Skip to main content

நிபந்தனை வைத்த இ.பி.எஸ்... சரணடைந்த ஓ.பி.எஸ்.! - சசிகலா பராக்! 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

ddd

 

ரஜினியின் அரசியல் துறவு அறிவிப்புக்குப் பிறகு அடுத்த ஆப்ஷனாக சசிகலாவை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்த அதிகாரி ரூபா, கர்நாடகத்தின் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ரூபா உள்துறைச் செயலாளராக இருந்தால் சசிகலாவின் விடுதலையை எதிர்ப்பார் எனச் சொல்லப்பட்டது. அந்த ரூபாவை உள்துறைச் செயலாளர் பதவியிலிருந்து, கைவினைப் பொருட்கள் உற்பத்தி துறைக்கு மாற்றியிருக்கிறது எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பா.ஜ.க. அரசு.


 
"சசிகலாவின் விடுதலைக்கும் ரூபாவின் மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மாற்றியது ஒரு சாதாரண மாற்றம்தான். ரூபா தேவையில்லாமல் சில நடவடிக்கைகளை ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்டார். அவரை உள்துறைச் செயலாளர் பதவியில் வைத்திருந்தால் ஆபத்து என ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்கினார்கள். அதனால்தான் அவர் மாற்றப்பட்டார் எனச் சொல்லப்பட்டாலும், ரூபாவின் மாற்றம் சசிகலாவுக்காகச் செய்யப்பட்டது'' என்கிறார்கள் கர்நாடக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

கர்நாடக சிறையில் இப்பொழுது சசிகலா கிட்டத்தட்ட விடுதலையாகிவிட்டதைப் போல ஃப்ரீயாக நடந்துகொள்கிறார். அவரை சந்திக்க வருபவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் கர்நாடக சிறை அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். (நெருக்கடி இருந்தபோதே வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு வந்தவராயிற்றே!) தற்போது தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் ரூபா உள்துறைச் செயலாளராக இருக்கும்பொழுது நடக்காத விஷயங்கள். அங்கிருந்தபடியே அனைவரிடமும் சசிகலா பேசுகிறார். அரசியல் நடவடிக்களை மேற்கொள்கிறார். அதற்கு உதாரணமாக தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

"எடப்பாடி பழனிசாமி சில தினங்களாக ஊடகங்களில் 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் சில விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார். அதில் அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று திடீரென ஓ.பி.எஸ்.ஸும் ஒரு விளம்பரத்தை எடப்பாடிக்குப் போட்டியாகக் கொடுத்தார். 'ஓ.பி.எஸ். என்கின்ற தலைவரின் பலம் சொல் அல்ல செயல்'. 'அவரின் வெற்றி அவருக்கானது மட்டுமல்ல மக்களுக்கானது'. 'ஜெயலலிதா தான் நடத்திய ஆட்சிக்கு மட்டுமல்ல கட்சிக்கும் ஓ.பி.எஸ்.சையே பொருளாளராக்கி மாநிலத்தின் கஜானா பெட்டியின் கை சாவியோடு, அ.தி.மு.க.வின் பொருளாதார நிர்வாகத்தையும் ஓ.பி.எஸ் கரங்களிலேயே ஒப்படைப்பதன் மூலம் நேர்மைக்கும் கண்ணியத்திற்கும், நிர்வாகத்திறமை பெயர் பெற்றவர் ஓ.பி.எஸ். அவரை மூன்று முறை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்' என ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறார்.

 

திடீரென ஓ.பி.எஸ். இவ்வாறு ஒரு விளம்பரத்தை இ.பி.எஸ்.ஸுக்கு போட்டியாகக் கொடுத்திருப்பதன் மூலம், இ.பி.எஸ்.-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க பா.ஜ.க. மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்கிற நிலையை தமிழகம் முழுவதும் ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் நிலைநாட்டி இருக்கிறார் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கொடுக்கும் விளம்பரங்கள் ஓ.பி.எஸ்.ஸை பாதித்திருக்கிறது என்பது மட்டுமல்லாமல், பா.ஜ.க.வின் குரலோடுதான் ஓ.பி.எஸ்-சின் குரலும் ஒத்துப்போகிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

இது இ.பி.எஸ்.சுக்கு எதிரான குரல் மட்டுமல்ல சசிகலாவுக்கு ஆதரவான குரல். சசிகலா வந்தால் அ.தி.மு.க.வில் எந்த மாற்றமும் இருக்காது என இ.பி.எஸ். சொல்லிவருகிறார். சசிகலாவைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாத ஓ.பி.எஸ்., கட்சிக் கூட்டங்களில் பேசும்போது 'சசிகலா வந்தால் அ.தி.மு.க.விற்கு நல்லதுதான்' என்று பேசி வருகிறார். சசிகலாவை வரவேற்பதுடன் சசிகலாவுடன் இணைந்து இ.பி.எஸ்க்கு செக் வைக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு பாரதிய ஜனதாவின் மறைமுக ஆதரவும் இருக்கிறது என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

