Skip to main content

வியர்வை மட்டுமல்ல... ரத்தத்தையும் சிந்தி தான் பா.ம.க.வை வளர்த்தெடுத்திருக்கிறோம்... நம்மை வீழ்த்தும் சதி வெல்லாது! ராமதாஸ் பேச்சு...

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

ramadoss speech

 

நம்மை அழிக்க வேண்டும் என்பதற்காக சண்டாளர்கள், சதிகாரர்கள் ஆரம்பத்திலிருந்தே சதி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் எதுவும் முடியாது. அந்தக் காலத்திலும் நடக்கவில்லை. இப்போதும் முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி எளிதாகக் கிடைத்து விடவில்லை. நாம் நமது கட்சியை வியர்வை மட்டுமல்ல... ரத்தத்தையும் சிந்தி தான் வளர்த்தெடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று பா.ம.க. சிறப்புச் செயற்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உரையாற்றினார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புச் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இணையவழியில் இன்று காலை நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

செயற்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் ஆற்றிய உரையின் விவரம்:

 

கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 125 நாட்களாக பாட்டாளி சொந்தங்களைச் சந்திக்க முடியவில்லை. அதுதான் எனக்குப் பெரும் குறையாக உள்ளது. வெகுவிரைவில் கரோனா வைரஸ் ஒழியும். அதன்பிறகு உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

 

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் முடிவடைந்து 32 ஆவது ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால், நாம் இன்னும் இலக்கை அடைய முடியவில்லை. அந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் தீவிரமாக பங்காற்றத் தொடங்கும் போது தான் கரோனா வைரஸ் வந்து நமது பணிகளைத் தடுத்துவிட்டது. கரோனா வைரஸ் முடிவடைந்தவுடன், நாம் இதுவரை எவ்வளவு வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ, அதைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

 

நம்மை வீழ்த்தும் சதி வெல்லாது:

 

நம்மை அழிக்க வேண்டும் என்பதற்காக சண்டாளர்கள், சதிகாரர்கள் ஆரம்பத்திலிருந்தே சதி செய்து வருகின்றனர். அந்தக் காலத்திலிருந்தே நான் அத்தகையவர்களைப் பார்த்து வருகிறேன். அந்தச் சண்டாளர்களும், சதிகாரர்களும் வேறு வடிவில் வருகிறார்கள். விஷப்பாம்புகளாக வருகிறார்கள். நம்முடன் பழகி, நமது கொள்கைகளையே பேசி, நம்மையே அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் எதுவும் முடியாது. அந்தக் காலத்திலும் நடக்கவில்லை. இப்போதும் முடியாது.

 

தேசியகவி பாரதியார் அவர்கள் சுதந்திரப் பயிர் என்ற தலைப்பிலான கவிதையில், ‘‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?’’ என்று பாடியிருப்பார். பாரதியார் எப்படிச் சுதந்திரப் பயிரை வளர்த்ததாகக் கூறினாரோ, அதே போல் தான் நாமும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்திருக்கிறோம்.... வளர்த்தெடுத்திருக்கிறோம். பா.ம.க.வின் வளர்ச்சி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. நாம் நமது கட்சியை வியர்வை மட்டுமல்ல. ரத்தத்தையும் சிந்தி தான் வளர்த்தெடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

 

சுக்கா... மிளகா.... சமூகநீதி?

 

அதேபோல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘‘சுதந்திரம்’’  என்ற தலைப்பில் சிறிய கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில் ஒரு கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும். அதன் சகோதரி சுதந்திரமாகச் சுற்றி இயற்கையின் அழகை ரசிக்கும். ஆனால், கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கிளி, கூண்டை உடைத்துக் கொண்டு வெளியில் செல்ல முயலாமல், வெளியில் சுற்றும் கிளியைப் பார்த்து, ‘‘அக்கா, அக்கா’’ என்று கத்திக் கொண்டிருக்கும். அந்தக் கிளியைப் பார்த்து, ‘‘ ஏ... கிளியே, அக்கா, அக்கா என்று கத்துகிறாயே, சுக்கு,  மிளகு என்றால் உன் அக்கா எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுப்பாள். ஆனால், சுதந்திரத்தை அவ்வாறு தர முடியாது அல்லவா?’’ என்று கேட்டுச் சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் அந்தக் கவிதையை அவர் படைத்திருப்பார்.

 

அந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும்,‘‘அக்கா அக்கா என்று நீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச்  சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’’ என்ற வரிகளில் இருந்து தான் ஊக்கம் பெற்று , ‘‘சுக்கா... மிளாகா.... சமூக நீதி?’‘ என்ற தலைப்பில் முகநூலில் தொடர் எழுதி வருகிறேன். நேற்று வரை 38 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். சமூகநீதிக்காக பாட்டாளி மக்கள் கட்சி அளவுக்கு பாடுபட்ட கட்சியை தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பார்க்க முடியாது.

