Skip to main content

"ஸ்டாலின் மயங்குவார் என்று எதிர்பார்க்கிறார்;ஆனால் அவர் மயங்க மாட்டார்" - நாஞ்சில் சம்பத்

Published on 03/09/2021 | Edited on 08/09/2021

 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வியப்பான அரசியல்  கருத்துக்களைப் போகிற போக்கில் அதிமுக முக்கிய தலைவர்கள் பேசிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தன்னுடைய தந்தை கலைஞரின் தீவிர ஆதரவாளர் என்று கூறி அவையை ஆச்சரியப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் அவையில் பேசிய மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், தற்போது அவை நடைபெறும் முறை என்பது நான் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் பார்க்காத ஒன்று, மிக நேர்த்தியாகச் சபை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தற்போது பேசுபொருளாக உள்ள நிலையில் நாம் இதுதொடர்பாக திராவிட இயக்க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


தமிழக அரசியலை நீண்ட நெடும் காலமாகப் பார்த்து வருபவர் நீங்கள் என்ற அடிப்படையில் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?


தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் முடியாத அளவிற்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் நொண்டிக் கிடக்கின்றது. அப்படியான ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் வந்துள்ளது. காமராஜர் கூட ஆறு மாதம் காலம் அவகாசம் கொடுப்போம் என்று அண்ணா ஆட்சிக்கு வந்த போது கூறினார். ஆறு மாதத்திற்கு பிறகு கடுமையான விமர்சனங்களை அண்ணா மீது காமராஜர் வைத்தார். இன்றைக்கு யாரும் எந்த விமர்சனமும் வைக்க முடியாத அளவிற்கு ஒரு அற்புதமான ஆட்சியை அருமை அண்ணன் ஸ்டாலின் செய்து வருகிறார். துறை தோறும் ஆய்வு செய்து தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார். அனைவரும் மலைத்து போகிற அளவுக்கு தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி இருந்து வருகிறது. ஜனநாயகம் தங்க சிம்மாசனம் போட்டு தமிழகத்தில் தற்போது அமர்ந்துள்ளது. அடுத்தவர்களின் கருத்தை மதிக்கிறார். அலை பேசிகளுக்கு பதில் அளிக்கிறார். விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கையாக தளபதி இருக்கிறார்.  இந்தியாவில் இருக்கின்ற முதல்வர்களுக்கெல்லாம் மூலவராக ஸ்டாலின் முன்னேறி கொண்டு இருக்கிறார். அதிமுக அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 


வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கலந்துகொண்ட ஓபிஎஸ் ஒரு பாடலை பதிவு செய்திருந்தார். நதியினிலே வெள்ளம், கரையினிலே நெருப்பு, இடையில் இறைவனின் சிரிப்பு என்று தெரிவித்துள்ளார். இதனை எப்படி புரிந்துகொள்வது? 


கரையினில் நெருப்பு என்றால் மோடி, நதியினில் வெள்ளம் என்றால் சசிகலா, இறைவன் சிரித்துக்கொண்டு இருக்கிறான். இதுதான் தன்னுடைய சூழ்நிலை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முதல்வராக இருந்தவர் துணை முதல்வர் பதவிக்கு ஒத்துக்கொள்கிறார், எதிர்க்கட்சி தலைவராகக் கூட ஆகாமல் அதிலும் துணைத் தலைவர் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். தர்ம யுத்தம் செய்து எதிர்த்த சசிகலாவை, ஏதாவது ஒருவழியில் அவரை தற்போது நியாயப்படுத்த முடியுமா என்று யோசிக்கிறார். கட்சி ரீதியாக அதிமுகவில் 70 மாவட்டங்கள் இருக்கிறது. அதில் 20 மாவட்டங்களில் மட்டும் தான் சசிகலாவை எதிர்த்து தீர்மானம் போட்டுள்ளார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர் செல்வத்தின் மாவட்டத்தில் இன்னும் சசிகலாவை எதிர்த்து தீர்மானம் போடவில்லை. பல தென் மாவட்டங்களில் இன்னும் போடவில்லை. அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற மாவட்டங்களில் யாரும் தீர்மானம் போடக்கூடாது என்று கூறியிருக்கிறார், அதனால் பல மாவட்டங்களில் இதுவரை சசிகலாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது சசிகலாவின் கண் ஜாடைக்காக காத்திருக்கிறார். எனக்கு தெரிந்து அரசியல் வரலாற்றில் ஒரு ஹூரோ, ஜூரோ ஆன கதை ஓபிஎஸ்ஸின் கதை!


