Skip to main content

ஆளும் கட்சியை அலறவிடும் கூட்டணி கட்சிகள்! காங்கிரசைக் காப்பாற்றும் தி.மு.க.!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் நாங்குநேரி இடைத்தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் சூட்டைக் கிளப்பியுள்ளனர். இரட்டை இலையை எந்தளவுக்கு நம்புகிறாரோ, அதைவிட எடப்பாடியின் கரிசனத்தை ரொம்பவே நம்புகிறார் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன். ஏனெனில் கையில் காசு இல்லாமல் திண்டாடுகிறார். இந்த எம்.எல்.ஏ. பதவிக்கு ஒன்றரை வருஷம்தான் ஆயுசு என்பதால், நாராயணனுக்கு செலவழிக்க அவரது உறவினர்கள் தயங்கி நிற்கிறார்கள். தொகுதியில் முதலிடத்தில் இருக்கும் 61,539 இந்து நாடார் ஓட்டுகளை பெரிதும் நம்புகிறார் அதே இனத்தைச் சேர்ந்த நாராயணன். அதிலும் சாமித் தோப்பு அய்யா வழி பக்தரான நாராயணன், அந்த பக்தர்கள் தன்னை கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்.
 

dmk



அய்யா வழி பக்தர்களை அதிகம் நம்பினால், தொகுதியில் இருக்கும் 20,513 கிறிஸ்தவ ஓட்டுகளை வாங்குவது கஷ்டம் என்பது ஆளும் தரப்பிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பட்டியலின மக்கள். சிலபல காரணங்களால் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. தன்னிடம் எதுவும் கலந்தாலோசிக்காமல் தன்னை புறக்கணிப்பதாக நினைக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனும் சைலண்ட் மோடுக்குப் போய், ஆளும் தரப்பை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார். தாழ்த்தப்பட்ட இனத்தின் உட்பிரிவு இனங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, அந்த இனமக்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
 

admk



இதனால் கொந்தளித்த ஆயர்குளம், அரியகுளம், இலையார்குளம், தேவகன்குளம் உள்ளிட்ட 65 கிராமங்களில் வசிக்கும் பட்டியலின மக்கள் நான்கு நாட்களுக்கு முன்பு வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்டியதால் இலைத் தரப்பு மிரண்டு போயுள்ளது. ஆளும் கட்சியுடன் மல்லுக்கட்டும் காங்கிரசின் ரூபி மனோகரனோ ரூபாயை தாராளமாக இறக்கி வருகிறார். மொத்த பட்ஜெட் 20 சி என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கும் ரூபி மனோகரன், தி.மு.க. நிர்வாகிகளிடம் மொத்த தொகையையும் ஒப்படைத்துவிட்டார். இது காங்கிரஸ் நிர்வாகிகளை சங்கடத்திற்குள்ளாக்கியது. அப்ப எம்.எல்.ஏ.வாக இருந்து இப்ப எம்.பி.யாகியிருக்கும் வசந்தகுமாரும் இப்ப நிற்கும் ரூபி மனோகரனும் சென்னைக்காரர்கள். உள்ளூர்க்காரர்களான நமக்கு இனிமே சீட் கிடைக்காது என்ற விரக்தியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசின் முன்னாள் தலைவர்களான மோகன் ராஜாவும் தமிழரசனும் ஒதுங்கியே இருந்தார்கள்.


"ஆஹா இது நம்ம சம்பந்தி ரூபி மனோகரனுக்கு சிக்கலாச்சே' என நினைத்த எம்.பி. வசந்தகுமார், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களை வளைக்க வேண்டிய விதத்தில் வளைத்துவிட்டார். இப்போதைய கிழக்கு மாவட்டத் தலைவரான சிவக்குமாரும் நன்றாகவே வளைந்துவிட்டார்.

வேட்பாளர் காங்கிரஸ் என்றாலும் களத்தில் சுறுசுறுப்பு காட்டுவதென்னவோ தி.மு.க.வின் தேர்தல் படைதான். ஐ.பெரியசாமி, ஆவுடையப்பன், கருப்பசாமி பாண்டியன், சுரேஷ்ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் என 27 பேர் கொண்ட படை நாங்குநேரியை கலக்கிய நிலையில்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வேன் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் ஆகியவை கூடுதல் தெம்பு தந்துள்ளது. களக்காடு தி.மு.க. ஒ.செ. பி.சி.ராஜன் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த எம்.பி. கனிமொழி, இத்தொகுதிக்கு கலைஞர் செய்த திட்டங்களைப் பட்டியலிட்டுக் கிளம்பியிருக் கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கடைசிநேர "பணி'கள் முக்கியம் என்பதே கள நிலவரம்.
 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.