Skip to main content

எடப்பாடி போட்ட திட்டம்... கடுமையாக எதிர்த்த ஸ்டாலின்... அதிமுகவின் எல்லா திட்டத்துக்கும் செக் வைத்த திமுக!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

சட்டவிதிகளுக்குப் புறம்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிருந்த எடப்பாடி அரசுக்கு கொட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். மூன்று வருடங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் நெருக்கடியால் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது மாநில தேர்தல் ஆணையம். இதனையடுத்து, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார் ஆணையர் பழனிச்சாமி.

 

dmk



ஆனால், சமீபத்தில் பிரிக்கப்பட்ட 4 புதிய மாவட்டங்களோடு இணைந்த 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை, மகளிர்க்கான இடஒதுக்கீடு, சுழற்சி முறையிலான ரிசர்வ் வார்டுகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமலே தேர்தல் தேதி அறிவித்தது சட்ட விதிகளுக்கு முரணானது என்பதைச் சுட்டிக்காட்டி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தது தி.மு.க.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கோடு இதனையும் இணைத்து 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான முதல் அமர்வு.

 

dmk



ஊரக உள்ளாட்சிகளில் சில ஏற்பாடுகளை ஏற்கனவே ரகசியமாக செய்து வைத்திருப்பதால் தேர்தலுக்கு தடை விழுந்துவிடக்கூடாது என ஏக எதிர்பார்ப்பில் இருந்தது ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமை. விசாரணை துவங்கியதும் தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, "உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம் என சொல்லும் தேர்தல் ஆணையம், தமிழக அரசு புதிதாக உருவாக்கிய 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை சட்ட விதிகளை பூர்த்தி செய்யாமலே தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. சட்டச்சிக்கல்களை சரி செய்யாமலே எதன் அடிப்படையில் தேர்தலை நடத்துகிறார்கள் என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள உத்தரவுகளுக்கு எதிராக தேர்தலை நடத்த முன் வந்துள்ள ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்து முறையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்''’ என அழுத்தமாக வாதிட்டார்.

 

dmk



அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர்களைப் பார்த்து, "புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட் டங்களில் வார்டு வரையறை செய்தீர்களா?' என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் விதிகளுக்கு உட்பட்டு நடந்து முடிந்துள்ளன. அதனால், மாவட்ட பிரிவினைக்கும் வார்டு வரையறைக்கும் தொடர்பில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தலை ரத்து செய்ய முடியாது'' என வாதிட்டது தேர்தல் ஆணையம்.


கோபமான நீதிபதிகள், "தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது. ஆனா, நாங்கள் நினைத்தால் மொத்தமாக தள்ளிப்போட முடியும். நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் என்ன விதிகள் வகுக்கப்பட்டதோ அதன்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். குறுக்கு வழியில் தேர்தலை நடத்தக் கூடாது'' என கொட்டு வைத்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "பழைய வார்டு வரையறை பணிகளை மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்பதை ஏற்க முடியாது. பழைய நடைமுறையே தொடரும் எனில் எதற்காக மாவட்டங்களை பிரித்தீர்கள்? மூன்று மாவட்டங்களுக்கு ஒரே ஒரு மாவட்ட பஞ்சாயத்து என்பதை எப்படி ஏற்க முடியும்? வார்டு வரையறையை முடிக்காமல் தேர்தலை நடத்தினால் புதிய மாவட்டங்களில் குழப்பம் வராதா? பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள ஊராட்சிகள் பழைய மாவட்டங்களில் இருக்குமா? புதிய மாவட்டங்களில் இருக்குமா? விதிகளை முறையாகப் பின்பற்றாததால் 9 மாவட்டங்களிலும் தேர்தலை தள்ளி வைக்கலாமா?'' என கோபமாக அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பினர். இதற்கு முறையான பதிலை சொல்லாமல் தவித்தது ஆணையம்.


இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹத்கி, "வார்டுகள் பிரிக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள்''’ என கேட்டுக் கொண்டார். இதனை எதிர்க்கும் வகையில், "குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தள்ளி வைத்தால் குழப்பம் வரும். தமிழகம் முழுவதும் தேர்தலை மொத்தமாக தள்ளி வையுங்கள்'' என வலியுறுத்தினர் தி.மு.க. வழக்கறிஞர்கள்.

