'உறியடி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விஜய் குமார். அப்படத்தில், இயக்கம் மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து, இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலும் வெகுவாகப் பேசப்பட்டு, புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'உறியடி 2' படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நடிகராக விஜய் குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இப்படத்தை, 'ரீல் குட் பிலிம்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஆவார்.
படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வை இறுதிசெய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.