
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி (10.05.2025) மாலை 05.00 மணியளவில் இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்தகைய சூழலில் தான் புல்வாமா தாக்குதலுக்குப் பின் தெற்கு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று (15.05.2025) அதிகாலை புல்வாமா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த தேடுதல் வேட்டையின் போது நாதிர் என்ற பகுதியில் 3 முதல் 4 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்குத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் தீவிரவாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட மூவருக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.