Skip to main content

இது என்ன அமித்ஷா வீட்டு சொத்தா... அதிர்ந்து போன மோடி, அமித்ஷா... விரைவில் குடியுரிமை சட்ட திருத்த மாற்றம்?

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து பல இந்துத்வா சட்டங்களை இந்தியாவில் கொண்டு வரலாம் என நினைத்திருந்த மோடி மற்றும் அமித்ஷா கூட்டணி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எழுந்த எதிர்ப்பலையைப் பார்த்து "இடி கேட்ட நாகம் போல' அரண்டு போயிருக்கிறது என்கிறார்கள், டெல்லி பா.ஜ.க. தலைமையைச் சேர்ந்தவர்கள்.

 

bjp



"குடியுரிமை சட்டத்திருத்தம் இந்துக்களைப் பாதுகாக்கும் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக அமையும் இந்த சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள். கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ள மேலை நாடுகள், இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஆகியோர் ஆதரிப்பார்கள்'' என ஆர்.எஸ்.எஸ். கணக்குப் போட்டது. இந்த சட்டத்தை இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஆதரித்துவிட்டால் அடுத்தகட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரலாம் என ஆர்.எஸ்.எஸ். திட்டம் போட்டது. இருபது கோடி இசுலாமியர்கள் உள்ள இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான இந்துக்களை இந்துத்வா பக்கம் திருப்பி விட்டால் பா.ஜ.க. நிரந்த ஆளுங்கட்சியாகிவிடும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கணக்கில் உள்ள உள்கணக்கு.

 

mamtha



குடியுரிமை சட்டத் திருத்தம் பாராளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றும்வரை ஆர்.எஸ்.எஸ். + பா.ஜ.க. வின் இந்தக் கணக்கு சரியாகவே வேலை செய்தது. ஒரிசாவின் பிஜு ஜனதாதளம், பீகாரின் ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை ஆதரித்துதான் வாக்களித்தன. தமிழகத்தின் அ.தி.மு.க., மராட்டியத்தின் சிவசேனா ஆகிய கட்சிகளும் ஆதரித்தன. இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சியும் இந்த சட்டத்தை தற்பொழுது ஆதரிக்க தயாராக இல்லை. பிஜு ஜனதாதளமும் ஐக்கிய ஜனதா தளமும் "நாங்கள் இந்த சட் டத்தை ஆதரிக்கமாட்டோம்' என இப்போது வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன.


இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்ஸியை விட இந்தச் சட்டம் அதிகமான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மக்கள் வீதிக்கு வந்ததைப் பார்த்து இந்திய அரசியல் கட்சிகள் மிரண்டுபோனதன் விளைவாகத்தான் பிஜு ஜனதாதளமும் ஐக்கிய ஜனதாதளமும் எதிர்ப்பு நிலையை எடுத்தன என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.

 

 

congress



கிறிஸ்துவர்கள் இந்தச் சட்டத்தை ஆதரிப்பார்கள் என்கிற கணக்கும் பொய்யாகிப் போனது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 54 பேர்தான். கிறிஸ்துவர்களை ஆதரவாக சாட்சியம் சொல்ல வைக்கலாம் என இந்திய அரசு திட்டமிட் டது. அதற்கு அவர்கள், "பாகிஸ்தானில் சர்ச்சுகள் தாக்கப்படுகின்றன. அது உண்மைதான். ஒரிசாவில் ஒரு கிறிஸ்துவ பாதிரியாரை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். காரர் மத்திய மந்திரியாகிவிட்டார். அவர் சமஸ்கிருதத்தில் பாராளுமன்றத்தில் பேசுகிறார். எனவே இந்தியாவில் நாங்கள் தாக்கப்படுகிறோம்'' என மத்திய அரசின் சாட்சியம் அளிக்கும் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை அளிக்கிறோம் என அறிவித்ததால் மேற்கத்திய நாடுகளின் மீடியாக்கள் மவுன மாகிவிடும் என ஆர்.எஸ்.எஸ். நினைத்தது. கடந்தவாரம் முழுக்க லண்டனிலிருந்து வெளிவரும் "தி கார்டியன்', அமெரிக்காவின் "நியூ யார்க் டைம்ஸ்' போன்ற பத்திரிகைகள் நரேந்திர மோடியை "ஹிட்லர்' என வர்ணித்தன. மோடி அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கெதிரான மக்கள் போராட்டங்களை முதல்பக்கத்தில் வெளியிட்டு முகத்திரையைக் கிழித்தன.

 

dmk



இந்த சட்டத்தை எதிர்த்து உலக நாடுகளில் உள்ள இசுலாமியர்கள் சிலர் மட்டும் போராடுவார்கள் என மோடி எதிர்பார்த்ததற்கு மாறாக, லண்டனின் மையப்பகுதியில் ஈழத்தமிழர்கள் உட்பட இந்துக்கள் பலர் போராடினார்கள். "இந்தியா மதச்சார்பற்ற நாடு. இது என்ன அமித்ஷாவின் அப்பன் வீட்டு சொத்தா' என ஜாமியா மில்யா மாணவர்கள் டெல்லியில் எழுப்பிய கோஷம் லண்டனில் உள்ள இந்துக்களிடமிருந்து ஒலித்ததைக் கேட்டு இந்திய அரசு மிரண்டு போனது. இந்தியாவின் அறிவாலயங்களாக கருதப்படும் ஐ.ஐ.டி.க்கள், மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள காசி இந்து பல்கலைக் கழகம், பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகம், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் போன்ற இடங்களில் ஆவேசத்துடன் நடந்த ஆர்ப்பாட்டங்கள் இந்த சட்டத்திற்கு இந்துக்களின் ஆதரவு இல்லை என்பதையே காட்டியது. இந்தியர்கள் மகாத்மா காந்தி வழியில் மதச் சார்பற்றவர்கள் என நிரூபித்ததைப் பார்த்து அரண்டுபோனது மத்திய அரசு.


இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு இந்த சட்டத்தை எதிர்ப்பது மோடியையும் அமித்ஷாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த சட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அதை நடத்த முடியாதோ என மத்திய அரசு திகைத்துப்போயுள்ளது. "வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடிகளை பாதுகாக்க நாங்கள் அங்கே இந்தியர்கள் சொத்து வாங்க தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவோம்' எனச் சொல்லியிருக்கிறது. ஆனால் அப்படி அசாமிலும் மேற்குவங்கத்திலும் சொல்லவே முடியாது. அசாமும் மேற்குவங்க மும் போராட்டங்களின் உச்ச கட்டத்தில் இருக்கின்றன.

சுப்ரீம்கோர்ட், ஜனவரி மாதம் வரை இந்தச் சட்டம் தொடர்பான விளக்கம் கொடுக்க மத்திய அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி, போராட்டங்கள் குறையும் வகையில் சட்டத் திருத்தம் செய்யலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறது மத்திய அரசு என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். பா.ஜ.க.வின் இந்துத்வா ஆயுதம் பூமராங் ஆகியுள்ளது.

 

 

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரமாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்ப பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.