Skip to main content

இனிதான் நிஜ விஸ்வரூபம்! எம்.ஜி.ஆர். இமேஜில் களமிறங்கிய கமல்

Published on 22/12/2020 | Edited on 22/12/2020
ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிகாரப் பூர்வமாக மதுரையில் ஆரம் பித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். வாரம் தோறும் சனி, ஞாயிறுகளில் "பிக்பாஸ்' ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கமல், தைப் பொங்கலுக்குப் பிறகு, தனது "ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிக்கப்போகும் "விக்ரம்'’ படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கப் போவதால், ம.நீ.ம.வை ஆரம்பித்த மதுரையிலிருந்தே பிரச்சாரத்தைத் தொடங்க முடிவுசெய்தார்.

 

கமலின் பிறந்தநாளான நவ. 07-ஆம் தேதி சென்னையில் நடந்த கட்சி மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் டிச. 13-16 வரை முதல்கட்டப் பிரச்சாரத்தை தொடங்குவதென முடிவு செய்தார் கமல். கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த சிவப்புக் கலர் ஸ்பெஷல் பிரச்சார வேனும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த வேனில் இருந்துதான் பிரச்சாரத்தைத் துவக்கக் கமலும் நினைத்தார்.

 

கமல் பகுத்தறிவுவாதி என்றாலும் அவரது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு, கட்சியில் உள்ள ஆத்திகவாதிகளுக்கு சிவப்புக்கலர் செண்டிமெண்டாக ஒத்துவரவில்லை. "சிவப்பு என்பது கம்யூனிஸ்டுகளின் கலர், மேலும் இந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து கொண்டு போகும்போது, இந்த வெறிப்புத் தன்மை கலர் மக்களிடம் ஒருவித வெறுப்புத்தன்மையை ஏற்படுத்தும்' என கமலின் நட்பு வட்டமும் சொன்னதால், வேறு கலரில் வேனை தயார் பண்ணும்படி சொல்லிவிட்டாராம் கமல்.

 

"சீரமைப்போம் தமிழகத்தை'’என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரத்தை ஆரம்பிக்க 13-ஆம் தேதி பகல் சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை வந்தார் கமல். கட்சி நிர்வாகிகளின் விமானநிலைய வரவேற்புக்குப் பின், பசுமலையில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்குப் புறப்பட்ட கமலுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கமலின் மதுரை வருகைக்கு மூன்றுநாட்களுக்கு முன்பே எந்தெந்த இடங்களில் மைக் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், வேனில் நின்றபடி பிரச்சாரம் என்பதைத் தெளிவாகச் சொல்லி போலீசிடம் அனுமதி வாங்கும்படி அறிவுறுத்தியிருந்தார் அமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச்செயலாளர் திருச்சி முருகானந்தம். அதன்படியே அனுமதியும் வாங்கியிருந்தனர் மதுரை மாவட்ட நிர்வாகிகள்.

 

ஓட்டலுக்குச் சென்ற கமல், சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு, பிரச்சாரத்திற்குக் கிளம்ப ரெடியானபோது, அவசர அவசரமாக வந்த மதுரை நிர்வாகிகள், கடைசி நேரத்தில் பெர்மிஷனை போலீஸ் ரத்து பண்ணிய தகவலைச் சொன்னபோதும் பதட்டமடையாத கமல், "பரவால்ல, வேன்ல நின்னபடியே மக்களைச் சந்திப்போம்'' எனச் சொன்னதும், பிரச்சாரத் திட்டத்தில் லேசான மாற்றம் செய்யப்பட்டது.

 

பெரியார் பஸ்நிலையம், வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் மைக் மூலம் பேசாமல் வெள்ளைக் கலர் வேனில் நின்று மக்களை நோக்கிக் கைகூப்பிய படியே சென்றார் கமல். காமராஜர் சாலையில் உள்ள தொழில்வர்த்தக சங்கத்தில் மாணவர்கள்-பெண்கள் ஆகியோருடன் கலந்துரையாடியபோது, "எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான். மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் விருப்பம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவோம்'' என்றார்.

 

இதைக் கேட்ட வர்த்தக சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும், “எம்.ஜி.ஆர். திருச்சியை தானே இரண்டாவது தலைநகரமாக்கனும்னு முடிவு செஞ்சிருந்தார். இவர் என்னடான்னா மதுரைங்கிறாரே'’ என முணுமுணுப்பு கிளம்பியது. கலந்துரையாடலை முடித்துக் கொண்ட கமல், கருப்பாயூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளிடையே "மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுங்கள்'' என ஆலோசனை கூறிவிட்டு, இரவு பசுமலை ஓட்டலுக்குத் திரும்பினார் .

 

மறுநாள் 14-ஆம் தேதி அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தொழிலதிபர்கள், வக்கீல்களுடன் கலந்துரையாடிய பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்புக்குச் சிலமணி நேரங்கள் முன்பாக, “தலைவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்பீர்கள், யாரெல்லாம் கேட்பார்கள், அவர்களின் பெயர்களைக் கொடுங்கள்'’என சில நிர்வாகிகள் கேட்டதற்கு... மீடியாக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி, சலசலப்பு ஆரம்பமானபோது வந்து சேர்ந்தார் கமல்.

