Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #09

Published on 13/05/2022 | Edited on 14/05/2022

 

iraval edhiri part 9

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

“என்ன ஸார் செய்யப்போறோம்?” சிவா படித்துவிட்டு போயிருந்த காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு தன் அறையில் அடைபட்ட புலியாய் உட்கார்ந்திருந்தான் மாறன். வேந்தனின் குரல் கேட்டு நிமிர்ந்தான். அந்த நகத்தில் எழுதப்பட்டு இருந்த செய்தியில் அவனுக்குமே அதிர்ச்சி. 

‘இன்னும் சில நாட்களுக்கு நமக்குள் நடக்கப்போகும் கண்ணாமூச்சியின் விடை நீ என்னை சந்திக்கும் தருணத்தில் உனக்கு கிடைக்கும். ஆனால், அந்த சந்திப்பை வெகு எளிதாக என்னால் தந்துவிட முடியாது மாறன். குறித்து வைத்துக் கொள் மிக மோசமான விளைவுகளை சந்திக்கப் போகிறாய். நான் விரித்திருக்கும் வலையில் விட்டிலென விழப்போகும் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது. ஏன் இவர்களை பட்டாம்பூச்சிகள் என்று அழைக்கிறேன் என்று பார்த்தாயா? அதன் ஆயுளும் குறைவுதான். விஷம் தோய்க்கப்பட்ட கத்தியின் பளபளப்பிற்கு தன் உயிரைத் தரக் காத்திருக்கும் அவர்களின் சார்பாக நீ வெற்றிபெற வாழ்த்துக்கள். இத்தனை நெருங்கிவிட்டோம் உனக்கு என் பெயர் தெரிய வேண்டாமா? ஸ்பைடர்’ என்று எழுதி முடித்திருந்தது அந்த செய்தி. 

“இது ஏதோ சைக்கோ விவகாரமா? யாரிவன் மாறன் எனக்கென்னவோ இன்னும் பிள்ளைகளின் கடத்தலும் அவர்களின் இறப்பும் தொடரும் என்பதற்கு இது ஒரு க்ளூ என்றே தோன்றுகிறது? விரைவில் ஏதாவது செய்ய வேண்டும். சீக்கிரம் மாறன், உங்களுக்கு முழு அதிகாரம் தருகிறேன். எந்த போர்ஸை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள், எனக்கு சீக்கிரம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.” கமிஷனர் பொறுப்பை அவன் தலையில் இறக்கிவிட்டார். மாறன் அப்போதிலிருந்தே படு டென்ஷனில் இருந்தான். 

“என்ன செய்யப்போகிறோம்?” என்ற வேந்தனின் கேள்வியில் நிமிர்ந்தவன்.  

“வேந்தன் இந்த கேஸ் பற்றிய தரவுகள் உள்ள பைலை எடுங்க விசாரணையை வேறொரு கோணத்தில் தொடங்கலாம். ரவி தவிர்த்து மற்ற பிள்ளைகள் காணாமல் போன இடம் பற்றியும், நம் ஆட்கள் அங்கே யார் யாரை விசாரித்தார்கள் என்ற தகவல்களும் எனக்கு வேணும். அவங்களோட வாக்குமூலங்களை வைத்து மீண்டும் ஆராயலாம்.” 

“ஸார் மற்ற எந்த இடத்திலும் கடத்தலுக்கு உண்டான எதுவும் பதிவாகலை, ஆனா கடைசியா ரவியைக் கடத்தினப்ப மட்டும் அவனோட ஸ்கூலுக்கு அருகாமையில் நீதியரசர் வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு கருப்பு காண்டஸா ரொம்ப நேரமா நின்றுகிட்டு இருந்ததா ஒரு தகவல் இருக்கு. ஒருவேளை அது பிள்ளை ஏற்றிப்போக பேரண்ட்ஸ் ஹையர் பண்ண வண்டியாக் கூட இருக்கலாம்.” 

“அதை யார் பார்த்தாங்களாம்?” 

“ஸ்கூல் வாட்ச்மேன் சொன்னார். நான் அவரை மீண்டும் விசாரிக்கறேன் ஸார்.” வேந்தன் ஒரு சல்யூட்டை விநியோகித்து விட்டு வெளியேற, இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். கான்ஸ்டபிளிடம், “என்ன கேஸ்?” என்றான் வேந்தன். 

“ஸார் மயிலாப்பூர்ல இருக்கிற ஸ்கூல் வாசல்ல இவங்க இரண்டுபேரையும் பிடிச்சோம் இந்த பசங்க அடிக்கடி பள்ளிக்கூடம் விடற நேரமா பொம்பளைப் பிள்ளைகளைத் தொந்தரவு தர்றதா ஸ்கூல் நிர்வாகத்திடம் இருந்து கம்ப்ளைண்ட் வந்திருக்கு. இன்னைக்கும் இதே மாதிரி போயிருக்காங்க ஸ்கூல் வாட்ச்மேன் அங்கியிருக்க வேன் டிரைவர்கள் எல்லாம் பிடிச்சிட்டு வந்து விட்டுப் போயிருக்காங்க.” அந்த பையன்களின் முகத்தை கூர்ந்து கவனித்தான் வேந்தன். பிறகு அருகிலிருந்த பெண்ணைப் பார்த்து “இவங்க?” என்றான். 

“அவங்க அக்காவாம் பிடிச்சிட்டோம்னு தெரிந்ததும் வந்திருக்காங்க.” 

“மயிலாப்பூரில் எந்த ஸ்கூல்?” 