இந்த நிலையில், "9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைப்பதில் தமிழக அரசின் கருத்தைக்கேட்டு மதியம் 2 மணிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுங்கள்' என ஆணையத்துக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதனையடுத்து முதல்வர் எடப்பாடியிடம் கலந்தாலோசித்தார் ஆணையர் பழனிச்சாமி.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "தேர்தலை தள்ளிவைக்க அரசு நாடகமாடுவதாக நீதிபதிகள் கருதுகிறார்கள். வார்டு வரையறை, இடஒதுக்கீடு தொடர்பாக ஆணையம் வைக்கும் கருத்துகளை அவர்கள் ஏற்பதாக தெரியவில்லை. விதிகளை பின்பற்றவில்லை என நம்புகிறார்கள். அதனால், 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க ஒப்புக்கொள்வதுதான் சரியாக இருக்கும் என முதல்வர் எடப்பாடியிடம் விவரித்தார் ஆணையர் பழனிச்சாமி. அதனை எடப்பாடி ஏற்றுக்கொள்ள, 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்கலாம் எனவும் மீதியுள்ள மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது''’ என்கிறது அதிகாரிகள் தரப்பு.

இதற்கிடையே மறைமுக தேர்தல், கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் என்கிற எடப்பாடி அரசின் திட்டங்கள் குறித்து தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டவர்களோடு சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அந்த ஆலோசனை குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. மேலிட தொடர்பாளர்கள், "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருசம் இருந்தாலும் அடுத்த 6 மாசத்துக்குள்ளே தேர்தல் வரலாம் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் இதுநாள் வரையில் தலைமையிடம் பேசும்போது எங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தோம். ஆனால், நீதிமன்றத்தின் நெருக்கடியால் தேர்தல் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதனால் தேர்தலை எதிர் கொள்ளும் மனநிலைக்கு தி.மு.க.வினர் வந்துவிட்டனர்.

இந்த நிலையில்தான் கிராம ஊராட்சி களுக்கு மட்டுமே தேர்தலை அறிவிக்கச் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக நினைத்து மூத்த தலைவர்களுடனான ஆலோசனையில் அதனை கடுமையாக எதிர்த்திருக்கிறார் ஸ்டாலின். அதனால் இதனை எதிர்த்தும் வழக்குப் போட வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

துரைமுருகனோ, "ஊராட்சிகளுக்கான தேர்தலை எதிர்த்து வழக்குப் போட வேண்டாம். புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு பிரச்சனைகளை மட்டுமே சுட்டிக்காட்டி வழக்குப் போடலாம். ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது நமக்கு நல்லதுதான். இதனை எதிர்க்கத் தேவையில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது இப்படித் தான் கிராம ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தினார். கிராமங்களில் தனக்கும் நகரங்களில் கலைஞருக்கும் ஆதரவு இருக்கிறது என நினைத்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் தனக்காக ஓட்டு போடுவார்கள் என நினைத்து மனம் போனபோக்கில் கட்சிக்காரர்களை எம்.ஜி.ஆர். களமிறக்கினார். ஆனால், கலைஞரோ, ஊராட்சிகளைப் பொறுத்தவரை சாதி செல்வாக்கும் தனி நபர் செல்வாக்கும்தான் ஜெயிக்க வைக்கும் என முடிவு செய்து சரியான நபர்களை தேர்வு செய்து போட்டியிட வைத்தார். அந்த தேர்தலில் தி.மு.க.தான் அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். வியூகம் தோற்றுப்போனது.

அதனால், தற்போதும் ஆட்சி அதிகாரமும் பணபலமும் இருக்கும் மமதையில் தி.மு.க.வை ஒழித்து விடலாம் என கருதி ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இதில், கலைஞர் மாதிரி கணக்குப் போட்டால் அ.தி.மு.க.வை முழுமையாக நம்மால் தோற்கடிக்க முடியும். அதனால் ஒரு வகையில் ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் வருவது நமக்கு நல்லதுதான்' என துரைமுருகன் சொல்ல, மற்றவர்களும் இதனை ஆமோதித்துள்ளனர். ஸ்டாலினும் அதனை ஒப்புக்கொள்ள தேர்தலை எதிர் கொள்ள முடிவெடுத்தனர். ஆக, உள்ளாட்சி அமைப்புகளை உடைத்து தனித்தனியாக தேர்தலை நடத்துவதன் மூலம் தி.மு.க.வை முடக்கிவிடலாம் என திட்டமிட்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு பல்வேறு வியூகங்கள் மூலம் பதிலடி தர திட்டமிட்டிருக்கிறது தி.மு.க.'' என சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கேற்ப தேர்தலை எதிர்கொள்வதில் சீரியஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி, போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ள முறைகளை பற்றி மாவட்ட அமைச்சர்களிடம் தீவிரமாக விவாதித்துள்ளார். இதனையடுத்து, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்