சட்டப்பேரவையில் பேசும் போது கலைஞருடைய தீவிர ரசிகர் என்னுடைய தந்தை.  அவரின் படங்களின் வசனங்களை என்னுடைய தந்தை எப்போதுமே கைகளில் வைத்திருப்பார் என்று தெரிவித்திருந்தார். கலைஞர் இறந்த போது இடம் தர மறுத்த நிலையில் இந்த மாதிரியான கருத்தை எப்படி புரிந்துகொள்வது? 


இவர் இப்படி சொல்வதை கேட்டு கல்லறையில் ஜெயலலிதா புரண்டு படுத்திருப்பார். இது அத்தனையும் பொய், இட்டுக்கட்டிய பொய். திமுக உறுப்பினர் பரந்தாமன், பன்னீர்செல்வம் வீட்டு வசதி அமைச்சராக இருந்த போது கட்டப்பட்ட கட்டிடங்கள் தொட்டால் சிணுக்கியை போல் தொட்டாலே விழுகிறது. எனவே இவர் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அது மட்டுமில்லாமல் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார். வீட்டுவசதி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தனக்கென்று ஒதுக்கிக்கொண்ட ஒரு பொருளாதாரக் குற்றவாளி பன்னீர் செல்வம். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவுடன் பன்னீர்செல்வத்தின் அப்பா பராசக்தி படிக்கிறார். இதற்கெல்லாம் அண்ணன் ஸ்டாலின் மயங்குவார் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் மயங்க மாட்டார். அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதுபோல தப்பு செய்த அவர் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். 

 

 

Next Story

"ஆறு மாத சஸ்பெண்ட் தப்புக்கு தண்டனையா...? கே.டி. ராகவனை அண்ணாமலை எப்போது சேர்த்துக்கொள்ளப் போகிறார்..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

ரகத

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக  அறிக்கை வெளியிட்டு இருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எப்போதும் பெண்களை மதிக்கும் கட்சி என்றும், அவர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.

 

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, " இவர் என்ன குரல் கொடுக்கப் போகிறார். தப்பு செஞ்சவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வேறு சொல்கிறீர்கள், யார் எதற்காகப் பாராட்டுகிறார்கள்.

 

சரியான முடிவை அண்ணாமலை என்ன எடுத்துவிட்டார், கே.டி.ராகவனை நாளைக்குக் கட்சியில் சேர்த்துப்பாரா அண்ணாமலை? அவருக்கும் இன்னும் ஆறு மாசம் முடியவில்லையா? அண்ணாமலைக்கு தன்பயம் அதிகம் வந்துவிட்டது. தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் இயங்குவதைக் கூட அவர் விரும்பவில்லை.  பாஜகவில் வேறு யாரும் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அவரை வாட்டி வதைக்கின்றது. காயத்ரி, சூர்யா ஆகிய இருவரும் முருகனுடைய ஆதரவாளர். முருகனுக்கு பாஜக அலுவலகத்தில் தனி அறை போட்டாச்சு. அண்ணாமலைக்கு எப்போது ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.

 

இந்தப் பேட்டியை எடுத்துக்கொண்டு நீங்கள் வீடு போய்ச் சேருவதற்குள் அண்ணாமலையில் பதவியைப் பறித்தால் கூட ஆச்சரியமில்லை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற தகவல் பாஜகவில் இருந்தே கசிந்துகொண்டு இருக்கிறது. அண்ணாமலை குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராகச் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள், அப்படி என்றால் அவர் மோகன் பகவத்துக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும், கேள்வி கேட்க வேண்டும். அதை எல்லாம் அவர் ஒரு போதும் செய்யமாட்டார். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

 

அதன் தொடர்ச்சியாக அவருக்கு வேண்டாத நபர்களுக்கு எதிராக சில வாய்ப்புக்கள் அமையும் போது அவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளில் இது ஒன்றும் புதிதல்ல. பல மாநில தலைவர்களைத் தேசிய கட்சிகள் பார்த்துள்ளது. எனவே இந்தப் பதவி என்பது அவருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனவே அதை வைத்து சில அரசியல் ஆட்டங்களை ஆடலாம் என்று கூட அவர் முயற்சி எடுக்கலாம். ஆனால் அவருக்கே எதிராகக் கள சூழ்நிலை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே அவரின் அரசியல் விளையாட்டுக்கள் நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. விரைவில் அவர் பதவிப் பறிக்கப்படக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அவரின் இந்தப் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்றார்.

