Skip to main content

"யாரெல்லாம் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் தான் குரல் கொடுத்தார்கள்" - காயத்ரி ரகுராம்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

gayathri raghuram interview talks about thirumavalavan meet 

 

முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "எங்க அப்பா இறந்த போது எனக்கு 29 வயது. அப்போது சினிமா துறையில் தீவிரமாக இருந்து வந்தேன். 30 வயதில் பாஜகவுக்கு வந்தேன். எங்க அப்பா ஜெயலலிதாவுடன், கலைஞருடன் பயணம் செய்திருக்கிறார்கள். என்னுடைய அப்பா பாஜகவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். என்னுடைய அம்மா பாஜக உறுப்பினராகவும், மகளிர் அணி பொறுப்பிலும் இருந்துள்ளார்கள். மோடியைப் பார்த்து தான் பாஜகவில் இணைந்தேன். அரசியலில் 30 வயது என்பது இளமையான வயது என்பேன். 35 வயதில் இருந்து பாஜகவுக்கு நிறைய பணிகள் செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் சினிமா துறையை மறக்க ஆரம்பித்தேன். சேவை செய்வது எனக்கு மன நிம்மதி தரும். யாரும் கஷ்டப்படக் கூடாது என்பது எங்க அப்பாவின் எண்ணம். அந்த எண்ணம் எனக்கும் உள்ளது. நான் சினிமா துறையிலும் நிறைய வெறுப்புகளைச் சம்பாதித்தேன்.

 

நாம் கட்சியில் பயணம் செய்யும் போது கட்சியும் நம்முடன் தான் பயணம் செய்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது அண்ணாமலை களை எடுக்கணும்னு பேசி வந்தார். அதில் மட்டும் தான் நம்பர் ஒன்னாக இருந்தார். இதைப் பற்றிய புரிதல் என்பது கடந்த எட்டு மாதங்களுக்கு முன்புதான் எனக்கு ஏற்பட்டது. இதைத் தவிர கட்சிக்கு எத்தனை பேரை கொண்டுவரப் போகிறோம், கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எப்படி கொண்டு செல்கிறோம் என்பதில் அண்ணாமலை கவனம் செலுத்துவதில்லை. அந்த வகையில் என் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் நான் என்ன எழுதினாலும் தவறாக கமெண்ட் செய்தார்கள். தெலங்கானாவில் நாய் ஒன்று நான்கு வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற சம்பவத்தை பற்றி எழுதிய போதும் இவ்வாறே கமெண்ட் செய்தார்கள். இந்த கமெண்டுகள் எல்லாம் என்னை எதிர்த்த கட்சிகளிடம் இருந்து வரவில்லை. நான் பயணித்த கட்சியிடம் இருந்தே வருகிறது. இது ஒரு வெறுப்பு அரசியல்.

 

கட்சியில் இருந்து வெளியில்  வந்த பிறகு என்னை விமர்சித்து கொச்சைப்படுத்துகிறார்கள். இந்த நடைமுறை தவறாக இருக்கிறது. பெண்களுக்கு அனைத்து கட்சிகளிலும் சில கசப்பான விஷயங்கள் இருக்கும் பாஜகவில் தலைவரே அப்படி செய்கிறார்கள் என்பதில் தான் வருத்தம். பெண்களை கட்சி பாதுகாக்கும். ஆனால், இப்போது உள்ள தலைவர் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். தலைவர் என்ன செய்தாலும் சரி என்று சொல்ல ஒரு குழுவினர் இருப்பார்கள். எனக்காக இரண்டு, மூன்று பேர் கேள்வி கேட்டதாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பெண்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அண்ணாமலை நினைக்கிறார்.

 

ஈரோடு தேர்தலில் அண்ணாமலையும் நிற்கட்டும், நானும் நிற்கிறேன் என்றேன். பாஜகவுக்கு தனித்து  நிற்கும் வலிமை இருக்கிறது என்றால் அண்ணாமலையை தேர்தலில் நில்லுங்கள் என்று சொல்லுகிறேன். உண்மையில் பாஜகவுக்கு வலிமை இருக்கிறது என்று பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அதனை நிரூபியுங்கள் என்று தான் சொல்கிறேன். இன்னைக்கு ராணுவ வீரருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிற அண்ணாமலை, விமானத்தில் அவசரகால கதவை திறக்கும்போது பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை யோசிச்சாரா.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். மன்னிப்பு கேட்பது மனிதத் தன்மை. மன்னிப்பது என்பது தெய்வத் தன்மை. யாரெல்லாம் எனக்கு குரல் கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் தான் குரல் கொடுத்தார்கள். திருமாவளவன் மீது எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது. திருமாவளவன் பற்றி முன்பு பேசியது தவறு என்பதை இந்த சந்திப்புக்கு முன்பே நான் உணர்ந்துவிட்டேன். உலகத்தில் உள்ள பெண் ஆளுமைகள் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். சாவித்திரி பாய் பூலே, ஜெயலலிதா போன்றவர்களை முன் உதாரணங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். என்னுடைய முந்தைய பேச்சுக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அந்த பெண்மணி மேல் எந்த கீறலும் ஏற்படக் கூடாது என்பதில் திருமாவளவன் கவனமாக இருந்தார்கள். இது தான் சரியான அரசியல். திருமாவளவன் மட்டும் ஆதரவு தரவில்லை. சீமானும் ஆதரவு தெரிவித்து ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்கள். கிருஷ்ணசாமியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்கள்" என தெரிவித்து உள்ளார்.  

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.