Skip to main content

மோகன்லாலுடன் மீண்டும் கைகோர்க்கும் ‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

mohanlal

 

ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அப்படத்தைத் தொடர்ந்து, மோகன்லால் - ஜீத்து ஜோசஃப் கூட்டணி 'ராம்' படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருந்தன. கரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி படத்தின் பணிகளைத் தொடர்வதில் சிக்கல் எழுந்ததால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

 

அதன் பிறகு, ஜீத்து ஜோசஃப் - மோகன்லால் கூட்டணி ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்தது. மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இப்படம் சில மாதங்களுக்கு முன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகமும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

 

இந்த நிலையில், மோகன்லால் - ஜீத்து ஜோசஃப் கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய த்ரில்லர் வகை படமாக இப்படம் உருவாகவுள்ளது. '12th Man' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகளைத் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்