 

 

Next Story

"ஆபாசமா பேசிட்டு அக்கா தம்பியா...? இதுக்கு ஆறு மாசம் சஸ்பெண்ட் ஒருகேடு; இப்படி ஒரு கட்சி இந்தியாவிலேயே இல்லை..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

sdf

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

பாஜகவில் கடந்த சில நாட்களாக ஆடியோ சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிலரை கட்சியின் தலைமை நீக்கியுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

நான் தவறான பலான படங்களையோ அல்லது அதுதொடர்பான ஆடியோவையோ எப்போதும் கேட்பதில்லை. இதில் என்ன பெரிய நடவடிக்கை எடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. கட்சியில் தவறு செய்தால் அதிகபட்சம் கட்சியை விட்டு நீக்குவார்கள். அதுதொடர்பாக விசாரிக்க சில சமயம் குழு கூட அமைப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஆறு மாதம் நீக்குவது, மூன்று மாசம் நீக்குவது என்பதை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. ஆறு மாசத்துக்கு அப்புறம் கட்சியில் சேர்த்துக்கொள்வார்களா?  இது எல்லாம் ஒரு தண்டனையா என்று எனக்குத் தெரியவில்லை. 

 

இப்போ அக்கா தம்பி ஆகிட்டாங்கன்னு நீங்கள் சொல்றீங்க, இதில் நான் என்ன சொல்ல இருக்கிறது. பாஜகவோட தரம் என்ன என்று தற்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கும். இந்த மாதிரி ஒரு கேவலமான கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் கூட கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்யவா அவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்த மாதரி ஆட்களை எல்லாம் கட்சியில் இணைத்தால் அவர்கள் என்ன திருக்குறளும், திருவாசகமுமா பேசுவார்கள். 

 

இந்த மாதிரிதான் அநாகரிகமாகப் பேசுவார்கள், அடுத்தவர்களைச் சீண்டுவார்கள்,பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள். ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் கட்சியில் சேர்த்துவிட்டுத் தவறு செய்தவுடன் நாங்கள் நீக்கிவிட்டோம் என்பதெல்லாம் யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. இது ரொம்ப நாளைக்கு நடக்காது. மக்கள் முன் எளிதில் அம்பலப்பட்டுப் போவார்கள். பாஜகவின் கொள்கை கோட்பாடு பிடித்திருக்கிறது என்று கூறி இதுவரை யாராவது கட்சியில் சேர்ந்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கோட்பாடு கொள்கை என்று அக்கட்சிக்கு இதுவரை எதாவது இருக்கிறதா, ஏதோ கட்சி நடத்துகிறார்கள், அடாவடி செய்யும் நான்கு பேர் கட்சியில் இணைவார்கள். அவர்கள் கையும் களவுமாக அகப்படும்போது அங்கிருந்து வேறு இடத்திற்கு மாறுவார்கள். 


தற்போது எதற்காக பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். கு.க. செல்வம் எதற்காக அங்கிருந்து வெளியேறினார். மதுரை சரவணன் எதற்காகக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சியிலிருந்து அனைவரும் வெளியேறுவார்கள் என்பது மட்டும் நிஜம். பிரச்சாரத்தின் போது வெறும் நாற்காலிகளைப் பார்த்து எப்படி பரப்புரை செய்வார்களோ அதைப்போல வெறும் கட்சி பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்திக்கும் காலம் மிக விரைவில் வரும். வட நாட்டு மக்களை ஏமாற்றுவதைப் போல் தமிழக மக்களை இவர்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அதில் நிச்சயம் இவர்களுக்குத் தோல்விதான் கிடைக்கும்.