Skip to main content

“என்னப்பா அவமானப்படுத்துறீங்க?'' -கூட்டத்திலிருந்து வெளியேறிய சீனியர்!!! தனி விமானத்தில் டிடிவி! டெல்லியிடம் சசிகலா டீல்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
T. T. V. Dhinakaran

 

 

எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்தான் என்கிறார்கள்.

 

சசிகலாவின் விடுதலையை உறுதிப்படுத்தி கொள்வதற்காக செப்டம்பர் 20ந் தேதி டெல்லி பயணம் மேற்கொண்டார் டி.டி.வி.தினகரன். அதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியின்றி தனி விமானத்தை அமர்த்துவதும், சென்னை டெல்லி போன்ற விமான நிலையங்களில் அதனை தரையிறக்குவதும் எளிதல்ல. ஆகவே டிடிவியின் டெல்லி பயணத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

  sasikala

 

 

சட்டப்படி ஜனவரி மாதம் 20ந் தேதி வாக்கில் நான்கு வருட தண்டனை முடிந்து வெளியே வரும் சசிகலாவிற்கு முன்கூட்டியே விடுதலை கிடைக்குமா என்கிற முயற்சியில் மன்னார்குடி வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளன. சசிகலாவுடன் தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோர் அவர்கள் கட்ட வேண்டிய பத்து கோடி ரூபாய் அபராதத்தை கட்டிவிட்டார்கள். சசிகலா விரைவில் விடுதலையை எதிர்பார்க்கிறார். அப்படியானால் அபராத தொகையை உடனே கட்டிவிட வேண்டியதுதானே என மன்னார்குடி வட்டாரங் களை கேட்டோம்.

 

bjp

 

"சசிகலா அபராத தொகை கட்ட வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. அதற்காக சசிகலா பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உடல்நிலை சரியில்லாத அமித்ஷாவுக்கு பதிலாக கட்சி நிர்வாக பொறுப்பை ஏற்றிருக்கும் ராஜ்நாத் சிங், சீனாவுடனான எல்லை மோதலுக்கு நடுவில் சசிகலா விவகாரத்தையும் பேசி வருகிறார். சசி விடுதலைக்குப் பிறகு எப்படி நடந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் அடுத்த மூன்று, நான்கு வருடம் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும், பா.ஜ.க. கட்சிக்கு தேர்தல் நிதியாக எவ்வளவு கொடுக்க வேண்டும் என பல விஷயங்கள் சசிகலா, ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு வருகிறது.

 

இதில் ராஜ்நாத் சிங், சீன எல்லை விவகாரத்தில் பயங்கர பிஸியாக இருப்பதால், சில தாமதங்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் சசிகலா அபராதத் தொகை கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. எப்படியும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் சிறையை விட்டு வெளியேவர அனைத்து முயற்சிகளையும் சசிகலா செய்து கொண்டிருக்கிறார் என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.

 

இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தனது சொந்த சகோதரன் திவாகரன் ஆகியோரிடம் சிறையில் இருந்தபடியே செல்போனில் சசிகலா பேசி வருகிறார். அதற்கேற்ற திரைமறைவு அரசியல் நகர்வுகள் அ.தி.மு.க.வில் நடைபெற ஆரம்பித்துவிட்டன.

 

admk

 

சசிகலாவிடம் முதலில் சமாதானமாகி நல்ல பெயரை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் மீது தனது கனிவான பார்வையை சசிகலா திருப்பினார். அந்த நேரத்தில் எடப்பாடி தனக்கு வேண்டிய வருமான வரித்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு போயஸ்கார்டனில் சசிகலா கட்டி வரும் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்ட வைத்தார். இதனால் டென்ஷனான சசிகலா ராஜ்நாத்சிங்கிடம் இதுகுறித்து ஒரு தொழிலதிபர் மூலமாக பேசினார். அந்த சந்திப்பிற்கு பிறகு ராஜ்நாத்சிங், சசிகலா பேச்சுவார்த்தையில் வருமான வரித்துறை நடவடிக்கைகள், சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் என அனைத்தும் இடம்பெற்றன.

 

admk

 

நிலைமை தனக்கெதிராக போவதைக் கண்ட எடப்பாடி கொங்குமண்டலத்தை ஜெ. ஆட்சியில் கவனித்து வந்த ராவணன் மூலம் சசிகலா தரப்பிடம் பேச ஆரம்பித்தார். ராவணன் சொன்னபடி ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தவர்களான இன்றைய அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் வேலுமணியும் எடப்பாடிக்காக பேச ஆரம்பித்தார்கள். பழைய பாசத்தோடும் விசு வாசத்தோடும் எடப்பாடி இந்த பேச்சுவார்த்தையை அணுகினார் என்கிறார்கள்.