“பள்ளியின் பெயரைச் சொல்லவும் சரக்கென்று நிமிர்ந்தான் வேந்தன். வாட்ச்மேன் எங்கே?” 

“ஸ்கூல் பிரின்சிபல் வர்றாங்களாம் அழைத்து வரப்போயிருக்கார்.” வேந்தன் அந்த பசங்களை கவனித்தான். அழுக்கேறிய பேண்ட், கோடுபோட்ட சட்டை, அது பாதி இன் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் பேண்டின் இறக்கத்தின் வழியே ஜாக்கி லேபிள் தெரிந்தது. தலையில் இரண்டு பிரிவாக முடியை விரித்து கலரிங் செய்திருந்தார்கள். காதுகளில் வளையம், கண்கள் ஒருவித கிறக்கத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் தெனாவட்டாக நின்றிருந்தார்கள். 

 

அந்தப் பெண்மணி வேந்தனைப் பார்த்ததும், “அய்யா தெரியாம பண்ணிட்டாங்க கொஞ்சம் மன்னிச்சி உட்டுடுங்கய்யா” என்று கெஞ்ச துவங்கிய அந்த வேளை வாட்ச்மேன் உள்ளே நுழைந்தார். 

“ஸார் தெரியாம எல்லாம் பண்ணலை ஸார். கிட்டத்தட்ட ஒரு மாசமா பிள்ளைங்க வெளியே வர்ற நேரமா வர்றது, ஒரு வண்டியொன்னு வைச்சிகிட்டு சத்தமா ஹார்ன் அடிக்கிறதும், கிராஸ் பண்ணும் போது உரசுறாமாதிரி போறதும், அசிங்கமா சைகைகள் காட்டுறதும்ன்னு இவனுங்க அக்கப்போரு தாங்கலை. எப்படியாவது பிடிக்கணுன்னு நம்ம ஏட்டய்யா கூட இரண்டு நாள் ரோந்து வந்தாங்க. கரெக்டா அன்னைக்குப் பார்த்து இரண்டு பேரும் எஸ்கேப், இன்னைக்கு கையும் களவுமா பிடிபட்டுடாங்க. விடாதீங்க ஸார், திமிரு புடிச்சவங்க.” அவர் காட்டமாய் பேசினார். 

 

வேந்தன் பிரின்சியிடம் திரும்பி, “மேடம் நீங்க ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுத்திடுங்க என்றான். இவனுங்களை லாக்கப்பில் தள்ளுங்க.” 

 

அவர்கள் திமிற பளீரென்று கன்னத்தில் ஒன்று வைத்தான். இனி இங்கே நிற்பது அத்தனை உசிதமல்ல என்று அந்தப்பெண் வாசலை நோக்கி நகர, வாட்ச்மேன் அந்த பெண்ணைப் பார்த்து சொன்னான். “ஸார் இந்தம்மாவையும் விடாதீங்க. அடிக்கடி ஒரு ஆளோட நம்ம ஸ்கூல் பக்கம் வண்டியிலே போகும், சில நேரத்திலே பிள்ளைங்க வரும்போது வீடியோவும் போட்டோவும் எடுத்து என்கிட்டே திட்டு கூட வாங்கிச்சி, அதைக் காரணமா வைச்சி அன்னைக்கு... அதான் அந்த ரவி காணாம போனானே அப்போ வேணுன்னே என்னை வெறுப்பேத்துவதற்காகவே பத்து தடவை போச்சு. அப்பப்போ கேமிராவைத் தூக்கிப் பிடிச்சா மாதிரியே, வண்டியிலே போனாங்க.” என்று வாட்ச்மேன் சொல்லவும் அவள் வாசற்பக்கம் ஓடப் பார்த்தாள். வேந்தன் ஒரே எட்டில் அவளைப் பிடித்தான். மாறன் இருக்கும் அறை நோக்கி மூவரும் சென்றார்கள். 

“சார் ரவி காணாமல் போன ஸ்கூல் வாட்ச்மேன்,” என்று ஆரம்பித்து விவரங்களை ரத்தினசுருக்கமாக சொன்னான் வேந்தன். மாறன் அந்த பெண்ணின் மொபைல் போனை வாங்கச் சொன்னான். பேட்டன் லாக்கை விடுவிக்க சொல்லியதும் அவள் மறுக்க மாறனின் கண்ணசைவில் ஒரு பெண் போலீஸ் உள்ளே நுழைந்தாள். முதற்கட்ட விசாரணையிலேயே அவளின் உதடு கிழிந்து ரத்தம் வழிந்து இறுக்க கட்டிய தலைமுடி கவிழ்ந்து தொங்கியது. 

“சொல்லிடறேன் சார். நாங்க ஸ்கூலுக்குப் பின்னாடி உள்ள ஏரியால இருக்கிறவங்க. நம்ம பசங்க அடிக்கடி அந்த ஸ்கூலு பொண்ணுங்களை சைட் அடிக்க போவாங்க. சில பிள்ளைங்க அவனுங்க கூட நம்ம குப்பத்துக்கும் வரும் அப்போ.....” 

 

மீண்டும் ஒரு அறை வாங்கினாள் அதற்குள் அவளின் போன் கையகப்படுத்தப்பட்டது. அதில் சில புரோக்கர்களின் எண்கள் வாட்ஸ்அப்புகளில் பள்ளி பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் இருந்தது. 

“இவளை அரெஸ்ட் பண்ணுங்க.” என்று மீண்டும் மொபைலை ஆராய்ந்தான் அதில் கேலரியில் அந்தப்பள்ளியின் புகைப்படமும் கருப்புநிற காண்டஸாவின் காரின் புகைப்படமும் வெவ்வேறு கோணங்களில் பதிவாகியிருந்தது. 

