
புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவர், இடையார்பாளையத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் கடந்த மே 11- ஆம் தேதி வீட்டில் எலிமருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஜிப்மர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை காவல்துறையினர் தற்கொலை முயற்சிப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை, அதே நிறுவனத்தில் பணியாற்றும் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்த கணேஷ் (வயது 26) என்பவர் கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்ததும், சில தினங்களுக்கு முன்பு விடுதிக்கு அழைத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து, அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் இவை அனைத்தையும் மறைத்து, கணேஷ் கடந்த 15-ஆம் தேதி கடலூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால், தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல், அப்பெண் தற்கொலைக்கு முயன்றதும் அம்பலமானது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறையினர் தற்கொலை முயற்சி வழக்கினை நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணேஷைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (18/05/2022) புதுமாப்பிள்ளை கணேஷை வீட்டின் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.