Skip to main content

'உங்களை எரிப்பதை விட உங்கள் அறிவை எரிப்பது கொடூரம்' - தமிழர் மேல் இலங்கை நிகழ்த்திய அறிவழிப்பு

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

ஒரு உள்நாட்டுப் போர் என்றால், அதுவும் ஒரு இனத்தை குறிப்பாக அழிக்க வேண்டும் என்று நினைத்தால், என்ன செய்யும் அந்த அரசாங்கம்? கொத்துக்கொத்தாக எதிர் இன மனிதர்களை கொன்று குவிப்பார்கள், அவர்களின் புனிதத் தளங்களை சுக்கு சுக்காக குண்டுகளை கொண்டும் வான் தாக்குதலின் மூலமும் தகர்ப்பார்கள், அவர்களின் நிலத்தை அபகரிப்பார்கள் மற்றும் அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பார்கள். இதையெல்லாம் செய்துவிட்டு மேலும் எல்லோருக்கும் பொதுவான நூலகத்தை அழித்ததாக யாரும் கேட்டதுண்டா? அதுவும் இந்த உலகத்தில் அவ்வப்போது நடந்திருக்கிறது.
 

yaazh library

 

 


இந்தியாவை ஆண்ட சில மன்னர்கள் தங்கள் நாடு பிற நாட்டவரால் கைப்பற்றப்பட்டாலும் தங்களது அறிவுச்செல்வமாகிய ஓலைச் சுவடிகள் போன்றவற்றைக் காப்பாற்ற முயன்றதாகவும் பிற மன்னர்களிடம் கௌரவத்தை விட்டு தயவுகூர்ந்து நூலகத்தை மட்டும் விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு நூலகம் என்பது மனிதனின் பரிணாம அறிவை பெருக்கிக்கொள்ளவும், வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும், சேகரித்து வைக்கவும் ஒரு கஜானாவாக இருக்கிறது. இலங்கையில் நடந்துமுடிந்த இனப்படுகொலை பற்றித் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். உலகில் நடந்த மிக மோசமான இனப்படுகொலைகளில் ஈழத்தில் இலங்கை அரசு அரங்கேற்றியதும் ஒன்று.

 

 

 

மே 31, 1981ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஜனநாயகக் கட்சியால் நடத்தப்பட்ட பேரணியில் மூன்று சிங்களக் காவலர்கள் சுடப்பட்டனர். இதில் இரண்டு பேர் மரணமடைந்தனர். இதனைக் காரணமாக்கி அந்தக் கட்சியின் தலைமையிடத்தை அடித்து உடைத்தனர். கட்சித் தலைவரின் வீட்டையும் சூறையாடினர். தமிழர்கள் நான்கு பேரை வீட்டிலிருந்து இழுத்து வந்து நடுரோட்டில் கொன்றனர். தமிழர்களின் இந்து கோவில்களை அடித்து உடைத்தனர். உச்சகட்டமாக ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது.
 

yaazh library


1933ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக பல்வேறு தடைகளைக் கடந்து யாழ்ப்பாண மக்களின் பணத்தால் கட்டப்பட்டு 1959ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்த நூலகத்தையும், அதனுள் இருக்கும் பல வரலாற்று பொக்கிஷங்களையும் எரித்து துவம்சம் செய்ய வேண்டும் என்று இலங்கை இராணுவமே சில நபர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து அனுப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நூலகத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும் இருந்தது, மொத்தமாக 97,000 புத்தகங்கள் வரை இருந்துள்ளது.

 

 

 

இந்த சம்பவத்தை பற்றி எந்த ஒரு இலங்கை பத்திரிகையும் பதிவிடவில்லை. இலங்கை நாடாளுமன்றத்தில் இதை எதிர்த்துக் கேட்ட  தமிழ் அமைச்சர்களைப் பார்த்து பெரும்பான்மை சிங்கள அமைச்சர்கள், இலங்கையில் இருக்க இஷ்டம் இல்லை என்றால் அவர்களது சொந்த நாடான இந்தியாவுக்கே செல்லட்டும் என்று கூறினர். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒரு சிங்கள அமைச்சர், "இந்த நாட்டில் ஏதேனும் வேறுபாட்டை அவர்கள் அறிந்தார்கள் என்றால், அவர்களுக்கு சொல்கிறேன். இது ஒன்றும் அவர்கள் தாய் நாடில்லை, பின் எதற்காக இங்கு நிரந்தரமாக இருக்கிறீர்கள்? ஏன் உங்களது தாய் நாடான இந்தியாவுக்கு செல்ல கூடாது? அங்கு உங்களை யாரும் வேறுபடுத்தி பார்க்கமாட்டார்கள். அங்கு உங்களுடைய கலாச்சாரம், கோவில் எல்லாம் இருக்கும். அங்கே நீங்கள் எஜமானாக இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் விதி" என்று கூறியுள்ளார்.
 

yaazh library


பல புத்தகங்களைச் சுமந்த இந்த நூலகம், இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் தோட்டாக்களையும், எரிக்கப்பட்ட புத்தகங்களையும் சுமந்தது. அரசாங்கம், இது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுகொள்ளாமலும் இருந்திருக்கலாம். பல ஆண்டுகள் கழித்து தமிழர்களின் விடாப்பிடியான அழுத்தத்தாலும் 1998ஆம் ஆண்டு மீண்டும் இந்த நூலகம்  எவ்வாறு இருந்ததோ அவ்வாறே மீண்டும் கட்ட அரசாங்கம் உத்தரவிட்டது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டது. 25,000 புத்தகங்களை மீட்டுகொண்டுவந்தனர். 2003ஆம் ஆண்டு எல்லோர் பயன்பாட்டுக்கும் மீண்டும் இந்த யாழ் நூலகம் திறந்துவைக்கப்பட்டது. ஆனாலும் அழிந்த அறிவுச் செல்வம், வரலாறு எல்லாம் மீண்டும் வருமா?