Skip to main content

ரெய்டில் சிக்கும் தமிழக அமைச்சர்கள்! 2 பேரை காப்பாற்றும் டெல்லி! பதட்டத்தில் 12 பேர்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
ddd

 

"பிரதமர் நரேந்திர மோடி யார் மீது தனது இடது கையை வைக்கிறாரோ அவர்களுக்கு கஷ்டகாலம்தான் என்பது அதிமுகவினரின் நம்பிக்கை. ஜெயலலிதா மரணத்தின்போது தனது இடது கையை சசிகலா மீது வைத்தார். அவர் சிறைக்குப் போனார். அதே இடது கையை ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நரேந்திர மோடி வைத்தார். அதில் ஒரு சுவையான பின்னணி இருக்கிறது'' என்கிறார்கள் அதிமுகவினர்.

 

குட்கா ஊழலின் சிபிஐ விசாரணையில் சிக்கியிருக்கும் விஜயபாஸ்கர், அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க அடிக்கடி டெல்லி சென்று வந்தார். சுகாதாரத்துறையில் மேலும் பல ஊழல் புகார்கள் கிளம்பின. தனது பிரச்சனையை தீர்க்க டெல்லி சென்று வந்த விஜயபாஸ்கர் பிரதமரின் பார்வையில் பட்டுவிட, முழு டீடெய்லையும் விசாரித்து வாங்கி விட்டார் பிரதமர். அதன் எதிரொலியாகத்தான் விஜயபாஸ்கரை ஒரு விழாவில் சந்தித்தபோது இடது கையால் ஆசிர்வாதம் செய்தார்.

 

அதுபோல மோடியின் ஹிட் லிஸ்டில் ஏகப்பட்ட மந்திரிகள் சிக்கியிருக்கிறார்கள். போக்குவரத்துத்துறையில் 750 பஸ்களின் சேஸ்களை வாங்காமலேயே வாங்கியதாக போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர் போலி கணக்கு காட்டி மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். மதுரை அன்பு என்கிற சினிமா பைனான்ஸியர் மூலம் கோடம்பாக்கம் சினிமாத் துறையையே ஆட்டிப் படைத்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். விஞ்ஞானி செல்லூர் ராஜுவும்கூட இந்த லிஸ்டில் தப்பவில்லை.

 

இவர்களையெல்லாம்விட மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருப்பவர் ஒரு முக்கிய அதிமுக விஐபி. இவரது மகன் தொடர்பான பாலியல் வழக்கு சிபிஐயின் விசாரணையில் இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தும் அளவுக்கான விவகாரம் இது என்கிறது டெல்லித் தரப்பு. இதுபற்றி எடப்பாடியிடம் பேசி அவரை டம்மியாக்குங்கள், எந்த நேரத்திலும் அவரது மகன்மீது சிபிஐ பாயக்கூடும் என மத்திய உள்துறை எச்சரித்தது. அதற்கு பதிலளித்த மாநில அரசு, இந்த விவகாரத்தில் அவரது மகன் சம்மந்தப்பட்டிருக்கிறார் என எங்களுக்கு தெரியும். அதனால்தான் நாங்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம். தமிழக போலீஸ் இந்த வழக்கை விசாரணை செய்தால் அந்த விஐபி எங்களுக்கு மகனை இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்கு மாறு தொல்லைகொடுப்பார். அதனால்தான் சிபிஐக்கு காமக் கொடூர வழக்கை நாங்கள் மாற்றினோம் என பதில் சொன்னார்கள்.

 

மத்திய அரசு இவ்வாறு கேள்வி கேட்பதும், அந்த வி.ஐ.பி.யை பொள்ளாச்சியில் இருந்து மாற்றி திருப்பூர், காங்கேயம் பகுதிகளை கவனித்துக்கொள் ளும் கட்சிப் பொறுப்பு தரப்பட்டது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

ஒரிசாவைச் சேர்ந்த பரணி எர்த் மூவர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தும் பிரபாகரன். இவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ்- அமைப்புக்கு நிறைய நிதி கொடுத்து அந்த அமைப்புடன் பல்லாண்டு காலமாக தொடர்பை வளர்த்து வருபவர் பிரபாகரன்.

 

இந்த பிரபாகரனைப் பிடித்துதான் அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் வேலுமணியும் எடப்பாடிக்கும்- பாஜகவிற்கும் நட்பு பாலம் அமைத்தார்கள். இந்த பிரபாகரன் ஜக்கி வாசுதேவுக்கும் நெருக்கமான நண்பர். இவர் மூலமாக பியூஷ் கோயல், அமித்ஷா ஆகியோரை தங்கமணியும், வேலுமணியும் எளிதாக சந்தித்து வருவார்கள். எடப்பாடி தனது டெல்லித் தொடர்புகளை இந்த இருவர் மூலம்தான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

 

சமீபத்தில் எடப்பாடி டெல்லியுடன், பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா மூலம் தொடர்புகளை ஏற்டுத்திக்கொண்டார். அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதேபோல் வேலூர் அமைச்சர் வீரமணியையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இவையெல்லாம் எடப்பாடி தங்கமணி, வேலுமணியை மீறி தனது டெல்லி தொடர்புகளை வலுவாக்கிக்கொண்டதன் அடையாளம் என்கிறார்கள் அதிமுகவைச் சார்ந்தவர்கள்.

 

டெல்லியைப் பொறுத்தவரை எடப்பாடி, ஓ,பன்னீர்செல்வம் ஆகிய இருவரை மட்டுமே காப்பாற்றுவார்கள். மற்றபடி தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி, போக்குவரத்து விஜய பாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் என 12 பேர் மீது பாய்வதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.

 

ஊழல் கட்சி திமுக, ஊழல் கட்சி காங்கிரஸ் என தமிழக தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நரேந்திரமோடி, தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.கவில் ஊழலை ஒழிப்பதன் அச்சாரமாக இந்த 12 அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையையும் பொள்ளாச்சி வி.ஐ.பி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏவுவதற்கு முயற்சிக்கிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா மீது பாய்ந்தது போல், வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் அதிமுக அமைச்சர்கள் மீது டெல்லி பாய இருக்கிறது என்கிற பதட்டம் அதிமுக வட்டாரங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.