Skip to main content

20 ரூபாய் டோக்கன்! தயங்கும் தினகரன்! ஆர்.கே.நகர் யாருக்கு?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

ddd

 

ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்ததால் வட சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் தொகுதி தமிழகத்தின் வி.வி.ஐ.பி. தொகுதிகளில் ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடித்து சுயேட்சையாக வெற்றிபெற்றவர் அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். சிட்டிங் எம்.எல்.ஏ.வான தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்க தயக்கம் காட்டி வருகிறார்.

 

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்திலிருந்த ஜெயலலிதா விடுதலையானதும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலில் ஜெ. வென்றார். அவரது ஆணைப்படி, தொகுதியின் பொறுப்பாளராக இருந்த வெற்றிவேல், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, ஜெ. மூலம் நிவர்த்திசெய்து, மக்களிடம் செல்வாக்குடன் இருந்தார்.

 

ஜெ. மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, சசிகலாவின் விசுவாசியாக இருந்த வெற்றிவேலின் செல்வாக்கும் களப்பணியும்தான், இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் நின்ற தினகரனை வெற்றிபெறச் செய்தது. ஆளுங்கட்சி பிறகு தங்கியது. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு டெபாசிட் போனது.

 

கரோனா பெருந்தொற்றில் வெற்றிவேல் இறந்துவிட்டார். வெற்றிவேல் இல்லாததும், இடைத்தேர்தலின்போது 20 ரூபாய் டோக்கன் கொடுத்து உறுதியளித்ததை நிறைவேற்றாததும், கரோனா நெருக்கடி காலத்திலும் தொகுதிக்குள் எட்டிப் பார்க்காததும் தினகரன் மீது தொகுதிக்குள் கடும் அதிருப்தியாக மாறி இருக்கிறது. இதனால் மீண்டும் போட்டியிடத் தயக்கம் காட்டுகிறார் தினகரன். "முக்குலத்தோர் அடர்த்தியாக உள்ள தேனி மாவட்டத்துக்கு இந்தமுறை தாவிவிடலாம்' எனக் கூட்டிக்கழித்துக் கணக்குப் போடுகிறது அவரது தரப்பு.

 

தி.மு.க.வில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், தினகரனை எதிர்த்துப் போட்டியிட்ட மருதுகணேஷ் ஆகியோர் மீண்டும் சீட் கேட்டு மல்லுக் கட்டுகிறார்கள். இவர்களுக்குப் போட்டியாக, சீட் கேட்டு களமிறங்கியிருக்கிறார் வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எபினேசர். உதயநிதியின் ஆதரவும் சிபாரிசும் இவருக்கு அதிகமாக இருக்கிறது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இளைய அருணா, ராயபுரம் தொகுதியைக் குறி வைப்பதால் இத்தொகுதியில் அவர் களமிறங்கவில்லை.

 

அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் தனது உறவினரும், மா.செ.வுமான ராஜேஷுக்கு சீட் கொடுக்க ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சிடம் அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லி தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் ராஜேஷ். ஆனால், மதுசூதனனின் ஜென்ம எதிரியான அமைச்சர் ஜெயக்குமார், ராஜேஷுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அ.தி.மு.க.வில் அண்மையில் இணைந்த காங்கிரசின் வடசென்னை மாவட்ட முன்னாள் தலைவர் ராயபுரம் மனோ மற்றும் நடிகை விந்தியா ஆகியோரை எடப்பாடியிடம் சிபாரிசு செய்திருக்கிறார் ஜெயக்குமார். ஆர்.கே.நகர் சீட்டுக்கு அ.தி.மு.கவில் பலத்த போட்டி நடக்கிறது.

 

 


 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.