Skip to main content

காசியிடம் ரொம்பவும் க்ளோஸாக இருந்த பா.ஜ.க.வினர்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

bjp


பெண்கள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காசியின் வழக்கில், நாகர்கோவில் காவல்துறை தனிப்படையினர் ஏற்கனவே விசாரித்தறிந்த புலனாய்வுத் தகவல்களை ஆய்வு செய்து, தங்களது விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர், சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
 


காசி வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கத்தினரும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜனும் தனது கருத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். "பெண்களிடம் இத்தனை கீழ்த்தரமாக காசி நடந்துகொண்டது, குமரி மாவட்டத்திற்கே அவமானம். காசி கைதுடன், இந்த வழக்கை முடித்து விட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. ஆனால், காசியின் கூட்டாளிகள் பலருக்கும், குற்றச் செயல்களில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. காசியின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

suji


காசி வழக்கில், தி.மு.க. தரப்பினரின் சந்தேகப்பார்வை பா.ஜ.க. மீது படர்ந்திருப்பதை அறிந்தோ என்னவோ, "காசியோடு பா.ஜ.க.வினர் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை...'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். இதற்கு, எதிர்வினை ஆற்றும் வகையில் கம்யூனிஸ்ட் தோழர்கள், "காசியிடம் ரொம்பவும் க்ளோஸாக இருந்த அந்த வழக்கறிஞர் பா.ஜ.க. ஆதரவாளர்தானே? எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலத்தான் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு இருக்கிறது''’ என்று சிரிக்கின்றனர்.
 


மனித பாதுகாப்புக் கழக நிறுவனர் டாக்டர் ஜெய்மோகனோ, "பல குடும்பங்களைச் சீரழித்து விட்டான் காசி. அவன் நடத்திய பணவேட்டையில், பினாமிகளுக்கும் பங்கு போயிருக்கிறது. காசியின் பினாமிகளைக் கைது செய்யாவிட்டால், போராட்டம் வெடிக்கும்'' எனச் சீறிவிட்டு, "சி.பி.சி.ஐ.டி.யில் உள்ள நேர்மையான அதிகாரியின் தலைமையில் இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும். அதே நேரத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
 

suji


காசி தி.மு.க.வைச் சேர்ந்தவன் என, 2012-ஆம் ஆண்டு தரப்பட்ட, நாகர்கோவில் நகர 33-ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டை, பொதுவெளியில் பரப்பும் ஒரு தரப்பு, "பாலியல் வழக்கின் மீது அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் “உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டும் போதாது. கட்சியோடும், கட்சியினரோடும் நெருக்கமாக இருப்பவனே கட்சிக்காரன். இந்தக் காசி, தி.மு.க. கட்சியோடோ, கட்சியினரோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவன். அதுவும் அந்த உறுப்பினர் அட்டை, 8 வருடங்களுக்கு முந்தையது'' என்கிறார்கள்.

தொடக்கத்தில், எப்படியாவது காசியைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, போலீஸ் அதிகாரிகளைச் சுற்றி வந்த அவனுடைய கூட்டாளிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் காசிக்கு எதிராகப் புகார் அளிப்பதைத் தடுக்கின்ற காரியத்திலும் ஈடுபட்டனர். தற்போது நிலைமை மாறிவிட்டது. தனிப்பட்ட முறையில், எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாத காசியை பலிகடா ஆக்கிவிட, கூட்டாளிகளே முடிவெடுத்து விட்டனர். ஆதரவு அளித்து வந்தவர்கள் திடீரென கைவிட்டது, காசியின் குடும்பத்தினரை 'அப்செட்' ஆக்கியிருக்கிறது.
 

bjp

 

http://onelink.to/nknapp


காசி பெண்களை வேட்டையாடியபோது, தாங்கள் உடனிருந்த தடயங்கள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளை அழிக்கும் முயற்சியில் கூட்டாளிகள் தீவிரமாக இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த மிரட்சியான சூழ்நிலையில், காசியால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களிடமும் புகார் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரை வளைத்துவிடக்கூடிய அளவுக்கு வல்லமை பெற்றவர்களாக காசியின் கூட்டாளிகள் இருப்பதாகவும், திருமணம் ஆகிவிட்ட பெண்களும், திருமணத்தை எதிர்கொள்ள வேண்டிய பெண்களும், பாதுகாப்பற்ற நிலையில் புகார் தர மறுத்துவிட்டதாகவும், அரசியல் கட்சியினரே சந்தேகங்களை எழுப்புகின்றனர். இத்தனை குளறுபடிகளையும் களைந்து, காசி வழக்கின் விசாரணையை மிக நேர்மையாக நடத்துவதென்பது, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

- மணிகண்டன்

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.