 

மாறன் ஷார்ப்பானான். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் தன் மொபைலுக்கு அனுப்பி சிஸ்டத்தில் ஏற்றினான். நான்கைந்து புகைப்படங்களில் அந்த கார் தெளிவாகவே தெரிந்தது. பக்கவாட்டுத் தோற்றம் பாதி வண்டியின் எண் கூட லேசாக தெரிந்தது. முன்பக்கம் யாரோ கருப்புக் கண்ணாடிப் போட்டு அமர்ந்திருந்தார்கள் .

 

இவன்தானா நாம தேடுவது என்று ஸ்கீரினைப் பெரியதாக்கினான். அரைகுறையாக தெரிந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டான். 

“வேந்தன் இவளை லாக்கப்பில் போடுங்க அப்பறம் விசாரிக்கலாம் இந்த போனை நம்ம சைபர் கிரைமில் கொடுத்து தரவா செக் பண்ண சொல்லுங்க, நிறைய தகவல்கள் இருக்கு ஜாக்கிரதை,” வாட்ச்மேனிடம் திரும்பினான். 

“நீங்க ஸ்கூல் எதிரில் பார்த்த கருப்பு காண்டஸா இதுதானா சொல்லுங்க.” 

 

அவர் கொஞ்சம் நெற்றி சுருக்கி, “ஸார் ஸ்கூல் வாசல்ல அதுவும் ஸ்கூல் விடற நேரம் வெளி வாகனங்கள் அநேகமாக நிக்காது வர்றதும் பிள்ளைகளை பிக்கப் பண்ணிக்கிறதுமா மூவிங்லேயேதான் இருக்கும். அதனால இந்த வண்டி ஸ்கூல் கேட்கிட்டே இல்லை, இது .... ஹா நியாபகம் வந்திடுச்சி ஸார். நம்ம ஜஸ்டிஸ் வீட்டுக்கு பக்கத்தில இந்த கார் நின்னது. அது பார்க்கிங் ஏரியா இல்லை. அதனால நானும் என்ன ஏதுன்னு கேட்டுக்கலை ஸார். அந்த பையனைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சதா ஸார்?” 

“விசாரிக்கிறோம் நாங்க கூப்பிடும் போது நீங்க விசாரணைக்கு வரணும்.” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு அந்த வண்டி தொடக்க மற்றும் முடிவு இலக்கங்களை வைத்து ஆர்டிஓவில் விசாரித்தார்கள். 

 

ஐந்தாவது பத்து நிமிடங்களின் முடிவில் அந்த கார் எண் பற்றிய விவரங்கள் வேந்தனின் கரங்களில் கிடைத்தது. ஸார் அது ஆரல்வாய் ஏஸி அவர்களோட வண்டி. மாறனின் முகத்தில் குழப்ப முடிச்சுகள், “இப்போ அவர் ரிட்டையர் ஆகிட்டாரு ஸார். நேர்மையான அதிகாரி. டிப்பார்ட்மெண்ட்ல நல்ல மரியாதை. என்ன சார் செய்யறது?” 

“என்னோட கெஸ்ஸிங் சரின்னா இந்த வண்டி ஒண்ணு அவர்கிட்டே இருந்து திருடப்பட்டு இருக்கணும். இல்லைன்னா போலி நம்பர் பிளேட்டுக்கள் போட்டு இருக்கணும். ரவி காணாம போன அன்னைக்கு இங்கே இருந்ததா சந்தேகப்பட்ட அந்த வாகனம் ஆரல்வாய் ஏஸியோடதுன்னா அந்த கார் அங்கிருந்து எங்கே பயணமாயிருக்குன்னு எனக்குத் தெரியணும். சிசிடிவி காட்சிகளை கவனிக்க சொல்லுங்க ஏதாவது ஒரு இடத்தில கார் சிக்கியிருக்கும் வாய்ப்பிருக்கு, டெக்னிக்கல் டீமை அலர்ட் பண்ணுங்க வேந்தன். நான் ஏஸி அவர் வீடு வரையில் போயிட்டு வந்திடறேன். அதுக்குள்ளே ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பார்க்கலாம்.” 

“அவர் வீடு இப்போ அண்ணாநகர்லே இருக்கு ஸார்.” என்ற வேந்தனின் பேச்சை கேட்டபடியே கார் சாவியைப் பொறுக்கிக் கொண்டான் மாறன். 

“அம்மா, பசங்க யாரையும் இன்னைக்கு விளையாட வெளியே அனுப்பவேண்டாம்.” என்று அண்ணன் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டு இருந்தது மேகாவின் காதில் விழுந்தது. அவள் அப்போதுதான் உள்ளே நுழைந்தாள். 

“ஏன்னா? என்னாச்சு?” 

“நம்ம பரிதியோட கூடப்படிச்ச பையன்தான் சூசைட் பண்ணிகிட்டானாம். ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே தான் பாடி வீட்டுக்கு வந்திருக்கு. எனக்கு இப்பத்தான் தகவல் வந்தது. நானும் அண்ணியும் ஒரு நடை போய் பார்த்திட்டு வர்றோம் மேகா.” 

“நானும் வர்றேன் அண்ணா?!” 

“எதுக்குடி நீ இப்பத்தானே ஆபிஸ்லே இருந்து வந்திருக்கே உடனே போகணுமா என்ன ?” 

“அம்மா சின்ன பையன் அவனுக்கும் விஷ்வா வயசுதானே இருக்கும்.” என்று அண்ணனுடன் கிளம்பினாள். 

