Skip to main content

பணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா?

Published on 21/02/2019 | Edited on 21/02/2019
suny


இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்று பலர் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர்களிடம் கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிகை நிறுவனம் நடத்திய புலனாய்வு செம வைரலாகியுள்ளது. அந்த புலனாய்விற்கு பெயர்  ‘ஆபரேஷன் கரோக்கி’. இந்த ஆபரேஷனின் நோக்கம் என்ன என்றால்,  ‘பாலிவுட் நடிகர்களிடம், நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் நாங்கள் சொல்லும் கட்சிக்கு உங்களின் சமூக வலைதளத்தில் மறைமுகமாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்’ என்பது ஆகும். இது லீகல் கிடையாது, இல்லீகலாக பிரச்சாரம் செய்யப்போகிறீர்கள். கட்சிக்கு ஆதரவாக பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் பணமாக உங்களிடம் தரப்படும். செக், பேங்க் ட்ரேன்ஸ்ஃபர் போன்று எந்த சிக்கலும் இல்லை என்று அந்த வீடியோவில் பார்க்கிற பிரபலங்களிடம் சொல்கிறார்கள். 36 பிரபலங்கள் இவர்கள் சொல்லும் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆபரேஷன் கரோக்கி 60 நிமிட ஆவணப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆபரேஷனில் நடிகர்கள் மட்டுமில்லை பாலிவுட்டைச் சேர்ந்த பின்னணி பாடகர்கள், காமெடியன்கள், கதாபாத்திர நடிகர்கள் என்று பாலிவுட்டில் இருக்கும் பல துறை பிரபலங்களிடம் சென்று இவ்வாறு கேட்கிறார்கள். லட்சக்கணக்கான பொதுமக்கள் சமூக வலைதளத்தில்  இந்த 36 பிரபலங்களையும் பின் தொடர்கிறார்கள். அந்த 36 பிரபலங்களின் பெயர், அபிஜீத் பட்டாச்சாரியா, கைலாஷ் கெர், மிகா சிங், பாபா செகல், ஜாக்கி ஷராஃப், சக்தி கபூர், விவேக் ஓபராய், சோனு சுத், அமீஷா படேல், மஹிமா சௌத்ரி, ஷெரயாஸ் தல்பாதி, புனித் இஷார், சுரேந்தர பால், பங்கஜ் தீர், நிகிதின் தீர், டிஸ்கா சோப்ரா, தீப்ஸிகா நாக்பல், அகிலேந்திர மிஷ்ரா, ரோஹித் ராய், ராஹுல் பட், சலிம் ஜெய்தி, ராக்கி சாவந்த், அமன் வெர்மா, ஹிதேன் தேஜ்வானி, கௌரி பிரதான், ஈவ்லின் ஷர்மா, மினிஷா லம்பா, கொயினா மித்ரா, பூனம் பாண்டே, சன்னி லியோன், ராஜு ஸ்ரீவஸ்தாவா, சுனில் பால், ராஜ்பால் யாதவ், உப்சனா சிங், க்ருஷ்ணா அபிஷேக், விஜய் இஷ்வர்லால் பவார், கணேஷ் ஆச்சர்யா, சம்பவானா செத்.

இந்த ஆபரேஷனின்போது, நான் பணமும் வாங்கமாட்டேன், யாருக்கும் ஆதரவு தரவும் மாட்டேன் என்று சொல்லியவர்கள் வித்யா பாலன், ஆர்சத் வர்ஸி, ராஜா முராத், சௌம்யா டான்டன் ஆகிய நான்கு பேர் மட்டும்தான், இவர்கள் மட்டுமே இந்த ஆப்பரேஷனிலிருந்து சிக்காமல் தப்பித்தவர்கள்.
 

operation


சிக்கிய பிரபலங்கள் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஆதரிக்க ஒரு சமூக வலைதள பதிவுக்கு லட்சத்திற்கு மேல் பணம் கேட்டிருக்கின்றனர். சிலர் எட்டு மாதம் வரை நான் தினசரி பதிவிட 2 கோடி வேண்டும் என்று காண்ட்ராக்டே போடும் அளவிற்கு கேட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அந்த ஆவணப் படத்தில் பதிவாகி இருக்கிறது. அதுவும் பணமாகவே வேண்டும் என்கின்றனர். அப்படி என்றால் அவை அனைத்தும் கருப்பு பணமாகவே பதுக்கப்படும். அந்த வீடியோவில் சில பிரபலங்கள் பேசியது பின்வருமாறு.

சன்னி லியோன் - நான் சமூக வலைதளத்தில் மறைமுக பிரச்சாரத்திற்கு ஒப்புக்கொண்டால் என் கணவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேரம் பேசுகிறார்.


சோனு சுத் - எட்டு மாத காண்ட்ராக்ட்டுக்கு எனக்கு 20 கோடி வேண்டும்


கைலாஷ் கெர்-  நீங்கள் என் டீமுடன் பேசுங்கள், எனக்கு இது ஓக்கேதான்.


ராக்கி சாவந்த் - கடந்த முறை நான் ராஜ்நாத் ஜீக்காக வேலை செய்தேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


இதுபோல பலர் சமூக வலைதளத்தில் கட்சிகளுக்கு காசு வாங்கிகொண்டு மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தயாராகவே இருக்கின்றனர். அதற்கு கொள்கை, நலன் எதையும் பொருட்டாகவே அவர்கள் யோசிக்கவில்லை, பணம் தாருங்கள் பிரச்சாரம் செய்கிறேன் என்கிற நிலையில்தான் பிரபலங்கள் இருக்கிறார்கள். சில பிரபலங்களுக்கும் இதில் விதிவிலக்கு உண்டு.