Skip to main content

என்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன்! -இயக்குநர் கரு.பழனியப்பன் அதிரடி பேட்டி!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

தன் சரவெடிப் பேச்சுகளால் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர் இயக்குநர் கரு.பழனியப்பன். சமீபகாலமாக பா.ஜ.க., மோடி எதிர்ப்பை பல்வேறு மேடைகளில் அதிரடியாக பதிவுசெய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பிஸியாகி இருக்கும் வேளையில், தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கிறார். பரப்புரை களில் பரபரப்பாக இருந்தவரை நக்கீரனுக்காக சில கேள்விகளுடன் சந்தித்தோம்.

 

karu. palaniappan



பா.ஜ.க. எதிர்ப்பு பேசிவந்த நீங்கள் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடை எடுத்திருப்பதற்கான அவசியம் என்ன?
கரு.பழனியப்பன்: பா.ஜ.க. எதிர்ப்பின் மூலமாக அவர்களின் திட்டங்கள், மோசமான செயல்பாடுகளைப் பேசிவந்தோம். அதனால், தேர்தல்காலம் வரும்பொழுது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டாமென்று நினைக்கிறோம். அப்படியானால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவேண்டும் இல்லையா? களத்தில் பலர் இருந்தாலும், இந்தப் பாம்பை அடிப்பதற்கு இந்தக் கம்பு சரியென்று நான் நினைக்கிறேன். 

பா.ஜ.க. எதிர்ப்பை நேரடியாக அரசியல் களத்திற்கு வந்து பேச துணிவு வேண்டும் அல்லவா?
கரு.பழனியப்பன்: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் வாக்காளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அம்மா, கார்ப்பரேட் அரசியல், மோடியின் திட்டங்களால் ஏற்பட்ட நஷ்டங்களைப் பற்றியெல்லாம் பேசுகிறார். ஆக, இது பரப்புரை மட்டுமல்ல. வாக்காளரின் முடிவோடு ஒத்துப்போகக்கூடிய பரஸ்பர உரையாடல்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஜெயிப்பதன் மூலம் தேசம் புனிதமாக மாறிவிடுமா? 
கரு.பழனியப்பன்: எல்லாமே சரியாகி விடாது. ஆனால், ஒருமுகப்பட்டால் குறைந்த பட்சம் பா.ஜ.க.வை முழுமையாக விரட்டிவிட முடியுமல்லவா? நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருவோம் என்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் எனக்கூறி பலரும் சிரித்தார்கள். ஆனால், தி.மு.க.வின் அறிவிப்பு காங்கிரஸ் அறிக்கையில் எதிரொலிக்கிறதே. இங்கு சொன்னால் அங்கு கேட்கும் நிலை இருக்கிறதே. எல்லோரையும் குறைசொல்லிக் கொண்டேதான் இருப்போம் என்றால், தேர்தலை நிறுத்திவிட்டு எல்லோரும் செத்துப்போய் விடலாமா?

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதே?
கரு.பழனியப்பன்: இந்த தேசத்தில் அடுத்த தலைமுறை என்னவாகும் என்பதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். சும்மா திரும்பத்திரும்ப 1957-ல் இருந்து ஆரம்பிக்கக்கூடாது. சாதியையே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் வேளையில், மதத்தைக் கொண்டு பரப்புவது கேடில்லையா? இருபது வருடங்களுக்கு முன்பு எல்லா மதத்தவரும் இணக்கமாக வாழும் சூழல் இருந்தது. எல்லாப் படங்களிலும் இஸ்லாமியன் ஒருவன் நல்ல நண்பனாக இருக்கும் படங்கள் வருமளவுக்கு, அந்த இணக்கம் வாழ்க்கையாக இருந்தது. அப்படியொன்று இல்லாமல் போனதற்கு காரணமே பா.ஜ.க.வினர்தான். நாளை, உங்கள் மொழியிலும், கலாச்சாரத்திலும் கை வைப்பார்கள் என்பது விளங்கவில்லை உங்களுக்கு. 

நடுநிலையான இயக்குநர், பேச்சாளர் என்ற அடையாளத்தை இனி இழந்துவிடுவீர்களே?
கரு.பழனியப்பன்: நான் நடுநிலையானவனாக ஒருபோதும் இருந்ததில்லை. நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது என்பதை நம்புகிறவன் நான். எல்லோரும் நல்லவரே என்று நான் பேசியதே இல்லை.  

இனி உங்களைத் தி.மு.க.காரன் என்ற பிம்பத்துக்குள் அடைப்பார்களே?
கரு.பழனியப்பன்: அதனாலென்ன? என்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன். 

தற்சமயம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். ஒரு மாற்று அரசியலை முன்வைக்கும் காலம் வருமா? 
கரு.பழனியப்பன்: அது வரவேண்டுமென விரும்புகிறேன். இந்தியத் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சிறு கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதுதான் சரியும்கூட. ஆனால், தற்சமயம் நமக்குக் கிடைத்திருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பின் மூலம், எதிரியை விரட்டியடிப்பதற்கான வழியைத் தேடவேண்டும். தேர்தல் அறிவித்தபிறகு புரட்சி பேசக்கூடாது. மாற்று அரசியல் பேசுகிறவர்கள் தேர்தல் அறிவித்தபின்பே வாய் திறப்போம் என்றால், நோக்கம் வெற்றிபெறாது.  

இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்றனவே?
கரு.பழனியப்பன்: அதற்கான விடை மே 23-ல் தெரிந்துவிடும். ஒருவேளை நான் நினைத்தது நடக்காமல் போனால், இன்னும் தீவிரமாக இதைப்பற்றிப் பேசுவேன். இங்கு அ.தி.மு.க.வின் அருவருக்கத்தக்க ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் திட்டத்தினால் இறந்துபோன குடிமகளுக்கு இரங்கல்கூட சொல்லாமல் ஒரு முதல்வர் எப்படி இருக்கமுடியும்? அனைவரையும் உறையச் செய்திருக்கும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை நக்கீரன்கோபால் தனது பத்திரிகையின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அதில் நடவடிக்கை எடுக்கவேண்டியது முதல்வரின் கடமை. அதைச் செய்யாமல் நக்கீரன்கோபாலை விசாரணை செய்கிறார்கள். இது அவரைப்போல உண்மையை வெளிக்கொண்டுவரத் துடிக்கும் பலருக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டல். அதனால்தான், செல்லும் இடங்களிலெல்லாம்  நக்கீரனைக் குறிப்பிட்டு பேசுகிறேன். கேட்பவர்கள் புரிந்திருக்கிறார்கள். 

-சந்திப்பு: ஃபெலிக்ஸ்

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.

Next Story

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், வட சென்னை மக்களவைத் தொகுதியில், அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில், இன்று (16-04-24) வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ராயபுரம் மனோ வந்த வண்டியின் பின்னால், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வேடமணிந்த ஒருவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு முன்னால், தாரை தப்பட்டையுடன் ஆண்களும், பெண்களும் ஆடிக்கொண்டே வந்தனர். 

 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்