Skip to main content

கரோனாவை விட கொடியது தீண்டாமை மனப்பான்மை - எவிடென்ஸ் கதிர்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020


கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். 
 

jh



இந்நிலையில் இந்த கரோனா தொற்றுக்கு சமூக இடைவெளி வேண்டும் என்பதை தவறாக சித்தரித்து புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அவர்கள் கூறும்போது, " சுத்தம் என்பது வேறு, தீண்டாமை என்பது வேறு. இன்றைக்கு ஒரு நோய் ஏற்படுகின்றது என்றால் அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை நாம் மேற்கொள்ளுவோம். இன்றைக்கு கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதற்காக கைகளை சுத்தம் செய்தல், குறிப்பிட்ட அளவு இடைவெளி விடுதல், விலகி இருத்தல் முதலியவற்றை நாம் கடை பிடிக்கிறோம். ஆனால் இன்றைக்கு தீண்டாமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பத்திரிக்கையில் படம் போட்டுள்ளார்கள். அதில் தீண்டாமையை ஆதரிப்பது போன்று வாசகங்களை எழுதியுள்ளார்கள். இந்த நூற்றாண்டில் வெட்கப்பட வேண்டிய காரியத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். கரோனாவை விட இந்த தீண்டாமை மிகக் கொடிய ஒரு நோய். அது தவிர்க்கப் படவேண்டிய ஒன்று" என்றார். 
 

Next Story

நாங்குநேரியில் நடந்தது என்ன? - எவிடன்ஸ் கதிர் விளக்கம் 

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Nanguneri issue evidence kathir
கோப்புப் படம் 

 

நாங்குநேரி சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நீங்கள் களத்திற்கு சென்றுள்ளீர்கள். அங்கு என்ன நடந்தது?


இந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இரவு 10.30 மணியளவில் பதினேழு வயது சிறுவன், தனது வீட்டில் தங்கை, அம்மாவுடன் பக்கத்து வீட்டு அம்மையார் பாத்திமா உடன் இருந்துள்ளார். சாப்பிடுவதற்கு எல்லோரும் தயாரான நிலையில் வீட்டினுள் மூன்று சிறுவர்கள் நுழைந்துள்ளனர். அதில் இரண்டு பேருக்கு பதினேழு வயது. மற்றொருவனுக்கு பதினாறு வயது. இரண்டடி நீளமுள்ள அரிவாளுடன் நுழைந்தவர்கள் அங்கு இருந்த அந்த பட்டியிலன மாணவனின் கழுத்திலும், தலையிலும் தாக்க முற்படுகிறார்கள். தாக்குதலை தடுக்க முயன்ற பாதிக்கப்பட்ட மாணவருக்கு இரண்டு கைகளிலும் வெட்டுக் காயங்களுடன் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்குள்ள மருத்துவர் கூறுகையில் தோள்பட்டையிலும், தொடையிலும் காயம் உள்ளது என்றார். இத்தாக்குதலை தடுக்க சென்ற தங்கையையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். அந்த வீடு முழுவதும் ரத்தம் படிந்து அறை தொடங்கி, படி, தெரு வரை கரைகள் இருந்தன. இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர். இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஏழு பேர் வரை கைதாகியுள்ளனர். மேலும் சிலர் அங்கு இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்ததுள்ளது. இதுவரை கைதானவர்களில் மூன்று பேருக்கு 16 வயதும், நான்கு பேருக்கு 17வயதும் என சொல்லப்படுகிறது. இந்த எழுவரில் இரண்டு நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட மாணவருடன் பயிலும் சக மாணவர்கள். இவர்கள் இருவரும் தெருவில் தரிசாக சுற்றித் திரிபவர்கள் என அங்கு பேசியபோது தெரிந்தது. 

 

