Skip to main content

உடையும் பிம்பம்... குஜராத் மாடலின் கோர முகம்...

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

 

gujarat covid mismanagement crisis

 

2001 முதல் 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடி, அக்காலகட்டத்தில் முன்வைத்த ஒரு முழக்கம் 'துடிப்பான குஜராத்'. குஜராத்தை இந்தியாவின் முன்மாதிரியான மாநிலமாக மாற்றுவோம் என முழங்கிய மோடி, 13 ஆண்டுகாலம் அம்மாநில முதல்வராகத் தனது பணியை முடித்து இந்தியாவின் பிரதமராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார். 2014 -ல் வீசியதாகச் சொல்லப்படும் மோடி அலையில், பாஜகவினரால் அதிகளவில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் 'குஜராத் மாடல்'. இந்தியாவின் சிறந்த மாநிலம் குஜராத் என்றும், அம்மாநிலத்தில் சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தவர் மோடி என்றும் ஒரு பிம்பம் இப்பிரச்சாரத்தில் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக மெல்ல விரிசல் விட்டுவந்த 'குஜராத் மாடல்' என்ற இந்த பிம்பம் தற்போதைய கரோனா விவகாரத்தால் முற்றிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது.

 

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ், கடந்த சில வாரங்களாகப் பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களில் இவ்வைரஸின் பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதில் வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை இவற்றைக் கடந்து மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மை, மருந்து தட்டுப்பாடு, இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய போதிய வசதியின்மை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, மருந்துகளின் கள்ளச்சந்தை பெருக்கம் எனத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாடல் மாநிலம் என அழைக்கப்பட்ட குஜராத் மாநிலம். 

 

gujarat covid mismanagement crisis

 

அம்மாநிலத்தில் நேற்றைய புள்ளிவிவரங்களின்படி, 24 மணிநேரத்தில் 8,152 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகளும், 81 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இது, அம்மாநிலம் இதுவரை கண்டிராத உச்சபட்ச பாதிப்பாகும். பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், செய்வதறியாது திணறிப்போய் நிற்கிறது குஜராத் மாநிலம். கரோனாவால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையைக் கையாள போதிய வசதி இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், களநிலவரமோ வேறொரு வகையான தகவலை நாட்டிற்குத் தந்துகொண்டிருக்கிறது. 

 

கரோனா பாதித்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கி வரும் மக்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான போதிய படுக்கை வசதி கூட இல்லாத சூழலிலேயே குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் இருக்கின்றன. அப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரண தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை எனப் பல இடர்பாடுகளைச் சந்தித்தே நோயாளிகள் சிகிச்சை பெறவேண்டியிருக்கிறது. போதிய வசதியின்மையால் பல மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கு ஒன்றாக சிகிச்சையளிக்கும் சூழலும், மருத்துவமனை வராண்டா தரையில் நோயாளிகளைப் படுக்க வைத்து சிகிச்சையளிக்கும் சூழலும் நிலவிவருகிறது. 

 

gujarat covid mismanagement crisis

 

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதென்பது இவ்வளவு கடினமானதென்றால், ஆம்புலன்ஸை பிடித்து மருத்துவமனைக்குச் செல்வதென்பதே பல பகுதிகளில் இதனைவிடக் கடினமாக இருக்கின்றது. பல இடங்களில் குறைவான ஆம்புலன்ஸ்கள் இருப்பதனாலும், சில இடங்களில் ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாலும் ஆம்புலன்ஸை பிடிப்பதே குதிரைக் கொம்பாகிவிடுகிறது இதுபோன்ற இடங்களில். உதவி எண்ணுக்கு அழைத்துவிட்டு ஆம்புலன்ஸுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பது, மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பல மணிநேர காத்திருப்பது என அல்லல்படும் மக்கள், வைரஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தினை பெறவும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.   

 

கடந்த வாரம் அம்மாநிலத்தில் ஏற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு காரணமாக, ஒரே நாளில் இம்மருந்தினை வாங்க நோயாளிகளின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளின் முன்பு கூடியது மிகப்பெரிய பேசுபொருளானது. கடந்த மாதமே குஜராத் மாநில உயர்நீதிமன்றம் அம்மாநில அரசிடம், கரோனா தடுப்பு பணிகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மாநில அரசோ, நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், வைரஸ் பரவலைக் கையாள போதிய வசதிகள் உள்ளதாகவும் தொடர்ந்து கூறிவந்தது. ஆனால், மக்களோ அம்புலன்ஸுக்கும், மருத்துவமனை படுக்கைக்கும், மருந்துகளுக்கும் காத்திருக்கும் அவலமே அங்கு நிலவி வருவதாக உள்ளூர்வாசிகள் குமுறுகின்றனர். இப்படி ஒவ்வொரு காத்திருப்பும் மக்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றன. 

