Skip to main content

சோனியா காந்தியின் தனிச்செயலாளர் மீது பாலியல் வழக்குப் பதிவு

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

71 year old personal secretary of Sonia Gandhi booked on rape charges

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பி.பி.மாதவன் பணியாற்றிவருகிறார். அவருக்கு வயது 71. இவர் மீது டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதை வெளியில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து, பி.பி.மாதவன் மீது பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் டெல்லி உத்தம்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம்பெண் அளித்துள்ள இந்தப் புகார் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் விளக்கம் அளித்த பி.பி.மாதவன், இது காங்கிரஸ் கட்சியின் புகழைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி உருவப் படத்தை எரித்தவரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Congress has announced candidate sudha ramakrishnan who fire Sonia Gandhi portrait

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவரை அறிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்பாளர் அறிமுகக் கூட்டம், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், விஐபிக்களை சந்திப்பது எனத் தேர்தல் களம் அனலாகத் தகிக்கிறது. திமுக ஒருபடி மேலே சென்று வேட்பாளர்களை அறிவித்த கையோடு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே இழுபறிக்கு ஆளாகியது. மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளரை வேட்பு மனு கடைசி நாளுக்கு முதல் நாள் வரை வேட்பாளர் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மகிளா காங்கிரஸ் சுதா ராமகிருஷ்ணன் என்பவரை அறிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்திக்குதான் சீட், அவர்தான் வெற்றி வேட்பாளர் என பிரபலப்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், சிட்டிங் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசுவுக்கு திருச்சி தொகுதி இல்லை என்றதும் மயிலாடுதுறை தொகுதியை வழங்கலாம் எனப் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதேபோல மூன்று முறை மயிலாடுதுறை எம்பியாகவும் மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் தனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென தலைமையில் மன்றாடி வந்தார். இந்த மூவரில் ஒருவருக்குத்தான் சீட் எனக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைமையோ வேட்பாளரைத் தேர்வு செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தது.

ad

இந்த சூழலில், கடலூர் தொகுதியில் சீட்டு கேட்டு வந்த சுதா ராமகிருஷ்ணனை மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பவுன்ராஜியின் மகன் பாபு என்பவர் போட்டியிடுகிறார். அதேபோல பாரதிய ஜனதா கூட்டணியில் பாமகவை சேர்ந்த ம.க. ஸ்டாலின் என்பவர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முதல் ஆளாகக் களத்திற்கு வந்து சின்னமே இல்லாமல் பாதி பிரச்சாரத்தை முடித்துவிட்டார். இந்த சூழலில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Congress has announced candidate sudha ramakrishnan who fire Sonia Gandhi portrait

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சுதா ராமகிருஷ்ணன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜூடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றவர். அதோடு  இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற பொழுது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பியதோடு சோனியாவின் உருவப்படம் எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைமையின் கண்டிப்புக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி திமுக, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தாலும் தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒரு நபரை அறிவித்திருப்பது திமுகவினரை சோர்வடையவே செய்துள்ளது. ஏற்கனவே மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்கு வேலை செய்ய முடியாமல் கூட்டணிக் கட்சிக்காகவே வேலை செய்யும் நிலைமை இருக்கிறது. இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிட்டிங் திமுக எம்.பி. ராமலிங்கம் வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில்  இம்முறை சற்று கடினமானது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

Next Story

மாநிலங்களவைத் தேர்தல்; சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Sonia Gandhi contest in Rajya Sabha elections

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.