 

சமூகநீதியில் நமக்கு இணையானவர்கள் எவரும் இல்லை என்பதால் தான், இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக இடப்பங்கீடு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். இடப்பங்கீடு என்றால் இருக்கும் 100% இடங்களை அனைவரும் பங்கிட்டுக் கொள்வது ஆகும். எங்களுக்கு யாரும் இட ஒதுக்கீட்டு வழங்கத் தேவையில்லை. இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஆட்சியில் இருந்தவர்கள் நடுவில் இருந்த நல்ல துண்டுகளை எடுத்துக் கொண்டு, ஓரத்தில் இருந்ததை மற்றவர்களுக்கு ஒதுக்கி விட்டார்கள். இந்த விஷயத்தில் நமக்குத் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வரை பல்வேறு துரோகங்கள் நமக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.

 

மா சே துங் வெற்றி வரலாறு:

 

உலக அளவில் புரட்சியாளர்கள் பலரின் வரலாறுகளை நீங்கள் படித்திருப்பீர்கள். உலகின் பெரும் புரட்சியாளராகவும், இன்றைய சீனாவை 64 ஆண்டுகளுக்கு (1954) முன் உருவாக்கியவருமான மா சே துங் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். வாழ்க்கையில் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர். 1930 ஆம் ஆண்டில் சீனாவை சியாங் கே சாக் என்பவர் ஆட்சி செய்த போது அவருக்கு எதிராக கம்யூனிசப் படைகளை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் போரைத் தாக்குபிடிக்க முடியாமல் ஒரு லட்சம் பேர் கொண்ட தமது படையுடன் மா சே துங் பின் வாங்கி ஓடினார்.

 

தமது படைகளைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் மீண்டும் போர்த்தொடுக்கவும் வசதியாக படைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் மாசேதுங் நீண்ட பயணத்தை (Long March) மேற்கொண்டார். அப்போது ஒரு லட்சம் பேரில் 36 ஆயிரம் பேர் தவிர மீதமுள்ளவர்கள் சண்டையிலும், பசி, பட்டினியிலும் சிக்கி இறந்தனர். இறுதியாக மாவோ வசம் 7,000 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் உள்ளூர் உழவர்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தனது அணிவகுப்பை மாவோ தொடங்கினார். அடுத்த சில மாதங்களில் தாம் இழந்த பகுதிகளை வென்றார். அடுத்த 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சிக்கு கீழ் வந்தது.

 

அலெக்சாண்டர் வரலாறு:

 

20 வயதில் மன்னராக பொறுப்பேற்ற மாவீரன் அலெக்சாண்டர் 32 வயதிற்குள், 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக போர் நடத்தி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான். ஆனால், பஞ்சாப் மன்னன் போரஸ் என்ற புருஷோத்தமனுடனான போரில் தோற்கும் நிலை வந்த போது, தாம் வென்ற பகுதிகளை புருஷோத்தமனிடம் கொடுத்து விட்டு வேறு நாட்டுக்குச் சென்றான். 32 வயதில் உலகத்தையே அலெக்சாண்டர் வென்றார் என்பது தான் வரலாறு.

 

இதிலிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், முன்னேறு... முன்னேறு... இலக்கை அடை.... இலக்கை அடை என்பது தான். அலெக்சாண்டர் 32 ஆண்டுகளில் உலகை வென்றார். நாம் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இலக்கை அடைய இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு இணையாக வேறு எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது. அனைத்து விஷயங்களிலும் அரசுக்கு நாம் ஆலோசனைகளை கூறி வருகிறோம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படுகின்றன. நான் போராளி என்பது உங்களுக்குத் தெரியும். நாம் போராடி பல உரிமைகளைப் பெற்றுள்ளோம். ஆனால், நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் போராடிக் கொண்டும், ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் இருப்பது? நாம் மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டாமா? மக்களுக்கு என்னென்ன நன்மை செய்ய வேண்டும், என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதைச் செய்ய நாம் ஆட்சிக்கு வர வேண்டும்.

 

லீ குவான் யூவை விடச் சிறந்த ஆட்சி:

 

http://onelink.to/nknapp

 

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ தான் குடிசைகளாக இருந்த சிங்கப்பூரை இன்றைய நவீன சிங்கப்பூராக மாற்றினார். தமிழ்நாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவை விடச் சிறந்த ஆட்சியைத் தருவார். தமிழகத்தில் அவரைவிடச் சிறந்த ஆட்சியை யாராலும் தர முடியாது. தமிழகத்தில் இன்னொரு கட்சித் தலைவர் இருக்கிறார். எப்படியாவது கோட்டைக்குள் ஓடிச் சென்றாவது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்று துடிக்கிறார். எனக்கு என்ன ஆசை என்றால், அவரையும் மருத்துவர் அன்புமணி இராமதாசையும் ஒரே மேடையில் வைத்து ஏதேனும் ஒரு பொருள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதற்கு ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், பலமுறை அழைப்பு விடுத்தும் கூட அந்தத் தலைவர் விவாதத்திற்குத் தயாராக இல்லை.

 

நம்மிடம் இருக்கும் அளவுக்கு தமிழக மக்களுக்கான திட்டங்கள் வேறு கட்சிகளிடம் இல்லை. நமது தொண்டர்கள் அளவுக்கு உழைக்க வேறு எந்த கட்சியிலும் தொண்டர்கள் இல்லை. நாம் இப்போது உழைப்பதைப் போன்று தொடர்ந்து உழைக்க வேண்டும். இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்.

 

இவ்வாறு உரையாற்றினார்.

 

 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.