Skip to main content

தவாங் பகுதியில் சீனா ஊடுருவல்; முறியடித்த இந்திய ராணுவம்; மக்களவையில் ராஜ்நாத்சிங் தகவல்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

hjk

 

சீன ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது ஊடுருவல் நடத்துவதும், இரு நாடுகளின் நல்லுறவைச் சிதைக்கும் வகையில் கட்டுமானங்களை உருவாக்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி, இந்திய ராணுவத்துக்கும் ஊடுருவல் நடத்த முயன்ற சீன ராணுவத்துக்குமிடையே சண்டை நடைபெற்றது குறித்தும் இருதரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது குறித்தும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

 

இதுகுறித்து இன்று மக்களவையில் விளக்கமளித்த இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங்கில் சீன துருப்புக்கள் ஊடுருவல் நடத்தியதாகவும் தற்போதைய நிலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்ற முயன்றதாகவும் இந்திய ராணுவத்தினர் அவர்களோடு சண்டையிட்டு விரட்டியடித்ததாகவும் குறிப்பிட்டார். 

 

டிசம்பர் 9 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே எனப்படும் சர்ச்சைக்குரிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்.ஏ.சி) சீன ராணுவத்தினர் ஊடுருவல் நடத்தியதாகவும், இந்திய ராணுவத்தினர் சீனாவின் ஊடுருவல் முயற்சியை உறுதியுடன் எதிர்த்ததாகவும் கூறினார். இந்த மோதலில் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் நமது ராணுவத்தினர் மிகுந்த துணிச்சலுடன் சீன ராணுவ ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி அவர்களைத் தங்கள் நிலைக்குப் பின்வாங்கும்படி செய்தது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். 

 

ராணுவ அமைச்சரால் கைகலப்பு என்று கூறப்படுவதில் இருதரப்பும் கட்டைகளாலும், பிரம்புகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் இதில் காயமடைந்த இந்திய வீரர்கள் கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இம்மோதலில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து பதற்றத்தைக் குறைப்பதற்காக இருதரப்பு உள்ளூர் தளபதிகள் மட்டத்தில் டிசம்பர் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அமைதியைப் பேணும்படி சீனத்தரப்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதற்கு முன்னர், 2020ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது.

 

எல்.ஏ.சி.யை ஒட்டிய பகுதிகளில் அவரவர் எல்லைப்புறத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் இந்திய ராணுவத்தினர் தங்கள் நிலைகளிலிருந்து சற்று உள்வாங்கியிருப்பார்கள். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீன ராணுவத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள், இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட இந்திய ராணுவத்தின் தரப்பில் 80 வீரர்கள் வரை, இரவோடு இரவாக இணைந்து அப்பகுதிக்குச் சென்று சீன ராணுவத்தினரின் ஊடுருவலை எதிர்த்து சில மணி நேரமாக மோதியுள்ளனர்.

 

இதில் இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், இந்திய ராணுவம் உஷாராகிவிட்டதை அறிந்து ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினர் பின்வாங்கி தங்கள் இருப்பிடத்துக்கே சென்றுள்ளனர். ஏற்கெனவே கல்வான் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. தற்போது அத்தகைய அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கப்பட்டதோடு சீன ராணுவத்தினரும் பின்வாங்கியுள்ளனர். தவாங் சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் உள்ளனர்.

 

- தெ.சு. கவுதமன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

மொபைல் முழுக்க ஆபாசப் படம்; ராணுவ வீரர் கைது

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Soldier arrested in thiruchy

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.