Skip to main content

டாஸ்மாக் டோக்கனின் ரகசிய பின்னணி!!! டாஸ்மாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியும் விதியை மதிக்காத தமிழக அரசு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

admk



அதிரடி வேகம் காட்டி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, அது தொடர்பான விதிகளை எல்லாம் காற்றிலே பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.


இந்த கரோனா காலத்தில், டாஸ்மாக்கை திறப்பது தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று உயர்நீதிமன்றம் தடைவிதித்தும்கூட, டாஸ்மாக்கை திறந்தே தீருவோம் என்று சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன எடப்பாடி அரசு, “டாஸ்மாக்கை திறப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று வாதிட்டு, கடைகளை திறக்க 15-ந் தேதி அனுமதி வாங்கியது.

அதே வேகத்தில் மறுநாளே, சென்னை, திருவள்ளூர் நீங்கலாக தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டுதான் உட்கார்ந்தது எடப்பாடி அரசு. டாஸ்மாக்கில் இவ்வளவு அவசரம் காட்டியவர்கள், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்றால், உதட்டை பிதுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நம்மிடம் பேசிய அந்த சமூக ஆர்வலர் “நீதித்துறையும் எடப்பாடி அரசும் தங்களுக்குள் ஒரு அண்டர் டீலிங்கை வைத்துகொண்டு, டாஸ்மாக் விஷயத்தில் சடுகுடு ஆடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், உச்சநீதிமன்றத்தில் 14-ந் தேதி இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டபோது, டோக்கன் முறையில், அதிலும் ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபானம் விநியோகிக்கப்படும்ன்னு நீதிமன்றத்திடம் வாக்குறுதி கொடுத்தது தமிழக அரசு. அதையொட்டி, 15-ந் தேதி உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த அன்று மதியமே, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டோக்கனை சப்ளை செய்துவிட்டது அரசு. தங்களுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என்பது எடப்பாடி அரசுக்கு எப்படித் தெரியும்?’’என்கிறார் அழுத்தமாக.

 

 

tasmac



ஏற்கனவே நீதிமன்றம் வரையறுத்த படி, குடிகாரர்கள் 6 அடி சமூக இடைவெளியுடன் வந்துதான் மதுபானத்தை வாங்க வேண்டும். அவர்களுக்குத் தலா நான்கு குவார்ட்டர் அல்லது இரண்டு ஆஃப் அல்லது ஒரு ஃபுல் பாட்டில் மதுபானம் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க, வாரத்தின் ஏழு நாளைக்கும், ஏழு நிறங்களில் தனித்தனி டோக்கன்கள் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டன. ஆனால் முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்திலேயே இப்படியான விதிகள் பின்பற்றப்படவில்லை. அதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளும் நடந்தது.


இது குறித்தெல்லாம் டாஸ்மாக் பணியாளர்களிடம் நாம் கேட்டபோது...’’'ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 70 டோக்கன் அளவுக்கு மதுபானங்களை கொடுக்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு மணி நேரம் கடையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் எங்கள் மேலதிகாரிகளோ, மதுப்பிரியர்கள் எத்தனை பாட்டில் கேட்டாலும் கொடுக்கச் சொன்னார்கள். ஒரு ஃபுல் மது பாட்டில் 1000 ரூபாய் என்றாலும் கூட, 500 பேருக்கு ஒரு ஃபுல் வீதம் விற்றால் சராசரியாக ஒரு கடையில் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகும். ஆனால் பெரும்பாலான கடைகளில் 10 லட்ச ரூபாயையும் தாண்டி சேல்ஸ் ஆகியிருக்கு. அதோடு மேலதிகாரிகளை கவனிக்கவேண்டும் என்பதால் பாட்டிலுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை உபரி விலை வைத்துதான் நாங்கள் சரக்குகளை விற்றோம். இங்கே யாரும் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. அரசு, பின்பற்றவும் விடவில்லை’’ என்கிறார்கள் ஆதங்கமாய்.

 

 

tasmac



இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனை இரவு 10 மணியளவில் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "மாவட்ட அளவில் எவ்வளவு ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆனது என்ற விவரம் இன்னும் முழுமையாக எனக்கு வரவில்லை. தேவைப்படும் அளவுக்கு சரக்குகளை விற்பனை செய்யலாம். கட்டுப்பாடுகள் என்று ஏதுமில்லை'' என்று முடித்துக்கொண்டார். எடப்பாடி அரசின் டாஸ்மாக்கே, நிர்வாக விதிகளை மதிக்காமல் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.