 

gujarat covid mismanagement crisis

 

ஆனால், இந்த காத்திருப்புகளை எல்லாம் விட மக்கள் மனதை மேலும் ரணமாக்கியிருக்கக்கூடிய மற்றொரு காத்திருப்பு, உடல் தகனங்களுக்கான காத்திருப்பு. கரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் இறந்த தங்களது உறவினர்களின் உடலுக்காக மருத்துவமனையில் காத்திருந்து அவற்றைப் பெறும் மக்கள், அந்த உடல்களை எரியூட்டுவதற்கான தகன உலைகளைக் கண்டறிவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அம்மாநிலத்தின் பல தகன உலைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு உலையின் இரும்பு அடைப்புகள் உருகும் நிலைக்குச் சென்றுள்ளன. தகன உலைக்காகப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்ற சூழலில், பலர் திறந்த மைதானங்களில் வைத்தே உடல்களை எரியூட்டும் சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகின்றன. அதேபோல, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ மற்றும் பார்சி மக்களும் உடலைப் புதைக்க முடியாத சூழலில் உடலைத் தகனம் செய்ய அம்மத சபைகள் அனுமதியளித்துள்ளன. 

 

இப்படி மக்கள் பல்வேறு இன்னல்கள் சந்தித்துக் கொண்டிருக்கையில் கரோனா பாதிப்பைப் பயன்படுத்தி பல்வேறு வகையான ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளும் அம்மாநிலத்தில் நடந்தேறி வருகின்றன. அகமதாபாத்தில், கரோனாவால் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல்களைத் திருடிய அரசு மருத்துவமனையின் ஒப்பந்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, 800 ரூபாய் மதிப்புள்ள ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்து குஜராத்தின் கள்ளச்சந்தைகளில் ரூ.12,000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில காவல்துறை சிலரைக் கைதும் செய்துள்ளது. திருட்டு, கள்ளச்சந்தை இவற்றையெல்லாம் கடந்து போலி கரோனா சோதனைகளும் அம்மாநிலத்தில் நடைபெறுவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

gujarat covid mismanagement crisis

 

இந்த வாரத் தொடக்கத்தில், அகமதாபாத்தின் கோடாசர் பகுதியில் 3,000 க்கும் மேற்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்திய ஒரு ஆய்வகத்தை, அங்குச் சோதனை செய்துகொண்டவர்கள் புகார்களின் அடிப்படையில் அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அந்த ஆய்வகத்தில் ஆன்டிஜென் சோதனைகளை நடத்துவதற்கு உபகரணங்கள் எதுவுமே இல்லாததும், மக்களுக்கு அந்த ஆய்வகத்தினர் போலியான சோதனை முடிவுகளைத் தெரிவித்து, பணம் சம்பாதித்து வந்துள்ளதும் கண்டறியப்பட்டது. 

 

இப்படி, குஜராத்தில் மக்கள் கரோனாவுடனும், அடிப்படை வசதியின்மையுடனும் போராடிக்கொண்டிருக்கையில், இவ்வாரம் நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகளின் கேள்வியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவசர அவசரமாக டி.ஆர்.டி.ஓ உதவியுடன் 900 படுக்கை வசதி ஏற்பாடு செய்வது, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்வது, ரெம்டெசிவிர் மருந்து இருப்பை உறுதி செய்வது எனக் கடந்த வாரம் திடீர் வேகம் காட்டியது குஜராத் மாநில அரசு. நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்க மருந்துகள், ஊசி மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத மருத்துவ வல்லுநர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்கூறி அகமதாபாத் மருத்துவச் சங்கம் குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. பிரதமரால் சிலாகித்துக் கூறப்பட்டு வந்த மாடல் மாநிலமான குஜராத்தின் வளர்ச்சி எனும் பிம்பத்தை கரோனா இன்று ஆட்டம்காண வைத்துள்ளது. 

 

 

 

Next Story

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
BJP MLA says Self-respect is important and he Resigned his position in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தேர்தலில் போட்டியிடவில்லை” - காங்கிரஸ் வேட்பாளர் திடீர் முடிவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தனது உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், வரும் மே 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை கடந்த 12ஆம் தேதி அன்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் குப்தா, அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தது. 

Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

தேர்தல் தேதி நெருங்கும் இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோஹன் குப்தா அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மோசமான உடல்நிலை காரணமாக, எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான், வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். ரோஹன் குப்தா போட்டியிடுவதாக இருந்த அகமதாபாத் தொகுதியில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஹஸ்முக் பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள  26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.