 

பி-பிளாக் தன் வளையத்தில் என்றுமில்லாமல் இன்று அநேக ஆட்களைக் கொண்டு இருந்தது. “என்னாச்சு? கடவுளே இப்படியும் நடக்குமா?” என்று ஆளாளுக்கு கவலைப்பட்டார்கள். அதையெல்லாம் கேட்டபடியே மேகாவும், அண்ணன் அண்ணி சகிதம் அந்த பிளாட்டை அடைந்தாள். அநேக செருப்புக் குவியல்களுக்குள் காணாமல் போனதை தேடிக்கொண்டிருந்த ஒரு பாட்டி இவர்களைப் பார்த்ததும் “இந்த வீடுதான் போங்கோ” என்று வராத கண்ணீரைத் துடைத்தது. 

 

பெற்றோரின் வேதனை மிகுந்த குரலில் அரற்றலை உணராமல் மல்லாந்து ஐஸ்பெட்டிக்குள் கிடந்தான் அந்த சிறுவன். மூக்கில் பஞ்சு வைக்கப்பட்டு கால் விரல்கள் கட்டப்பட்டு இருந்தது. தலைமாட்டில் அரிசியைக் ஆழாக்கில் நிரப்பி அதில் ஊதுபத்தி எரிந்து அணைந்து கொண்டு இருந்தது. சுற்றிலும் சிறு திரளாய் கூட்டம் அழுதபடியே, அவனின் கண்ணாடித்தடுப்பிற்கு வெளியே கரங்களை வைத்து முகம் தடவ, எத்தனித்தபடி இருந்த பெண்ணின் கதறல் மனதை உருக்குவதாய் இருந்தது. பதறியடிக்கச் செய்தது. 

 

அண்ணனும் அண்ணியும் சற்று நேரம் அவர்களிடம் அமர்ந்திருந்தார்கள். மேகா அந்த பெட்டியில் படுத்திருக்கும் சிறுவனின் முகத்தைவிட்டு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் கண்களைத் திருப்பாமல் வைத்திருந்தாள். 

 

அழுகை அவளிடம் தற்போது உற்பத்தியாகப் போராடியது. ‘இருந்திருந்ததால் விஷ்வாவின் வயதுதான் இருக்கும். எதனால் இந்த நிலையடா தம்பி உனக்கு. என்ன ஆண்டு அனுபவித்துவிட்டாய் என்று தற்கொலை என்ற கத்தியை உனக்கெதிராகப் பிரயோகித்து இருக்கிறாய். உலகப்பற்றின் நம்பிக்கையற்றுப் போய்விட்டாய்.’ 

 

அந்த இடத்தில் ஒரு நொடியில் விஷ்வாவின் உருவம் அதற்கு மேல் மேகாவால் அங்கே நிற்க முடியவில்லை அவளின் படபடப்பு கண்டதும் அண்ணி எழுந்து அவளிடம் வந்தாள் “என்னாச்சு மேகா.” 

“ஒண்ணுமில்லை அண்ணி மேகாவின் விரல்களிலும் உடலிலும் ஒரு வித நடுக்கம். போகலாம் அண்ணி எனக்கு இங்கே நிற்க ஒருமாதிரி இருக்கு. விஷ்வா நியாபகம் வருது.” 

“ச்சு ! முட்டாள் மாதிரி பேசாதே ! இது நம்ம விஷ்வா இல்லை,” அவள் தன் கணவன் புறம் பார்வையை திருப்பினாள்.  

“என்னாச்சு”  

“மேகாவுக்கு என்னமோ மாதிரியிருக்கு நான் அழைச்சிட்டுப் போகட்டுமா.” 

“வேண்டாம். இப்படி இவ நடுங்கிறதை பிள்ளைகளோ அம்மாவோ பார்த்திட்டா பயந்துடுவாங்க. வெளியே கார்டனலே கூட்டிட்டுப் போய் உட்கார வை. படபடப்பு அடங்கவும் வீட்டுக்கு கூட்டிப்போகலாம்.” கணவன் சொல்னபடி அதே போல் பிளாட்டை விட்டு வெளியே பி பிளாக்கிற்கென ஒதுக்கப்பட்டு இருந்த கார்டனில் அமர வைத்தாள் மேகாவை! இங்கயே இரு சூடா ஏதாவது வாங்கிட்டு வர்றேன். அண்ணி கிளம்ப மேகாவிற்கு அந்த வெளிக்காற்று சற்றே ஆசுவாசப்படுத்தியது. ஆனாலும் மனம் ஆறவில்லை. அதேநேரம் வாசலில் முழுவதையும் அடைத்தாற்போன்று மீடியாவின் வெளிச்சம். 

“9 வது படிக்கும் சிறுவனின் தற்கொலை அண்ணாநகரில் பெறும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தற்கொலைக்கு என்ன காரணம் அவனின் பள்ளியில் சிக்கலா? பெற்றோர்களின் மனவருத்தமா? விரைவில் தீர்வுடன் உங்கள்...” என்று ஒரு பிரபல தொலைக்காட்சியின் பேரைச் சொல்லி அவளையும் தன் காமிராமேனையும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். 

“தயவுசெய்து தொந்தரவு பண்ணாதீங்கம்மா” என்ற முதிர்ந்த மனிதர் ஒருவரை சுற்றிலும் மீடியாக்கள் நின்று கொண்டார்கள். “சார் நடந்தது என்னன்னு தெரிந்தால் தானே நாளைக்கு இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் நிலையை பெற்றோர்கள் உணர முடியும். நாங்க அவங்க அப்பா அம்மாகிட்டே பேச முடியுமா?” 

“உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் பெத்தவங்க பிள்ளையைப் பறிகொடுத்திட்டு அவஸ்தைப் பட்டுட்டு இருக்காங்க. இப்போ உங்களோட டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றும் நேரம் இல்லை. உங்களுக்கு என்ன தோணுதோ அதையே எழுதிக்கோங்க.” என்று அவர் நகர, ஸார் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க. 

“இந்த பையன் ஏதோ ஆன்லைன் கேமில் விளையாடி அவங்க அப்பாவோட பேங்க் பேலன்ஸை எல்லாம் குறைச்சிட்டதாகவும் அதனால அவங்க அப்பா அடிச்சதாகவும் கொஞ்சநாளைக்கு முன்னாடி ஊடகங்களில் செய்தி பரவிச்சி அதோட தொடர்ச்சிதான் இந்த தற்கொலையா? இல்லை, பிள்ளை மேல உள்ள கோபத்திலே பெத்தவங்களே...” என்று கேட்ட நிருபரை கோபப்பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு, அந்த மனிதர் ஏதும் பேசாமல் நடந்துவிட்டார். 

“என்னம்மா இங்கன வந்து தனியா உட்கார்ந்திட்டே?” என்று பக்கத்தில் வந்தமர்ந்த பாட்டி அந்த பி பிளாக்கினுள் செல்லும் போது எதிர்ப்பட்டவர். மேகா ஏதும் பேசாமல் இருந்தாள்.

“ஒத்தப்பிள்ளையைப் பெத்துட்டு எமங்கிட்டே கொடுத்திட்டாங்க. இப்போ செத்துப் போனவனோட அம்மா எனக்கு ஒருவகையிலே சொந்தந்தேன். பெரியவங்களை மதிக்கத் தெரியாதவ. எங்கே புருஷன் வீட்டு சொந்தபந்தம் கூட இருந்தா அவளோட காரியத்துக்கு ஆவாதுன்னு எங்களையெல்லாம் அண்டவிடாமயே பண்ணிட்டா, கட்டின புருஷனைத் தன் கண்ட்ரோல்ல வைச்சவளுக்கு பிள்ளையைக் கண்ட்ரோலா வைக்கத் தெரியலைப் பாரு. உண்ணத் தின்னத்தான் செல்லம். அவன் கேக்கிறதை எல்லாம் காசு இருக்குன்னு வாரி இறைச்சா இப்போ அனுபவிக்கிறா.” 

“அத்தை விடுங்க அவங்களே பிள்ளையைப் பறிகொடுத்திட்டு தவிக்கிறாங்க இப்போ போய் அவங்களைக் குத்திக் காட்டணுமா. அதுவும் முன்னபின்ன தெரியாதவங்ககிட்டே” பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி இடித்துக் காட்டினாள். 

“இப்போ என்னத்தைடியம்மா நான் சொல்லி காட்டினேன். அப்படி இல்லாததையும் பொல்லாததையும், அதான் ஊரு பூரா டிவியில பேப்பர்ல வந்து நாறியாச்சே, நீயே நியாயத்தை சொல்லும்மா. பையன் கேட்டான்னு கத்துக்கிறதுக்கு முன்னாடியே லட்ச ரூவா கொடுத்து வண்டியை வாங்கிக் கொடுத்துடறது, லைசன்ஸ் கூட இல்லை கருமம். அவன் மட்டும் போறானா? இவனுங்களால ரோட்ல போற வர்றவனுக்கும் நித்தியகண்டம் பூரண ஆயிசா போயிடறது. இதோ இவனுக்கு விலையுயர்ந்த செல்போன் வாங்கினாங்க, வேண்டான்னு போன பொங்கலுக்கு வரும்போது அடிச்சிகிட்டேன் கேட்கலை, படிப்புக்கு கூட இதுதான் உதவுதுன்னு வாதம் பண்ணினா, அவன் பார்த்தான் இதுங்க நம்மை எதுவும் சொல்லாதுன்னு நினைச்சு என்னென்னத்தையோ பார்த்து.....” மீண்டும் அந்தப் பெண்மணி குறுக்கிட்டாள்.

“அது ஒண்ணுமில்லைம்மா அந்தப் பையன் ஆன்லைன் விளையாட்டுலே அதிக நேரம் செலவழிச்சி இருக்கான். முதல்ல ஃப்ரீயா விளையாடியவன் அப்பறம் காசு வைச்சு கேம் மோகத்தில விளையாடி இருக்கான். ஒரு கட்டத்திலே அவங்க அப்பாவோட கார்டுகளை தேச்சி இன்டெர்நெட் பேங்கிங் மூலமா ஆறுலட்ச ரூபாயைத் தொலைச்சிருக்கான். விவரம் அவங்க அப்பாவுக்கு தெரிய வந்ததும் வீட்டுலே ஒரே ரகளை. தப்பைத் தட்டிக் கேட்கலை, செய்யவிடாமத் தடுக்கலை. நடந்த பிறகு நீ பார்க்க வேண்டியதுதானேன்னு ஆளாளுக்கு குறை பேசினாங்க, அவனை நல்லா அடிச்சாங்க. விவகாரம் வேற டீவியிலே பேப்பரிலே எல்லாம் வந்தது அசிங்கமாப் போச்சு. ஒருவாரத்திலே அந்த பிள்ளை இப்படி?” அதற்குள் போலீஸ் வண்டி வரவும்... இவனுங்க வேற தொந்தரவு செய்துகிட்டு என்று சொல்லி அந்த பெண்மணி தன் அத்தையைக் கூட்டிக் கொண்டு நகர்ந்தாள். 