இவர்கள் இருவரும், பெண் ஆசிரியர்களை கிண்டல், கேலி செய்வது, ஊளையிடுவது போன்ற காரியங்களையும் செய்துவந்துள்ளனர். அதேபோல், மாணவர்களை மிரட்டியும் வந்துள்ளனர். இரண்டு முறை அவர்கள் பள்ளி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிறகு பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை மன்னித்துள்ளது. ஆனால், இவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனை சிகரெட் வாங்கி வரச் சொல்வது. பணத்தை பறிப்பது முதல் சாதி பெயரை சொல்லி ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதுமட்டுமன்றி, இன்னும் பல கொடுமைகளை பாதிக்கப்பட்ட மாணவர் அனுபவித்துள்ளார். இதனால், கடந்த பத்து நாட்களாக பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். தன்னை வேறொரு பள்ளிக்கூடத்திற்கு மாற்றுமாறு அல்லது சென்னைக்கு வேலை பார்க்க அனுப்புமாறு தாயிடம் கூறிவந்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அவர்களின் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தாய் வீட்டு வேலை செய்பவர். குடும்பச் சூழலால், தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவன் சொல்லவில்லை. ஆனால் தாக்குதலை நடத்திய இருவர், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அந்தப் பகுதியில் அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதும் தெரியும். பாதிக்கப்பட்ட மாணவன் தனக்கு நேர்ந்ததை மறைத்ததற்கு அச்சம் தான் காரணம். ஆகஸ்ட் 9 ம் தேதி பள்ளி ஆசிரியை, மாணவனின் அம்மாவிடம் அலைபேசியில், “உங்க பையன் நல்லாப் படிக்கிற மாணவன். தயவு செய்து பள்ளிக்கு அழைத்து வாருங்கள்" எனக் கூறியுள்ளார். ஆசிரியரிடம் நடந்ததை மாணவன் கூற, அதனைப் புகாராக எழுதி தரச் சொல்லியுள்ளனர். இதனைச் சாதிய பாகுபாடு தான் என அறிந்த நிர்வாகம், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வியாளரிடம் தெரிவிக்க முடிவெடுத்துள்ளனர். இதை அறிந்த இரண்டு மாணவர்களும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லவில்லை. இந்த விவரம் அறிந்த ஒரு மாணவனின் பாட்டியும், சித்தாப்பாவும் பாதிக்கப்பட்ட மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்களிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் அம்மா, “உங்க ரெண்டு பசங்களால தான் என் பையன் இன்னைக்கு படிப்பே வேணாம்னு சொல்றான். கல்வி தான் எங்களுக்கு இருக்கிற ஒரே சொத்து” என சம்பவம் பற்றி விவரித்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ந்த இரவில் தான் அரிவாள் வெட்டும் நடந்தேறியுள்ளது. 9 ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மறுநாள் மாலை நான் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு சென்றேன். அங்கு அந்த மூன்று மாணவர்களும் அமர்ந்திருந்தனர். தாக்குதல் குறித்தான குற்ற உணர்ச்சியில்லாமல் அந்த மூன்று சிறுவர்களும் அங்கு விளையாடிக்கொண்டிருந்தனர்.  

 

மாணவர்கள் பெஞ்சில் அமர்த்தப்பட்டிருந்தனர். காவல் நிலையம் குறிப்பிட்ட சாதியின் திடல் போல இருந்ததும், அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானால் நிகழ்த்தும் படி இருந்தது. அங்கு இருக்கும் பெரும்பான்மை சாதியினரின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அந்த காவல்நிலையம் இருக்கிறது. அந்தக் குடியிருப்புகளின் சுவர்களில் எல்லாம் அந்த சாதியின் அடையாளம் இருக்கிறது. அந்த காவல் நிலையம் சாதிய மந்தை போலக் காட்சியளித்தது. அப்படி இருப்பதாலே அவர்கள் மூன்று பேரும் எந்தவொரு கவலையும் இல்லாமல் உட்கார்ந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் தென்காசியில் இருந்து அழைத்து வரப்பட்டு இரவு எட்டு மணியளவில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம், ஒரு வேளை அவர்களின் கைகளில் இரண்டு கத்திகள் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மாணவன் மரணித்திருக்கலாம். ஒரு கத்தியால் கழுத்து மற்றும் தலைப் பகுதியை மாறி மாறி அவர்கள் இருவரும் தாக்கியதால் அதில் கிடைத்த சில நிமிடங்களில் அந்த மாணவனால் கூச்சலிட்டு தன்னை தற்காத்துக் கொள்ள முடிந்தது. 

 

இந்த சம்பவமானது பாதிக்கப்பட்ட மாணவனின் தாய், தங்கை, பக்கத்து வீட்டு பாத்திமா உள்ளிட்டோரை கலங்கடித்துள்ளது. வெட்ட வந்தவர்களிடம், "அண்ணா விட்ருங்க" எனக் கதறியிருக்கிறார் அந்த சிறுமி. அந்த சிறுமி கெஞ்சிய பின்னும் வெட்டும் அளவுக்கு வெறி எங்கிருந்து இவர்களுக்கு வந்தது. ஒரு கூலிப்படையைப் போல இவர்கள் தாக்கியுள்ளனர். பள்ளியில் சில மாணவர்கள் முரட்டுத் தனமாக நடந்து கொள்வது போல அல்லாத சாந்தமாக உள்ள மாணவன் தான் பாதிக்கப்பட்ட மாணவன். அவனையே வெட்டும் அளவிற்கு ஜாதி ஊன்றியுள்ளதை இது காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மாணவனின் அம்மா, " என் பிள்ளைக்கு சாதி பற்றியே தெரியாது. அவர்கள் தான் இவனை சாதி பெயர் சொல்லி அவமானப் படுத்தியுள்ளனர்"   என்கிறார். 

