Skip to main content

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அசராம் பாபு குற்றவாளி!

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

Asaram

 

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஆசிரமங்கள், பணபலம், அரசியல் செல்வாக்கு என எல்லாமும் கொண்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபு. ஜோத்பூரில் உள்ள இவரது ஆசிரமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் படிப்பதற்காக சேர்த்துவிட்டனர். அங்கு படித்துக்கொண்டிருந்த சிறுமிக்கு தீய சக்திகளின் அச்சுறுத்தல் உள்ளது, பேய் ஓட்டவேண்டும் எனக்கூறி பூஜை நடத்திய அசராம் பாபு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை நடத்தப்பட்டு காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்கள் 9 பேர் வழக்கு நடந்த சமயத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். மூன்றுபேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டு, அதை மறுத்த நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்திருக்கிறார். இத்தனை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், சிறுமி தொடர்ந்து விசாரணையில் கலந்துகொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம் என்பதால் ஹரியானா, குஜராத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ஜோத்பூர் நீதிமன்றம் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசராம் பாபுவை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அசராம் பாபு தரப்பு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்