 

பிள்ளையின் தாயாரை மயங்கிய நிலையில் ஆம்புலன்சில் ஏற்றினார்கள். மேகாவிற்கு தன்னையும் அறியாமல் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. “நான் மட்டும் இல்லைம்மா என்னை மாதிரி எத்தனையோ ஸ்டூடண்ட்ஸ் உன்னோட கேமை டவுன்லோட் செய்து நேரம் பார்க்காம விளையாடறாங்க. நான் மட்டும் விளையாடினா பாதிப்புங்கிறீயே என்ன ஒரு செல்பிஷ் அம்மா நீ...” என்ற விஷ்வாவின் குரல் கேட்டது. “அது, அது யார்?” போலீஸ் ஜீப்பின் வாசலில் அந்த பரந்த முதுகு அது மாறனா என்ற கேள்வி கண்களில் தொக்கி நிற்க, மெல்ல எழுந்து பக்கவாட்டில் நடந்தாள் மேகா. 

 

சந்தேகமேயில்லை யாரைப் பார்க்கக் கூடாது என்று இத்தனை நாள் மறைந்து பெங்களூரிலேயே இருந்தாளோ அவனேதான். மாறன்... இத்தனை பலவீனமான மனதுடன் அவனைச் சந்தித்தாக வேண்டுமோ? கூடாது அவளின் கால்கள் அவ்விடத்தை விட்டு நகர தவித்தது. ஆனால் உடலுக்கு அத்தனை பலமிருப்பதாக தெரியவில்லை. மாறன் அந்த பிளாட்டுக்குள் தன்னை நுழைந்து கொண்டான். “என்ன மேகா உன்னை அங்கேதானே உட்கார சொன்னேன்.” என்று அண்ணியின் குரல் கேட்டபோதுதான் அவள் சரிந்து கொண்டு இருப்பது தெரிந்தது. சூடான காபியை அவளின் அதரங்களில் வைத்து உறிஞ்சவைத்து தன் மேல் சாய்த்தபடியே தங்கள் பிளாட்டுக்கு அழைத்துச் சென்றாள் அண்ணி. 

 

அவளை விட்டு இம்மியும் நகராமல் ஒரு குழந்தையைப் போல ஒட்டிக்கொண்டாள் மேகா. 

 


 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #14

Published on 25/07/2022 | Edited on 04/08/2022

 

iraval edhiri

 

வெல்கம் டூ அலைகள் நியூஸ் சானல் நான் உங்கள் ஷோபா இன்னைக்கு நாம பேசப்போறே விஷயம் அவசியமானது மட்டுமல்ல கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட, இக்கட்டான ஒரு காலகட்டத்தை கடந்து வந்தாலும் அதோட வடுக்கள் ஆழமாக இறங்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் பொருளாதாரம், மனசிதைவு, சிறுதொழில் இழப்புன்னு நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறோம். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நம்ம எல்லாருக்கும் பெரிய சவாலா அமைந்த பல விஷயங்களில் ஒன்று ஆன்லைன் பள்ளிக் கல்லூரிப் படிப்புகள்.

 


அதை பேஸ் பண்ணி ஆன்லைன் அலப்பறைகள்ன்னு நிறைய வீடியோஸ் நகைச்சுவையா வந்தாலும் உண்மையில் இந்த ஆன்லைன் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எதை அவர்கள் கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதையே கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட பெற்றோர்கள் 
மன அழுத்தத்திற்கு நிறைய மாணவர்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் பிரபாகர் அவர்கள் வணக்கம் சார்.

 

பிரபாகர் அந்தக்கால கமலஹாசனை நினைவு படுத்தினார். வசீகரக் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்திருந்தாரோ என்னமோ ?! அடிக்கடி அதை மூக்கின் மேல் தூக்கிவிட்டு கொண்டது கூட ரசனையாய் இருந்தது. 

 

வணக்கம் என்று கேமிராவைப் பார்த்து கையை குவித்தவர். ஷோபாவைப் பார்த்து பேச ஆரம்பித்தார். எதையும் தொட்டு உணரும் நிலை உன்னதமானது இல்லையா ?! பல வார்த்தைகள் பேச முடியாத விஷயத்தை ஒரு மெளனமும் தொடுதலும் கொடுத்துவிடும் ஆனா ஆன்லைன் கலாச்சாரம் உள்ளே நுழைந்ததும், எல்லாம் மாறிப்போனது. ஒரு பெட்டிகடையை எடுத்துக்கோங்க அந்த தெருவில் உள்ள அத்தனை பேரையும் அந்தக் கடைக்காரருக்கு தெரியும், இன்றைய கூகுள் மாதிரி எந்த வீட்டில் யார் இருக்காங்க என்ன செய்யறாங்கன்னு நிறைய தகவல்கள் மனிதர்களைப் படித்து வைத்திருந்தாங்க ஆனா எல்லாமே ஆன்லைன் ஆனபிறகு, நான் ஆன்லைனில் வாங்கினேன் இப்போ எல்லாம் நேரா யாருப்பா நேரத்தை செலவு பண்ணிட்டுப் போறாங்க ரிலாக்ஸா எல்லாத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கிக் கொள்றது எத்தனை செளகரியம்ன்னு பேசறது பெரிய பேஷனும் கெளரவமும் ஆகிட்டது. 

 

இப்போதைக்கு உலகமே இதில் தான் இயங்கிட்டு வர்றது இந்த வசதிகள் தப்புன்னு சொல்றீங்களா ஸார் ?