இ.பி.எஸ்.சுக்கும் சசிகலாவுக்கும் இடையே உள்ள ஒரே ஒரு நெருடல் டி.டி.வி தினகரன்தான். அதனால்தான் டி.டி.வியை சைலன்ட்டாக்கி வைத்திருக்கிறார். வெளியே வரும் சசிகலா அ.தி.மு.க.விற்குள் பழையபடி நுழைய காத்திருக்கிறார். அதற்காக பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களுடன் பேசிவருகிறார். குருமூர்த்தி போன்றவர்கள் சசிகலா மறுபடியும் அ.தி.மு.க.விற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குருமூர்த்தியை மீறி அ.தி.மு.க.விற்கு வரும் வியூகத்தில் உள்ள சசிகலாவிடம் ஓ.பி.எஸ் ஏற்கனவே தூது அனுப்பி சரணடைந்துவிட்டார்.

 

இ.பி.எஸ்.ஸும், தினகரன் ஒதுக்கப்படுவாரேயானால் சசிகலாவை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்பது இ.பி.எஸ் சசிகலாவுக்கு வைத்திருக்கும் நிபந்தனை. இந்த விஷயத்தில் இன்னமும் முடிவெடுக்காத சசிகலாவைத் தூண்டும் விதத்தில் ஓ.பி.எஸ், நானும் முதல்வர் ரேஸில் இருக்கிறேன் என இந்த விளம்பரத்தைக் கொடுத்து அ.தி.மு.க.வில் முதல்வர் பதவி குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

 

இந்நிலையில், "அ.தி.மு.க. இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறது. எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டல நிர்வாகிகள் வேகமாக வேலை பார்க்கிறார்கள். அதேநேரத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதியில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த அ.தி.மு.க. தலைவர்கள் வேலை பார்க்கிறார்கள். அ.தி.மு.க. நியமித்த வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களில் ஒருவர் கூட முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளராக வருவதை நாங்கள் விரும்பவில்லை'' என்கிறார்கள் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக வேலைசெய்யும் தென் மாவட்ட அ.தி.மு.க.வினர்.

 

இந்நிலையில், ஓ.பி.எஸ்.சின் இந்த பா.ஜ.க ஆதரவுபெற்ற இ.பி.எஸ் எதிர்ப்பு நிலையை சசிகலா வகையறாக்கள் விரும்பவில்லை. ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு ஆதரவைத் தெரிவித்தாலும் அவர் பா.ஜ.க. சொல்படி கேட்பவர். பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சசிகலா முன்பு கூவத்தூரில் நடந்த சம்பவங்களை மறக்கவில்லை. ஓ.பி.எஸ் போல வெளிப்படையான பா.ஜ.க. ஆதரவு நிலையை சசிகலா மேற்கொள்ளமாட்டார். பா.ஜ.க.வுடன் ஒருவிதமான அண்டர்ஸ்டாண்டிங் உடன் செயல்பட சசிகலா சம்மதித்தாலும் வெளிப்படையாக அ.தி.மு.க.வை பா.ஜ.க. கட்டுப்படுத்துவதை சசிகலா விரும்பவில்லை.

 

cnc

 

ஓ.பி.எஸ்.ஸையோ எடப்பாடியையோ பகைத்துக் கொள்ளவும் சசிகலா தயாராக இல்லை. தினகரனின் அ.ம.மு.க.வை அப்படியே வைத்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட சசிகலா தயாராகி வரும் நிலையில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரையும் சம தூரத்தில் வைத்து அ.தி.மு.க.வை இயக்குவதைத்தான் அவர் விரும்புவார் என்கிறது அவரது சொந்த பந்தங்கள்.

 

இந்நிலையில், "எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட வில்லையென்றால், ஓ.பி.எஸ் மூலம் கட்சியை மறுபடியும் உடைப்போம். 'இ.பி.எஸ்.ஸும் சசிகலாவும் ஒன்றாகச் செயல்படட்டும்' என ஒரு நகர்வையும், இ.பி.எஸ் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், 'ஓ.பி.எஸ் சசிகலாவும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தையே முடக்குவோம்' என்கிற இன்னொரு நகர்வையும் பா.ஜ.க. யோசித் துக்கொண்டு காய் நகர்த்திவருகிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.