Skip to main content

நம்பி வரும் நிர்வாகிகளுக்கு ஃபைனான்ஸ் உதவி! உறவினர்கள் பிடியிலிருந்து வெளியேறும் சசி!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

ddd


ஒரு இழுபறிக்குப் பிறகு, ஜூன் 14ஆம் தேதியன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றத் துணைத்தலைவராக ஓ.பி.எஸ்., கொறடாவாக எஸ்.பி. வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி. அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், கட்சியைக் கைப்பற்றுவதற்காக நாடகமாடி கட்சியினருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடுவதாகவும், கட்சிக்கு எதிராக செயல்பட்டோரைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சசிகலா குடும்பத்தினர் என்றே வந்திருக்கிறது. முதன்முறையாக இப்போதுதான் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவின் காலில் விழுந்து கும்பிட்டு பதவியைப் பெற்றவர்கள், சசிகலாவையே எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆச்சர்யமான ஒன்றாகும்.

 

எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்சும் இதுவரை கிழக்கும் மேற்குமாகத்தான் இருந்தார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது கூட்டத்திலிருந்து பாதியில் கிளம்பியவர்தான் ஓ.பி.எஸ். அந்தச் சண்டையின்போது, சசிகலாவின் ஆதரவாளரென்ற இமேஜ் ஓ.பி.எஸ்சுக்கு இருந்தது.

 

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 21ஆம் தேதி கூடியது. எனவே அதிமுக சட்டமன்ற நிர்வாகிகள் தேவை. எதிர்க்கட்சித் துணைத் தலைவராவதற்கு மறுத்தவர் ஓ.பி.எஸ். கொறடாவாக எஸ்.பி. வேலுமணியை எடப்பாடி பழனிசாமி கைகாட்ட, மனோஜ் பாண்டியனைக் கைகாட்டியவர் ஓ.பி.எஸ். இந்தச் சண்டை நடந்துகொண்டிருந்தபோதுதான் இன்னொரு பக்கத்தில் அதிமுகவினரோடு சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. சசிகலாவும் ஓ.பி.எஸ்சும் கைகோர்த்து அதிமுகவைக் கைப்பற்றுவார்கள் என்றும், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சண்டையால் ஒத்திவைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, சைலண்ட்டாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியை ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி சொன்னபடி எஸ்.பி. வேலுமணி கொறடாவாக வந்ததன்மூலம், அதிமுகவை கொங்கு வேளாளர்கள்தான் நிர்வகிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதுபோல சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ். கையெழுத்து போடுகிறார். இது அரசியல் பரமபத ஆட்டம்போல திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

கூட்டத்தில் பேசியது குறித்து விசாரிக்கையில், "ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்றுதான் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் ஒரு காம்ப்ரமைஸ் ஃபார்முலாவோடு பேசியிருக்கிறார்கள். அதன்படி, நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக வந்தால், மாநில அமைச்சர் அந்தஸ்துதான் கிடைக்கும். ஆனால் உங்கள் பையன் மத்திய அமைச்சரானால் மாநில முதல்வருக்குரிய அந்தஸ்து கிடைக்கும். எது உங்களுக்கு வேண்டுமென ஒரு டீலிங்கை கேள்வியாக ஓ.பி.எஸ். முன்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் இதில் நம்பிக்கையில்லாததால் ஓ.பி.எஸ். அந்த டீலிங்கை ஏற்க மறுத்திருக்கிறார்.

 

ஏற்கனவே, தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வரென்றும், ஒருவேளை அதிமுக தோற்றால், ஓ.பி.எஸ். எதிர்க்கட்சித் தலைவர் என்றும்தான் டீலிங் போட்டிருந்தனர். ஆனால், இப்போது அந்த டீலிங்குக்கு மாறாக, எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். “முன்பு என் மகனை மத்திய அமைச்சராக்குவதை எதிர்த்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது மட்டும் என் மகனை மத்திய அமைச்சராக்க எப்படிச் சம்மதிப்பார்” என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால், கண்டிப்பாக சொன்னபடி நடக்குமென்று உறுதி சொன்னபிறகே தனது பதவி, மற்ற நிர்வாகிகளின் பதவிகளுக்கும் ஓ.பி.எஸ். ஓகே சொல்லியிருக்கிறார்.

 

இப்படி டீலிங் ஓகே ஆகுமென்பதை சசிகலா எதிர்பார்க்கவில்லை. ஓ.பி.எஸ்சை விமர்சித்த அன்புமணியை திட்டிய பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியது, அன்புமணி மீதான மரியாதைக்காக இல்லை... புகழேந்தி, சசிகலாவின் ஆதரவாளராக மட்டுமல்லாது, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்குமிடையே இணைப்புப் பாலமாக இருந்தவர். எனவே புகழேந்தியை நீக்கி, சசிகலாவுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் "என்னை முதுகில் குத்த இனி இடமே இல்லை... அவ்வளவு பேர் குத்தியிருக்காங்க. ஓ.பி.எஸ்சை நான் பதவியிலிருந்து நீக்கல... அவரேதான் பதவி விலகினார்” என்றெல்லாம் புலம்பியிருக்கிறார் சசிகலா. ஆனால், ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது தினகரனும் டாக்டர் வெங்கடேசும்தான்.

 

சசிகலாவின் சொத்துக்கள், தினகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், இளவரசி ஆகியோரின் கைகளில்தான் உள்ளன. எனவே அவர்களை மீறி சசிகலாவால் வெளியே வர இயலாது. சசிகலா தனிப்பட்டு வந்தால் அவரை ஏற்க அதிமுகவில் எல்லோரும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சசிகலாவைச் சுற்றியிருக்கும் அனைவரையும் ஏற்க அதிமுகவினர் தயாராக இல்லை. சசிகலாவின் சொத்துக்களை எதையுமே வைத்திருக்காத திவாகரனை, சசிகலா தன்னோடு சேர்க்கவில்லை. ஆனால் அந்த திவாகரனோ அதிமுகவினர் மத்தியில் நல்ல டச்சில் இருக்கிறார். அவர் களத்துக்கு வந்தால் சசிகலாவின் முயற்சிகள் வெற்றிபெறும் என்று அதிமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.

 

சசிகலாவுக்கு தற்போது வேறு வழியே இல்லை. தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதால், உறவினர்களின் கூட்டைவிட்டு சசிகலா வெளியே வரத்தொடங்கியுள்ளார். தன்னை நம்பிவரும் கட்சி நிர்வாகிகளுக்கு ஃபைனான்ஸ் உதவியும் செய்கிறார். சசிகலாவின் கை ஓங்கும்போது இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். தானாக வழிக்குவருவார்கள்'' என்பது சசிகலா தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.