 

 

Next Story

பேரம் பேசி இப்போது நடுத்தெருவில் நிற்கிற கேவலமான நிலையில் இருக்கிறது... -எவிடென்ஸ் கதிர்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019


மார்ச் 7 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் சென்னையில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் பிரதமர் மோடியும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். தேமுதிக-அதமுக கூட்டணி உறுதிசெய்யப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் விழா அரங்கில் வைக்கப்பட்டு சர்சைகளுக்குப் பிறகு அது அகற்றப்பட்டது. அதே நேரத்தில் தேமுதிக கட்சி திமுகவுடனும் கூட்டணிக்காக பேசியது என தகவல்கள் வெளியாகின. சர்சைக்குறிய தொடர் அரசியல் சூழலில் எவிடென்ஸ் கதிர் அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது,

 

evidance kadhir


மோடியும், ராமதாஸூம் மேடையில் கைகோர்த்த காட்சி, மதவாதமும், சாதியவாதமும் இணைந்திருப்பதை உணர்த்தியது. இந்தியாவில் எல்லோருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது, அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், முதல்வர் பழனிசாமி, மோடி அவர்களுக்கு விநாயகர் சிலையை பரிசாகக் கொடுக்கிறார். தமிழக முதல்வராக இருக்கக்கூடிய அவர், தமிழன்னை சிலையை கொடுத்திருக்கலாம். அல்லாமல் ஏன் அவர் விநாயகர் சிலைக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. மோடியும் செல்லும் இடம்மெல்லாம் பகவத் கீதையை பரிசாகக் கொடுக்கிறார். கட்சிக் கூட்டமாக இருந்தாலும் தமிழக முதலமைச்சர் இதுபோன்ற செய்கை செய்வது ஏற்புடையது இல்லை. இன்றைக்கு இருக்கிற எல்லோரும் பெரிய சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள், குறிப்பாக தேமுதிக கட்சி அதிமுகவில் ஒரு பக்கமும், திமுகவில் ஒருபக்கமும் பேரம் பேசி இப்போது நடுத்தெருவில் நிற்கிற கேவலமான நிலையில் இருக்கிறது. பிஜேபியும், பாமகவும் எவ்வளவு மோசமான கட்சிகள் என்பதை சொல்லவேண்டியதில்லை.
 

இந்தச் சூழலில் வேறுவழியில்லாமல், நாம் எதிர்ப்பார்க்கும் ஜனநாயகம் இருக்கிற காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகளின் கூட்டணியை ஆதரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அண்ணன் திருமாவளவன் அவர்களை பாராட்டவேண்டும். அவர் ஆரம்பத்திலிருந்தே சனாதான எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக இருந்துவருகிறார், அவர் அந்த பிடியை விடவேயில்லை. ஆனால், சில தலித் கட்சிகள் இந்த மதவாத, சாதியவாத கட்சிகளோடு இணைந்திருப்பது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம். இது வெகுஜன, ஜனநாயக அரசியலை மட்டுமில்லாமல் தலித் அரசியலையும் குழிதோண்டிப் புதைக்கிற செயல். மற்ற கட்சிகளைவிட சில உதிரி தலித் கட்சிகள் இந்த நிலைபாட்டை எடுத்திருப்பது அபாயகரமானதும் அறுவெறுக்கத்தக்கதும் மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் கூட.  அந்தவகையில், ஆதி தமிழர் பேரவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதவாத சக்திகளுக்கெதிரான சரியான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.
 

அரசியல் கருத்துக்களில் மாறுபாடுகள் இருந்தாலும் மைய அரசு என வரும்போது எல்லோருக்கும் பொதுவான எதிரி பி.ஜே.பி தான். ஜெயலலிதா, அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபொது அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டவர் ராமதாஸ் என அண்மையில் வைகோ கூறினார். அதுதான் ராமதாஸின் நிலை. அவர் அந்த கட்சிகளுக்கு நல்ல அடிமையாக இருப்பார். சமூக நீதி வலிமையாக இருக்கிற தமிழ்நாட்டில் இப்படியொரு கேவலமான போக்கு நடந்துவருகிறது. இவர்களை இந்த தேர்தலின் மூலம் வேரோடு பிடிங்கி எறிய வேண்டியக் கடமை ஒவ்வொரு இளைஞருக்கும் உள்ளது. வேறு வழியில்லாமல், நமக்குள் இருக்கிற வேறுபாடுகளை மறந்து, மிகப் பெரிய தலித் அரசியலை முன்னெடுக்கிற திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளின் கூட்டணியை ஏற்கவேண்டியுள்ளது.