Skip to main content

"கண் துடைப்புக்காக நடந்த கருத்து கேட்பு கூட்டம்..! கொந்தளிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள்..!"

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

பள்ளர், குடும்பர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், காலடி, பண்ணாடி, மூப்பன் என்றழைக்கப்படும் 7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது, இந்த சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
 

feedback meeting issue


நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் புதிய தமிழகம் கட்சியை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி, "தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை வெளியிட ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்” என்று பிப்ரவரி 27-ந்தேதி அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு ஒருமுறை கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காகதால், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.

7 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கிருஷ்ணசாமி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்றும் அறிவித்துவிட்டார். இதேபோல், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனும் கையை விரித்துவிட்டார்.

ஹன்ஸ்ராஜ் வர்மா குழு கண்துடைப்புக்காகவா?

இதையடுத்து, அக்டோபர் 16-ந்தேதி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான குழு 2-வது முறையாக கருத்து கேட்கிறது. எனவே, மேற்படி 7 சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த குழுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கலாம் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோரும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
 

feedback meeting issue


இன்றைய கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற சிலரிடம் பேசினோம். "எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே நாங்கள் வேளாண்மை தொழில் செய்து வருகிறோம். பள்ளமான நிலத்தில் வேலை செய்ததால் பள்ளர் என்றும், வேளாண்மை தொழில் செய்ததால் வேளாளர் என்றும் அழைக்கப்பட்டோம். ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட சிறு பிழையால் நாங்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டோம். அதில் இருந்து மீட்டு எங்களது அடையாளத்தை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறோம். இதில் அரசாங்கம் மவுனம் சாதிப்பது நல்லது அல்ல" என்றார் கரூர் மாவட்டம் காந்திகிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பரணி.

அவரே தொடர்ந்து, "சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய  மள்ளர் குலத்தவர்களே. மள்ளர் என்றால் உயர்குலத்தவர் என பொருள்படும். அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும், வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் என்று திவாகர நிகண்டும், திருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்று பிங்கல நிகண்டும்  இயம்புகின்றன. உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.

இப்பேர்பட்ட பெருமை கொண்ட எங்களை அவன்.....அந்த.... சாதிக்காரன் என ஏளனமாக பார்க்கும் வகையில் தான் இருக்கிறது. இதில் இருந்து மீள வேண்டும். எங்களது அடையாளத்தை மீட்க வேண்டும். என்காலத்தில் அது நடக்காவிட்டாலும், என் பிள்ளைகள் காலத்தில் நடந்தாவது மன நிறைவு தான்" என்றார் நம்பிக்கையுடன்.

இந்த சமூக மக்கள் வைக்கும் கோரிக்கைகளின் ஒன்று 7 சாதிகளை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது. இது மாநில அரசு செய்ய வேண்டியது. மற்றொன்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற்றிட வேண்டும் என்பது. இது மத்திய அரசு செய்ய வேண்டியது.

மாநில அரசு மவுனம் சாதிப்பது ஏன்?

"எடப்பாடி பழனிசாமி நினைத்தால் இந்த நிமிடமே தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றிட ஜி.ஓ போட்டுவிட முடியும். ஆனால், செய்ய மாட்டார்" என நம்மிடம் தெரிவித்தார் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கணேஷ்.

அவரே தொடர்ந்து பேசும்போது, "கள்ளர், மறவர், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 68 சாதிகளுக்கு 1979 பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் (டி.என்.ட்டி) என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு சீர்மரபினர் பட்டியலில் அதாவது டி.என்.சி பட்டியலுக்குள் இவர்கள் வந்ததால், மத்திய, மாநில அரசுகளின் கிடைக்கவில்லை.
 

feedback meeting issue


அவர்கள் மறுபடியும் எங்களை பிற்படுத்தப்பட்ட பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா தலைமையில் ஒரு குழு ஜனவரியில் அமைக்கப்பட்டது. அந்த குழு திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. மார்ச் மாதத்தில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், எங்களது கோரிக்கை தொடர்பாக குழு அமைத்ததோடு சரி. இப்போது கூட இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதும் கண்துடைப்புக்காகத் தான். 68 சாதிகளை ஒருங்கிணைத்து பட்டியலுக்குள் கொண்டு வந்த அரசாங்கத்திற்கு, இந்த 7 சாதிகளை ஒருங்கிணைக்க முடியாதா?இவர்களது கோரிக்கையை ஏற்றால் முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சம் அதிமுகவுக்கு மட்டுமல்ல. திமுகவுக்கும் இருக்கிறது.

மே மாதம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தபோது விளாத்திகுளம், பரமக்குடி, ஒட்டப்பிடாரம், சாத்தூரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது எங்க அப்பா கருணாநிதி தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட 2011-ல் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைத்தார். ஆனால், ஆட்சி முடிந்ததால் நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சி மாற்றம் வந்தபிறகு நாங்கள் கண்டிப்பாக உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றார்.

அதே ஸ்டாலின், இப்போது நாங்குநேரி பிரச்சாரத்தின்போது இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. விக்ரவாண்டி தொகுதியை குறிவைத்து, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவோம் என அறிக்கை விட்ட ஸ்டாலினுக்கு நாங்குநேரி தொகுதியில் எங்க சமூக ஓட்டுக்கள் வேண்டாம் என்று நினைக்கிறாரா?" என்று வினா எழுப்பினார்.

மறந்திட்டீங்களா முதல்வரே?

மேலும் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 14 பேர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அவர்களில் 10 பேர் அதிமுகவினர். அவர்கள் பதவி விலகுகிறோம் என்று நெருக்கடி கொடுத்தாலே எடப்பாடி பழனிசாமி பணிந்துவிடுவார். ஆனால், அதற்கு அந்த 10 எம்எல்ஏக்கள் தயார் இல்லை. இனி இருக்கிற ஒன்றரை வருஷத்தை இப்படியே ஓட்டிவிடுவோம் என்கிற நினைப்பு அவர்களுக்கு.!

விக்ரவாண்டியிலும், நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை தான் சொல்வோம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியும் தந்திருக்கிறோம்" என்று பேசி வருகிறார். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவோம் என ஏப்ரல் மாசம் சொன்னதை மறந்துவிடாதீர்கள் முதல்வரே என்கின்றனர்.
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.