 

விஞ்ஞானம் வளரவளர மனிதம் சுருங்குது பார்த்தீங்களா ? வெறும் தொடுதிரையில் ரசிக்கும் பழக்கம் விடுத்து நாலு கடை ஏறி இறங்கி காய்கறியோ பொருளோ வாங்குங்க அங்கே எத்தனை வார்த்தைகள் வலம் வரும். நம்மையும் அறியாம எத்தனையோ கற்றுக் கொள்ளலாம் ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரம் இருக்கலை. அதனாலதான் வளரும் சமுதாயம் வெளிப்படையா பேச தயங்குது. தனக்கு என்ன வேணுன்னு கூட கேட்கத் தெரியாத மனித குலம் உருவாகுது. அதைச் சுற்றிலும் விளம்பர விரல்கள் ஆக்கிரமிக்கிறது. என் தேவைகள் அடுத்தவனின் விருப்பமாக போகிறது. அப்பா அம்மா சொன்னா அநேக விஷயங்களில் எதிர்த்துப் பேசும் பிள்ளைகள் முகம் தெரியாத யாரோ ஒருத்தர் சொன்னா இதுதான் எனக்கானதுன்னு சட்டுன்னு எடுத்துக்கிற அளவுக்கு அவங்களைப் பழக்கப்படுத்தி வைச்சிருக்கு இந்த இணைய உலகம்
சரியா சொன்னீங்க சார் ? இதனால என்ன பாதிப்புகள் வருது.

 

இப்போதைக்கு பாதுகாப்பு நமக்கு வெளியே இல்லை நமக்கு உள்ளேயேதான் யாரும் யாரையும் கண்காணிக்க முடியாது தனி மனிதனோட ஒழுக்கம் மட்டும்தான் அவர்களை சீர்படுத்தும் கத்தியின் முனை கூர்மையாத்தான் இருக்கு அதன் பாகத்தின் பாதுகாப்பினை நாம உணர்த்தணும் அங்கே தவறுவதால்தான் நிறைய காயங்களை உள்ளே எடுத்துக்கிறோம். கண்பார்வைகள் கோளாறு அதிகமாகுது. நிறைய பிள்ளைகள் வாதத்தினால் பாதிக்கப்படுவதாக ஆர்த்தோ டாக்டர்கள் சொல்றாங்க. ஆடி ஓடி விளையாடி அடிபட்டு கத்துக்க வேண்டியவைகளைக் கூட இப்போ திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு கற்பனையிலேயே வாழ்க்கை அமைவது அவர்களின் புலன்களை மட்டுமல்ல மனதையும் மந்தப்படுத்துகிறது. 

 

சமீப காலமா மாணவர்களின் தற்கொலை செய்திகள் அங்கொன்னும் இங்கொன்னுமா படிக்கிறோம், நான்கு பேர் காணாமல் போயிருக்காங்க இப்படி எத்தையோ பிரச்சனைகள் இதுக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும் ஸார். 

 

மறக்கமுடியாத இணைப்புகளை நாம பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தாச்சி, தவறுகளை இலகுவாக கத்துக்க சந்தர்ப்பங்களை வலைவிரிச்சி கொடுக்கிறோம். அவர்களுக்கு அக்கறையும், அன்பையும் கொடுக்கணும். இயந்திரங்களை விடவும் அப்பாவும் அம்மாவும் நமக்கு அநேக அன்பைத் தருவாங்கன்னு உணர வைக்கணும். கண்காணிப்பது தெரியாமயே அவங்க தப்பைச் சுட்டிக் காட்டணும். உண்மையைச் சொல்லணுன்னா அப்பாஅம்மாக்கு பயந்தாற்போல நாம பெத்த பிள்ளைகளுக்கும் பயப்படும் ஜெனரேஷன் நாமகாத்தான் இருப்போம். 

 

ரொம்ப அழகா சொன்னீங்க சார் ? நீங்க சொன்னாற் போல விளம்பரங்கள் இலவசங்கள் கவர்ச்சியான அறிவுப்புகள்னு எல்லாம் விற்பனை மயமாகவே போயிட்டது. யாரை எப்படி பயன்படுத்தலான்னு யோசிக்கும் மனநிலைக்கு எல்லாரும் வந்தாச்சு. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு விளம்பர அறிவிப்பினைக் கேட்டேன். வளர்ந்து வரும் மாலில் ஒரு கேம் கம்பெனி தன்னோட கிளைகளை திறக்கிறாங்க. மாணவர்கள் தான் அவர்களின் டார்கெட். வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மாதிரி அறிவிச்சியிருக்காங்க. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, கேம் ஷோல நிறைய பரிசுகள் இருக்காம். ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுக்கள் கோலோச்சிக்கிட்டு இருக்கும் போது இந்த அறிவிப்பின் தாக்கம் எப்படியிருக்குன்னு நாம அடுத்த வீடியோவில் பார்க்கலாம் அதுவரையில் சைனிங் ஹாப் ஷோபா மற்றும் நம்ம வேலியபுள் கெஸ்ட் மருத்துவர் பிரபாகர் அவர்கள். திரை அணைக்கப்பட்டது. 

 

எங்கே ஆரம்பிக்க போறாங்க ? அந்த வீடியோகேம்.

 

மாயா தன் மொபைலை உயிர்ப்பித்து அந்த விளம்பரத்தைக் காட்டினாள். மாறன் அதை கவனித்தான். இந்தவாரம் நாம இங்கே போகணும் மாயா. 

 

ஏன் ஸார் ? ஸாரி சார் கூப்பிடவேண்டான்னு சொன்னீங்க இல்லை, ஏன் மாறன் ?

