![The forest department is serious about catching the wild animal that the girl](http://image.nakkheeran.in/cdn/farfuture/G82f7OR-ittM6MKG3Fcv5LPgB8Yd2ZBPINNvhgkvAac/1691904044/sites/default/files/inline-images/tirupathy.jpg)
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோர்களுடன் நேற்று முன் தினம் இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுத்தை அல்லது வனவிலங்குகள் ஏதேனும் இழுத்து சென்றிருக்கலாம் என அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மகள் காணாமல் போனது குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் வனத்தின் பல பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
தொடர் தேடுதலுக்கு பிறகு நேற்று காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திருமலை நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வனவிலங்கு தாக்குதல் சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பலகட்ட நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுக்கும். திருமலை நடைபாதையில் ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சிறுமியைக் கொன்ற வனவிலங்கைப் பிடிக்க வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். வன விலங்கைப் பிடிக்க 2 இடங்களில் கூண்டும், வன விலங்கைக் கண்காணிக்கும் பொருட்டு 30 இடங்களில் நைட் விஷன் கேமராக்களும் பொருத்தியுள்ளனர்.