
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவற்றை விமானங்கள் மூலமும் ரயில்கள் மூலமும் அனுப்பி வருகிறது. இரண்டாம் அலை பாதிப்பைக் குறைக்க, பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் ஊரடங்கை அமல்படுத்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் மே மாதம் 5ம் தேதி முதல் நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.