 

admk

 

இந்நிலையில், எடப்பாடிக்கு டெல்லியில் இருந்து வந்த ஒரு மெசேஜ் அவரை டென்ஷனாக்கிவிட்டது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேர், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த வழக்கை டெல்லி முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துவிட்டது. அதில் வரக்கூடிய தீர்ப்பு பற்றிய தாக்கம்தான் எடப்பாடியை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

 

எல்லா குழப்பத்திற்கும் காரணம் ஓ.பி.எஸ்.தான் என டென்ஷனோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி கண் முன்பே, "அம்மாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ். வாழ்க'' என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் குரல் எழுப்ப, கட்டுக்கடங்காமல் கோபத்துடன் கூட்டத்திற்கு வந்தார். கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., "நான் வழிகாட்டு குழுவை அமைக்க சொன்னேன். கட்சியில் இருக்கக்கூடிய சீனியர்கள், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகி கட்சி பணி ஆற்ற வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். வழிகாட்டும் குழுவை எடப்பாடி அமைக்கவில்லை'' என்றார். உடனே எழுந்து பேசிய ஜெ.சி.டி.பிரபாகரன், "ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கு முன்பு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் தங்கமணி, உடனடியாக வழிகாட்டுக்குழுவை அமைப்போம் என்று சொன்னார். அதன்படி நடக்கவில்லை'' என்றார்.

 

admk

 

இதனால் ஆவேசமடைந்த தங்கமணி, "அப்படியொன்றும் பேசவில்லை. கட்சியில் பல சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரை வழிகாட்டுதல் குழு உறுப்பினராக போடுவது என்பதில் சிக்கல் நிலவுகிறது. நாங்கள் கொங்கு மண்டலத்தில் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறோம்'' என்றார். அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு யார் வேண்டுமென்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொள்ளலாம். கொங்கு மண்டலத்தில் 61 தொகுதிகள்தான் உள்ளன. அதை வைத்து தமிழகத்தில் யாரும் ஆட்சி நடத்திவிட முடியாது'' என்றார்.

 

admk

 

இதற்கிடையே சி.வி.சண்முகம், இந்த ஆட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தனக்கே உரிய பாணியில் குரல் எழுப்பினார். சசிகலாவை எதிர்த்து ஏதாவது பேசுங்கள் என ஜெயக்குமாரை சிலர் தூண்டி விட்டனர். அதை கேட்டு கொந்தளித்த ஜெயக்குமார், "நீங்களெல்லாம் ராசியாடுவீங்க. கடைசியில நான்தான் சசிகலாவுக்கு விரோதியாடுவேன்'' என கூட்டத்தைவிட்டே வெளியேறினார். இந்தக் கூட்டத்திற்கு பல அமைச்சர்கள் வரவில்லை. சென்னையில் இருந்தாலும் பல மாவட்டச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 

கூட்டத்தின் இறுதியில் எடப்பாடி பேசினார். பன்னீர்செல்வத்தை உட்காரவைத்துக்கொண்டு அனைவர் முன்னிலையிலும் பன்னீர்செல்வத்தின் மீது எடப்பாடி பாயத் தொடங்கினார். "இவர் சொல்லித்தான் சசிகலாவை நான் எதிர்த்தேன். இல்லையென்றால் சசிகலா ஆதரவோடு முதலமைச்சரான நான், அப்படியே தொடர்ந்திருப்பேன்.

 

22 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 9 தொகுதியில்தான் நாம் ஜெயிச்சோம். அதனால அன்னைக்கு எனக்கு எதிராக ஓட்டுப்போட்ட இவரோட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரோட ஆதரவில்தான் ஆட்சி நிற்கிறது. அந்த 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் நமக்கு எதிராக ஒரு தீர்ப்பு வந்தால் நம்ம ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும். இன்னைக்கு இவர், சின்னமாவிடம் முதல் ஆளா போய் சரணடைந்திருக்கிறார். இவருக்கு கட்சியில் என்ன ஆதரவு இருக்கிறது. 80 சதவிகிதம் பேர் என்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சுற்றித்திரிந்து செலவு செய்து, கஷ்டப்பட்டு இந்த ஆதரவை நான் திரட்டியிருக்கிறேன். என்னை ஓ.பி.எஸ்.ஸால் ஒன்றும் செய்து விட முடியாது'' என ஓ.பி.எஸ்ஸை உட்கார வைத்துக்கொண்டே எடப்பாடி எகிறியதால் டென்சன் அடைந்த ஓ.பி.எஸ். கூட்டத்தில் இருந்து வெளியேறி தனி அறைக்கு சென்றார்.

 

admk

 

சீனியரான ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி அவமானப்படுத்தியதைக் கண்ட சீனியர் தலைவர்கள் நொந்துபோனார்கள். சீனியரான திண்டுக்கல் சீனிவாசன் எழுந்து, எடப்பாடிக்கு எதிராக "என்னப்பா நீங்க சீனியர் தலைவர்களையே அவமானப்படுத்துறீங்க'' என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

 

இந்த மோதலைத் தொடர்ந்து எடப்பாடி வீட்டில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அவருக்கு போன் போட்ட கே.பி.முனுசாமி, "என்னப்பா, கூட்டத்துல வன்னியருக்கு ஆதரவா பேசுனீங்க. இப்ப எடப்பாடி கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கீங்க.. சமுதாயத்தின் ஆதரவு தேவையில்லையா என கேள்வி எழுப்பினார் என்கிறது அதிமுக வட்டாரம்.

 

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி, தங்களுக்கு கட்சிக்குள் ரீ-என்ட்ரிக்கான வாய்ப்பை உருவாக்கும் என நினைக்கிறது ரிலீசுக்கு தீவிரமாக முயற்சிக்கும் சசிகலா தரப்பு.

 

-தாமோதரன் பிரகாஷ், மகேஷ்

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.