Skip to main content

அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தலை கவனி! உத்தரவு போட்ட சசி ஏற்காத டிடிவி!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

சசிகலாவை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராகியிருக்கிறார் தினகரன். கட்சியையும் அவரது பொதுச்செயலாளர் பதவியையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான கடிதம் தரப் பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணிகள் பகீர் ரகம்.  அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, சிறைக்குச் செல்லும்முன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித் துச் சென்றார். ஒரு கட்டத்தில் கட்சியின் பொதுக் குழு, செயற்குழுவைக் கூட்டி சசிகலா, தினகரன் இருவரையும் நீக்கியதுடன் கட்சியை இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் கைப்பற்றினர். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் சசிகலா தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

 

sasikala



இதே காலகட்டத்தில் அ.ம.மு.க. எனும் பெயரில் தனி அமைப்பைத் தொடங்கிய தினகரன், அதன் பொதுச்செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக தன்னையும் நியமித்துக்கொண்டார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலும் முடிந்த மறுநாள் (ஏப்ரல் 19) அ.ம.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை அகற்றிவிட்டு அப்பதவியில் தன்னை நியமித்துக் கொண்டார் தினகரன். இந்த முடிவு சசிகலாவை நம்பி தினகரனை ஏற்றுக்கொண்ட அக்கட்சி நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
 

ttv



இது குறித்து விசாரித்தபோது, "ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தில் மா.செ.க்களின் கையெழுத்து பெறப்பட்டது. இதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்பதை முன்கூட்டியே அறிந்த மா.செ.க்கள் மட்டும் உடனடியாக கையெழுத்திட்டனர். அவர்களிடம் உற்சாகம் இருந்தது. ஆனால், எதற்காக கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்திராத மா.செ.க்கள் சிலர், "சின்னம்மாவை நீக்கிவிட்டோமா? இந்த மாற்றத்துக்கு அவரிடம் ஒப்புதல் பெறப் பட்டதா?' என்கிற சந்தேகத்தை எழுப்பினர். ஆனால், திருப்தி கரமான பதில் கொடுக்கப்பட வில்லை. அதேசமயம், அதிருப்தி குறித்து ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர, பெரிதாக எவ்வித விவாதமும் நடக்கவில்லை''‘என்கின்றனர் இந்த மாற்றத்தை ஜீரணிக்க முடியாத மா.செ.க்கள். 
 

eps ttv



அ.ம.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் இது குறித்துப் பேசிய போது, "உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சில சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கும்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது. அ.தி.மு.க.வை உரிமை கோரும் போராட்டத்தை சசிகலா தொடரவேண்டியிருப்பதால் அவரது ஒப்புதலோடுதான் இந்த மாற்றத்தைச் செய்திருக்கிறார் தினகரன். அ.ம.மு.க.விலிருந்து சசிகலா நீக்கப்படவில்லை. கட்சியின் தலைவர் பதவி அவருக்காக காத்திருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக. 

 

saraswathi



அதேநேரத்தில், அ.ம.மு.க.விலுள்ள சசிகலா ஆதரவாளர்களை இந்த மாற்றம் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது குறித்து விசாரித்தபோது நம்மிடம் பேசிய கட்சியின் முன்னாள் தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்கறிஞர் அக்னீஸ்வரன், "சசிகலா ஜெயிலுக்குப் போனபிறகு, அ.தி.மு.க.வை உடைத்து அதனைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார் தினகரன். இப்போது, குடும்பத்தினரின் வலியுறுத்தலில் இந்த மாற்றத்தை செய்திருக்கிறார். சின்னம்மாவுக்காக இவரை ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் இந்த மாற்றத்தை ஏற்கவில்லை. 

"அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது' என சின்னம்மா போட்டிருக்கும் வழக்கையும் இரு கட்சிகளில் பதவியில் இருக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டித்தான் அ.ம.மு.க.விலிருந்து சசிகலா விடுவிக்கப்பட்டிருப்பதாக தினகரன் தரப்பில் சொல்கிறார்கள். அப்படியென்றால், தினகரனும் அ.தி.மு.க.வில் பதவியில் இருப்பதால் அதற்கும் சேர்த்துதான் வழக்கு. அதனால் அ.தி.மு.க. பதவியிலிருந்து இவர் விலகிவிட்டாரா? இவர் மட்டும்  இரு கட்சியில் இரு பதவியில் எப்படி தொடரமுடியும்? ஆக, அ.ம.மு.க.வுக்கும் சின்னம்மாவுக்கும் எதிர்காலத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை நிலை நிறுத்தவே இந்த சதித்திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அ.ம.மு.க.வில் ஒரு கோடி தொண்டர்கள் இருப்பதாகச் சொல்லும் தினகரன், அவர்களிடம் கருத்துக் கேட்டு அல்லது பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெறவில்லை. இவரது நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர்வேன்'' என்கிறார் உறுதியாக. 

தினகரனின் இத்தகைய முடிவுகள் குறித்து அ.ம.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு சசிகலாவை சந்தித்த தினகரன், தேர்தலில் எடப்பாடி குரூப்பை ஒழித்து வெற்றிபெற மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. திவாகரனிடமும் விவேக்கிடமும் இருப்பதை என்னிடம் தருவதற்கு உத்தரவிடுங்கள் என கேட்டார். சசிகலா சம்மதிக்கவில்லை. மாறாக, அக்கா (ஜெயலலிதா) பாதுகாத்த கட்சி உன்னால் தோற்றுப்போனது என்கிற அவப்பெயர் வரக்கூடாது. அதனால் எடப்பாடியிடம் சமாதானமாகி "அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தலை கவனி' என உத்தரவிட்டார் சசிகலா. இதனை தினகரன் ஏற்கவில்லை.

இதனையடுத்து, தனது மனைவி அனுராதாவுடன் அவர் ஆலோசிக்க, "தேர்தல் செலவுகளை நாமளே பார்த்துக்கொள்ளலாம். சசிகலாவை இனியும் நாம் நம்பக்கூடாது. தேர்தலுக்குப் பிறகு கட்சி பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு கட்சியை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்' என தெரிவிக்கப் பட்ட யோசனையைத்தான் இப்போது நிறைவேற்றியுள்ளார் தினகரன். சசிகலாவுக்கு எடப்பாடி செய்த துரோகத்தை இப்போது தினகரனும் செய் திருக்கிறார்'' என சுட்டிக்காட்டி அதிர்ச்சியளிக்கின்றனர். 
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.