Skip to main content

 இடைக்கால மக்களின் வாழ்விடப் பகுதி, சோழர்கால செப்பு நாணங்கள் கண்டுபிடிப்பு 

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
seeman nkn


            
 கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் வடலூர் என்ற ஊரின் கிழக்கு பகுதியில் உள்ள பழமையான காளிக் கோயில் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான மிகபெரிய வாழ்விடப் பகுதியை ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா. கோமகன் ஆகியோர் கண்டுபிடித் துள்ளனர்.

 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,   வடலூர் காளிக்கோயிளில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவையின் சிற்பம் உள்ளது. இச்சிற்பமானது நான்கடி உயரமும் , மூன்றடி அகலமும் கொண்ட நீள் செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது . சிலையின் தலைப்பகுதியானது ஜடாமகுடத்துடன் மகரபூரிமதால் அலங்கரிக்கப்பட்டும். நெற்றியில் கல்மணிகளால் அழகுப்படுத்தப்பட்ட நெற்றிச்சுட்டியும். கழுத்தில் கண்டிகை , சரப்பளி , ஹாரம் போன்ற அணிகலன்களும். கைகளில் காப்பும் மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீரசங்கிலியும் காணப்படுகிறது. மேலும் கொற்றவை யின் முகம் நீள் வட்டவடிவில் சதைப்பற்றுடன் சாந்த நிலையில் காட்சியளிக்கிறது . இச்சிற்பத்தின் தோல்பகுதி அகன்றும் இடைசிறுத்தும் உள்ளது. கொற்றவையின் வலது கரங்களில் மேலிருந்து கீழாக சக்கரம் , வாள் , கபாலம் போன்றவைகளை தாங்கி உள்ளது. ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்களில் சங்கு , வில் , கேடையம் போன்ற ஆயுதங்களை பிடித்தவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இச்சிலையின் முதுகு புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது. கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக்கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு எருமைத்தலை மீது ஒருகாலை நிலையாக ஊன்றியும் மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது. இச்சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப்பாணியும் , உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப்பாணியின் தாக்கமும் உள்ளதால் இச்சிற்பத்தின் காலம் கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டாகும். இக் கொற்றவை சிற்பத்தின் மூலம் பல்லவர்களுக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்கள் கலைப் பாணியில் சிறு , சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப்பாணியை உருவாக்கினர் என்பதற்கு இச்சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.    

 

se1

         

 வடலூர் காளிக் கோயிலில் இருந்து கிழக்கு , மேற்காக சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டுப் பகுதி காணப்படுகிறது . அப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து 27 x 17 x 7 செ.மீ அளவுள்ள செங்கற்கள் அவ்வப்போது வெளிப்படுகின்றன. இதே அளவுள்ள செங்கற்கள் தாராசுரம் அகழாய்வில் கிடைத்துள்ளது. மேலும் கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 100 ஆடி தூரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை வெளியேற்று வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப் பகுதி வெளிப்பட்டது. அத்தரைதளப் பகுதிக்கு 24 x 12 x 4 செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.  இதே அளவுள்ள செங்கற்கள் பழையாறை அகழாய்விலும் கண்டறியப்பட் டுள்ளது. மேலும் தரைதளத்தை ஒட்டியவாறு வடக்கு தெற்காக இரண்டடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவர் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பள்ளத்தில் இருந்து இடைக்காலத்தை சார்ந்த சிவப்பு நிற பானையோடு கள், ‘’ ட ‘’ வடிவ கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இங்கு கிடைக்கப்பட்டுள்ள ’’ ட’’ வடிவ கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளது. மேலும் காளிக்கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்று களை ஆய்வு செய்ததில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

 

s3

 

சோழர் கால நாணயங்கள் 

           வடலூர் காளிக் கோயிலின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் நடைபெற்ற கள ஆய்வில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட பன்னிரெண்டு செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்நாணயத்தின் முன்பகுதியில் நிற்கும் மனித உருவமும்  அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே ‘’ ஸ்ரீராஜராஜ ‘’ என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ஈழக்காசு என்றும் அழைப்பர் . இந்நாணயங் கள் ஒவ்வொன்றும் எட்டு கிராம் எடை கொண்டவைகளாகும். கி.பி. 985 முதல் கி.பி.1014 வரை சோழப் பேரரசின் மாமன்னனாக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்நணையங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இப்பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். 

 

             இவ்வளவு வரலாற்று பின்புலத்தை கொண்ட வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்க வில்லை. ஆனால் வடலூர் அருகேவுள்ள சந்தவெளிப்பேட்டை மற்றும் கீழூர் கிராமத்தில் மூன்று சோழர் காலத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் கிடைத் துள்ளன. மேலும் வடலூரை போன்று அதனைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய் , சந்தவெளிப் பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கண்டறியப் பட்டுள்ளன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.