 

"ஆளும்கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் கிளம்புவதாலும் எங்களுக்கு ஆதரவு பெருகுவதாலும் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள். தடைகள் எங்களுக்குப் புதிதல்ல'' என ஆரம்பத்திலேயே ஆவேசமானார் கமல். "ரஜினியின் ஆன்மிக அரசியலும் மக்கள் நீதி மய்யமும் கூட்டணி சேருமா?' என்ற கேள்விக்கு, “அணி கள் பிளவுபடும், அணிகள் சேரும்'' எனத் தனது பாணியில் பதில் சொன்னார் கமல். "ஒண்ணும் புரியலையே சார்..."என மீடியாக்கள் மீண்டும் கொக்கி போட, “போகப்போக புரியும்'' என்றார் கமல்.

 

"நீங்க பி.ஜே.பி.யின் பி டீமா? கமலை டைரக்ட் பண்ணுவது கார்ப்பரேட்டுகளா?' என்ற கேள்விகள் வந்து விழுந்ததும், ""நான் காந்தியாரின் பி டீம். தனியார் டிவி சேனலில் பிக்பாஸுக்கு மட்டும்தான் என்னை டைரக்ட் பண்ண முடியும். அதே நாடு, நகரம், பெருநகரமாக நாடாக மாற வேண்டு மானால் கார்ப்பரேட்டுகள் கண்டிப்பாக வேண்டும். சிறுகுறு தொழிலும் கார்ப்பரேட்டுகளும் சம அளவில் இருக்க வேண்டும்''’’ என சற்றே கோபத்துடன் கூறிவிட்டு ரூமிற்குள் சென்றுவிட்டார் கமல்.

 

கொஞ்சம் ரெஃப்ரெஷ்ஷான பின் திண்டுக் கல், தேனி மாவட்டங்களின் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் கமல். ம.நீ.ம. கொள்கை பற்றி நிருபர்கள் கேட்டபோது, "கொள்கையை வெளியே சொன்னால், அதை மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்'' என்று சொல்லித் திடுக்கிட வைத்தார்.

 

தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டியில் சிறப்பான வரவேற்பை ஏற்றுக் கொண்டு புறப்பட்ட போதுதான், மக்கள் நீதி மய்யத்திற்கு வரும் தேர்தலில் ‘டார்ச் லைட்’ சின்னம் இல்லையென்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கமல் காதுக்கு வந்தது. அத்துடன் விட்டாலும் பரவாயில்லை, சென்னை ஆவடியில் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சி நடத்தும் ஒருவருக்கு டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதுதான் கமலை மேலும் டென்ஷனாக்கியது. “டார்ச் லைட் ஒதுக்காவிட்டால், கலங்கரை விளக்கம் சின்னத்தில் போட்டியிடுவோம்''என்றார் சற்று குரலை அழுத்தி.

 

ஆளுந்தரப்பும் தேர்தல் ஆணையமும் ஆட்டத்தை ஆரம்பித்ததை உணர்ந்த கமல், பரப்புரைப் பயணத்தில் எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார். மீடியாக்களில் இது விவாதமாக மாறிய நிலையில், அ.தி.மு.க. தரப்பு டென்ஷனானது. "கமலுக்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லத் தகுதியில்லை' என அமைச்சர்கள் வரை அ.தி.மு.கவில் பொளந்து கட்ட, கமலும் சளைக்கவில்லை.

 

"எம்.ஜி.ஆர்., தி.மு.க.வின் திலகமும் இல்லை. அ.தி.மு.க.வின் திலகமும் இல்லை. அவர் மக்கள் திலகம். நான் எம்.ஜி.ஆர். மடியில் வளர்ந்தவன்'' என்று பரப்புரை செய்ததுடன், "தன்னை விமர்சிக்கும் ஆளுந்தரப்பினருக்கு, எம்.ஜி.ஆரை தெரியாது என்றும், தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான பாசம் புரியாது' என்றும் கமல் பேசினார்.

 

தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்களிலும் கமலின் பிரச்சாரம் தொடர்ந்தது. ரஜினியின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், “மக்களுக்காக ரஜினியுடன் கூட்டணி வைப்பதில் எந்த ஈகோவும் இல்லை'' என்றும் கமல் தனது பிரச்சாரத்தில் சொல்லத் தவறவில்லை.

 

ஊழலுக்கு எதிரான அமைப்பாகத் தொடங்கி, ஆட்சியைப் பிடித்தது அ.தி.முக. இன்று அதன்மீதே ஊழல் குற்றச்சாட்டுகள். நீதிமன்றத் தீர்ப்புகள். தண்டனைகள் எனத் தொடர்கின்றன. இந்நிலையில், இந்திய அளவில் ஊழல் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து, டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் "ஆம் ஆத்மி' பாணியில், கமலும் வெளிப்படையான நிர்வாகம், வெளிப்படையான டெண்டர், மக்களின் ஆலோசனை கேட்டு நிர்வாகம் என அறிவித்து வருகிறார்.

 

எம்.ஜி.ஆர் பெயரை முன்னிறுத்தி கமல் தனது பிரச்சாரத்தைக் கையில் எடுத்திருப்பதும், கமலின் சினிமா புகழும் ஆளுங்கட்சியினரை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

 

-பரமசிவன், ஈ.பா.பரமேஷ்வரன், அண்ணல்
படங்கள்: ராம்குமார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.