
பொம்மைத் துப்பாக்கியை வைத்து வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் 31 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தலிம் பாசு (31). அஞ்சல் துறையில் பணிபுரியும் இவர், நேற்று சர்வே பார்க் பகுதியில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியாளர்களிடம் தங்களிடம் உள்ள அனைத்து பொருட்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். தலிம் பாசு பொம்மை துப்பாக்கியை வைத்திருப்பதை உணர்ந்த வங்கி மேலாளரும், வாடிக்கையாளர்களும் அவரை பின்னால் இருந்து அடித்துள்ளனர். இதில் கீழே விழுந்த அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் வங்கிக்குச் சென்ற போலீசார், தலிம் பாசுவிடம் இருந்த பொம்மைத் துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் அவரை கைது செய்தனர். அதன் பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் தலிம் பாசுவுக்கு வங்கிக் கடன் நிறைய இருந்துள்ளது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், பிற செலவுகளைச் சமாளிக்கத் தவறியதாலும் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால், அந்த வங்கிக்கே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.