளை தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

 

 

Next Story

ராபிடோ பைக் டாக்சிக்கு  தடை; மீறினால் அபராதம்!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

madurai rapido bike taxi service related issue

 

முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாகக் கொண்ட ராபிடோ பைக் டாக்ஸி என்ற தனியார் நிறுவனம், மதுரையில் வாடகை கார்கள் இயக்குவது போல், பைக் டாக்சிகளை இயக்கி வந்துள்ளனர். முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, மதுரை மாநகரில் அனுமதி பெறாமல் பைக் டாக்சிகளை இயக்கி வருகிறது. இது தொடர்பாக சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்த நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின்படி, சட்டப்படி அங்கீகாரம் பெறாத ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்திடம் மொபைல் ஆப் வழியாக தொடர்பு கொண்டு வாடகைக்கு இருசக்கர வாகனங்கள் இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராபிடோ பைக் டாக்ஸி வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு எடுத்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை வாடகை பைக் டாக்ஸிக்கு பயன்படுத்தக் கூடாது" என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.