Skip to main content

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மேலும் ஒரு புதிய வீடியோ! எடப்பாடி அதிர்ச்சி!  

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

பொள்ளாச்சி நகரத்திலிருந்து அம்புராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை தேசியப் புலிகள் சரணாலயம் வழியாக டாப் ஸ்லிப் எனப்படும் மலைஉச்சியை நோக்கிச் செல்லும் சாலை ஒன்று உள்ளது. இயற்கை எழில் மிகுந்த பொள்ளாச்சியை தொட்டபடி மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் ஆழியாரை அணைத்தவாறு அமைந்துள்ள இந்தச் சாலை இயற்கை அழகுமிக்கது.

 

admk



இங்கு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு கோட்டூர் மலையடிவாரம், பெரியபோது, வாழைக் கொம்பு நாகூர், அப்பே கவுண்டன்புதூர், மச்சநாயக்கன் பாளையம், செம்மனாம்பேரி, சேத்து மடை, ஆழியார், ஆனைமலை ஆகிய ஊர்களில் தங்கும் விடுதிகள் இயங்கிவருகின்றன. பொதுவாக தங்கும் விடுதிகளை அமைக்க பதிமூன்று அரசுத் துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும். காவல்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை மலை மேம்பாட்டுக் கழகம், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகளை யாரும் நடத்த முடியாது.
 

subbiah



இந்தத் துறைககளின் அனுமதி எதுவும் பெறாமல் வனத்துறை, பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஆற்றுப்படுகை ஆகியவற்றை ஆக்கிரமித்து 42 விடுதிகள் செயல்படுகின்றன என 2004-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து மூடுவது உட்பட தக்க நட வடிக்கை எடுக்குமாறு நீதியரசர் வாசுகி தீர்ப்பளித்தார். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட காமவக்கிரங்களில் இந்த விடுதிகளுக்கும் பங்கு உண்டு என புகார் வலுவாக எழுந்தது. அந்தக் கொடூரங்கள் வீடியோ ஆதாரமாக வெளிவந்த பிறகு 04-05-2019 அன்று 150 கல்லூரி மாணவர்கள் சேத்துமடை பகுதியில் உள்ள, சட்டவிரோதமாக இயங்கிய விடுதியில் கோகெய்ன் என்கிற போதைப் பொருளை உபயோகித்தார்கள். அப்பொழுது நடந்த தகராறில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாணவர் உட்பட பலரை காவல்துறை கைது செய்தது. விடுதி மூடப்பட்டது.

 

pollachi issues



பொள்ளாச்சி வழக்கை விசாரித்துவரும சி.பி.ஐ.யிடம் திருநாவுக்கரசு போன்ற பொள்ளாச்சி காமக்கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர்கள் "இந்த விடுதிகளை உபயோகித்தோம்' என வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். இந்த விடுதிகளை சி.பி.ஐ. கண்காணித்து வந்ததோடு, பொள்ளாச்சி சம்பவங்களோடு இந்த விடுதிகளுக்குள்ள தொடர்பையும் விசாரிக்க சி.பி.ஐ. களத்தில் இறங்கத் தயாரானது. இதையறிந்த தமிழக அரசு, கோவை கலெக்டருக்கு "இந்த சட்டவிரோத விடுதிகள் மேல் சி.பி.ஐ.க்கு முன் நடவடிக்கை எடுங்கள்' என உத்தரவு வந்ததன் அடிப்படையில் கலெக்டர் ராஜமாணிக்கம், பொள்ளாச்சி வட்டார வளர்ச்சி அதிகாரியான ரவீந்திரனை களத்தில் இறக்கினார். ரவீந்திரன் இந்த சட்ட விரோத விடுதிகளுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சமூக சேவகர் காரமடை சுப்பையாவை தொடர்புகொண்டார். இருவரும் சேர்ந்து, "மொத்தம் 42 விடுதிகள் இயங்குகின்றன' என கண்டுபிடித்தனர். ரவீந்திரன் களத்தில் இறங்கி ஆய்வு செய்த போது, முன்பு 42-ஆக இருந்த விடுதிகள் தற்போது எண்ணிக் கையில் உயர்ந்து 63-ஆக வளர்ந் துள்ளது என கண்டுபிடித்தார். அதிகாரிகளின் ஆய்வு, விடுதி உரிமையாளர்களை டென்ஷன் அடைய வைத்தது.

"சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் இந்த விடுதிகளில் புழங்குகின்றன. லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் விநியோகிக்கப்படுகிறது. எஃப்.எல்.2 என்கிற பார் லைசென்ஸ் வைத்து மதுபானம் விநியோகிக்கும் விடுதிகளின் எண்ணிக்கை மிகச்சொற்பமே. இந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த விடுதிகளை வி.ஏ.ஓ. லெவலிலேயே மூடிவிட முடியும். ஆனால் இன்று வரை இந்த விடுதிகள் மூடப்பட வில்லை. ஏன்' என பொள்ளாச்சியில் விசாரித்தோம். "எப்படி எங்கள் மீது கை வைக்க முடியும். நாங்கள் எடப்பாடியிடமே பேசிவிட்டு வந்துள்ளோம்'' என்கிறார்கள் விடுதி உரிமையாளர்ள்.


"விடுதிக்கு வந்த அதிகாரிகள் கேட்ட முதல் கேள்வி, "உங்கள் விடுதிகளுக்கு வருபவர்கள் பற்றிய சி.சி.டி.வி. பதிவுகள் உங்களிடம் உள்ளதா?' என்பதுதான். அப்போதுதான் அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டோம். பொள்ளாச்சி பகுதிகளில் நடத்தப்படும் விடுதிகள் அனைத்தும் மாவட்ட மாண்புமிகு ஒருவருக்கு மாதந்தோறும் கப்பம் கட்டுபவை. காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை என விடுதி நடத்த அனுமதி தரும் பதிமூன்று துறைகளும் எங்களிடம் மாமூல் வாங்குகின்றன. அதனால் மலைப்பகுதிக்கு வரும் வி.ஐ.பி.க்கள், போலீஸ் அதிகாரிகள், ஷூட்டிங்குக்கு வரும் நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி... எங்கள் விடுதிகளின் கேமரா பதிவுகளுக்குள் எளிதாக சிக்கிக்கொள்வார்கள். அப்படித்தான் பொள்ளாச்சி காமக்கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியான திருநாவுக்கரசுடன் பல பெண்களை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், அமைச்சர் வேலுமணியின் ரத்த சொந்தங்கள் எங்களது வீடியோ பதிவுகளில் சிக்கியுள்ளனர்.


"எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரங்கள் எப்படி நடந்தன என்கிற புதிய வீடியோ பதிவுகள் வெளிவரும்' என சாம்பிளுக்கு சில காட்சிகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்களிடம் காட்டினோம். அவர்கள் வனத்துறை மானிய கோரிக்கை நடந்த நாளில் விடுதி உரிமையாளர்கள் பதினான்கு பேர் அடங்கிய டீமை எடப்பாடியிடம் பேச சொன்னார்கள். விஷயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமாக இருந்ததால், "விடுதிகள் மீது நடவடிக்கை வேண்டாம்' என உத்தரவிடப் பட்டது'' என்கிறார்கள். சி.சி.டி.வி. என்றாலே கோட்டை வரை நடுக்கம் ஏற்படுகிறது.

 

-சிவா

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.