Skip to main content

கொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
mk stalin


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய பிரிகேட் மைதானத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி மோடி அரசைத் தூக்கி எறிவோம் என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்.
 

22க்கு மேற்பட்ட கட்சிகள் தனக்கு எதிராக அணி அமைத்திருப்பதாகவும், அது மக்களுக்கு எதிரான அணி என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதாவது தனக்கு எதிராக அணி அமைத்தால் அது மக்களுக்கு எதிரானது என்றால் அர்த்தம்? மோடி என்றால் மக்கள்… மக்கள் என்றால் மோடி என்று சொல்ல வருகிறாரா?
 

2014 ஆம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் அல்லது ஆண்ட்டி இண்டியன் என்று குற்றம்சாட்டப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதாவது, மோடி என்றால் தேசம்… தேசம் என்றால் மோடி என்பதைப்போல.
 

இப்படித்தான், 1977 ஆம் ஆண்டுக்கு முன் இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒரு முழக்கத்தை உருவாக்கினார்கள். ஆனால், அதே இந்திரா தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது.
 

அதே நிலைதான் இப்போதும் இந்தியாவில் நிலவுகிறது. பதவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவில் தங்கிய நாட்களைவிட வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த நாட்களே அதிகம். அவரை சுற்றுலா பிரதமர் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 

மக்களுடைய வாழ்வாதாரத்தையும், இந்தியாவின் அடிப்படைத் தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் தகர்த்து, மக்களை பிரித்தாளும் முயற்சியிலேயே பாஜக காலத்தை ஓட்டிவருகிறது. கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரரைப் போல மோடி, இந்திய மக்களின் பணத்தை எடுத்து பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து, அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பவிடும் வேலையையும் செய்துவருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு, அம்பானிகளும், அதானிகளும் விரும்புகிற வேலையை அவர்கள் விரும்பியபடி நிறைவேற்றித்தரும் நம்பிக்கையான வேலைக்காரராக மோடி செயல்படுகிறார் என்று பகிரங்கமாகவே அவர்மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
 

அவருக்கு எதிராக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் எதற்குமே அவர் பதிலளிப்பதில்லை. இது ஒருவிதமான கல்லுளிமங்கன் நிலை என்றும் கேலிசெய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 19 நாட்களே இருந்திருக்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் உறுப்பினர்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு பதிலளிக்கவில்லை. ஒரு விவாதம் நடந்தால், இறுதியாக காட்டுக்கூச்சலாக ஏற்ற இறக்கத்தோடு நீளமாக பேசுவதையே தனது பாணியாக வைத்திருக்கிறார் மோடி. குறுக்கே யாரும் புக முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டே பேசுகிறார்.
 

இப்படிப்பட்ட பிரதமரை இனியும் விட்டுவிடக்கூடாது என்றே, மக்கள் நலன்சார்ந்த சிந்தனையோடு, இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவர்கள் நடத்திய கொல்கத்தா கூட்டத்தில் எல்லாத் தலைவர்களுமே தங்களுக்குள் வேற்றுமையை மறந்து, மோடியை தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

பங்கேற்ற தலைவர்களில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுதான் மிகவும் வெளிப்படையான, மோடியை முழுவதுமாகத் தோலுரித்த பேச்சாகும். இந்திய அரசை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் மோடி என்று கூறிய ஸ்டாலின், நூறு கூட்டங்களில் மோடி பேசிய ஆயிரம்பொய்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தவர். ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி, பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று கேலி பேசியவர் மோடி. கருப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாக பணமதிப்பிழப்புச் செய்து, நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களை இழுத்துமூடக் காரணமானவர் மோடி என்று ஸ்டாலின் ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
 

இப்படிப் பேசியது மட்டுமின்றி, நாடுமுழுவதும் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி மோடியையும் பாஜகவையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் ஸ்டாலின். அவருடைய பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றது. எல்லாக் கட்சிகளும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி தலைமையிலான பாஜக அரசை தூக்கியெறிய வேண்டும் என்று ஸ்டாலின் எழுப்பிய குரல் எல்லாப் பக்கத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

 

 

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.