 

ஜஸ்ட் பார்க்கணுன்னு தோணுது. என் உள்ளுணர்வு எச்சரிக்கிறது நிச்சயம் அங்கே ஏதாவது ஒரு லீட் கிடைக்கலாம். மாயா இப்போ நாம போற இடம் சமீபத்திய துக்கத்தை விழுங்கியிருக்காங்க கொஞ்சம் பார்த்துப் பேசணும்.

 

என்னோட பேச்சு உபகரணங்களோடதான். அதனால் நீங்க கவலைப்படவேண்டாம். கார் அந்த காம்பெளண்டை தொட்டது. 

 

மாறன் அந்த வீட்டின் வாயிற்படியில் சற்றே தயங்கித்தான் நின்றிருந்தான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று பெரும் மனக்குழப்பம் எழுந்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு வாசல் முழுவதும் குத்தகைக்கு எடுத்திருந்த காலணிகள் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தன. வீடு பிடிக்காத ஒரு மெளனத்தைப் பூசிக் கொண்டு இருந்தது. 

 

 

பக்கத்து பிளாட் பெண்மணி மெல்ல எட்டிப்பார்த்து மாறனைக் கண்டதும் சட்டென்று தலையை இழுத்துக் கொண்டாள். தனக்கேன் வம்பு என்பதாகக் கூட இருக்கலாம். 

 

நகர்ப்புறங்களில் நத்தையாய் இம்மாதிரிக் கட்டிடங்களுக்கு சுருண்டு கொள்ளும் மனிதர்களின் மத்தியில் மனிதத்தை எதிர்பார்ப்பது என்பது ஆழ்கடல் முத்தை தேடுவதைப் போலத்தான் அதில் கூட மனிதன் வெற்றிப் பெறுகிறான் ஆனால் மனிதத்தில் தோற்றுப் போகிறான். அட என்ன இப்படியே நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா உங்க உடம்பு என்னாகுறது ? எழுந்து வேலை வெட்டியப்பாருங்கய்யா ? ன்னு கலயத்தில் கஞ்சியைக் கொண்டு வந்து நீட்டும் மனிதர்கள் இப்போது இல்லை. கிராமப்புறங்களில் கூட சற்று விநோதமான நகர கைகள் வளைத்துவிட்டது. 

 

கோலம் அடைத்த வாசலில் எல்லாம் அதன் வண்ணங்களைக் கலைப்பதைப் போல வாகனங்களின் கால்தடங்கள் பதிய துவங்கிவிட்டது. ஆதிச்ச நல்லூரைப் போல இதுநான் எங்கள் காலம் என்று நாம் ரசித்து வாழ்ந்த பக்கங்களை மண்ணுக்குள் தேடும் காலம் விரைவில் இல்லை என்ற நிஜம் நெஞ்சை அழுத்தியது. கூலர்ஸை கழட்டினான். 

 

தொட்டதும் திறப்பதைப் போன்று இருந்த கதவை அலட்சியம் செய்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். சாத்தலைங்க திறந்துதான் இருக்கு.

 

நான் மாறன் இவங்க மாயா இரண்டுபேரும்

 

 தெரியும் ஸார் அன்னைக்கு என் பேரனுடைய கடைசி நாளில் பார்த்தேனே ?!

 

மன்னிக்கணும். எனக்கு இந்த நேரத்தில் உங்களை வந்து தொந்தரவு செய்ய கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் ஏற்கனவே நான்கு பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்க அதில் இரண்டுபேர் இப்போ உயிரோடவே இல்லை, ஒரு பையன் கிடைச்சும் பலனில்லை. 

 

தம்பி அதுக்கும் என் பேரனோட இறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?! அவன் தற்கொலை இல்லை பண்ணியிருக்கான். அவர் அந்த வார்த்தையைச் சொல்லும் போது உடைந்து அழத் தயாராய் இருப்பதைப் போல இருந்தது. 

 

ஸார் நடந்து போன சம்பவத்துக்கும் உங்க பேரனின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கலாம் ஆனா இறந்த போன உங்க பையனுக்கும் அந்த பிள்ளைகளுக்கும் வயது ஒண்ணுதான் காணாமல் போன பையனும் இவனும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறாங்க. எனக்கு அவனோட அறையை மற்றும் அவனின் பொருட்களை கொஞ்சம் பார்க்கணும். 

 

அன்னையிலே இருந்து அது பூட்டித்தான் இருக்கு. நிற்க நேரமில்லாத என் மகனும் அவன் மனைவியும் கூட இப்போ இதோ பக்கத்து அறையில் முடங்கிக் கிடக்கறாங்க. திறந்துதான் இருக்கு போங்க என்று மாறன் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த அறையைக் காட்டினார். மாறனும், மாயாவும் எழுந்தார்கள். 

 

அந்த அறையை நோக்கி கடக்கும் போதே மெல்லியதாய் முனகல் சப்தம். ஏங்க கார்டுலே கடனாயிடுச்சின்னு அவனைத் திட்டாதீங்க என்னோட நகை இருக்கு நான் வைச்சித்தர்றேன் இல்லைலேன்னா ஆபீஸ்லே லோன் போட்டுத் தர்றேன் பாவம்ங்க அவன்

 

சரிம்மா நான் திட்டலை இப்போ நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று ஒரு ஆண் குரல் சமாதானப்படுத்தியது. பெரியவர் கதவைத் திறந்து உள்ளே சென்று, சிறிது நேரத்தில் அந்த குரலுக்குச் சொந்தகாரன் ஆன மனிதன் வெளியே வந்தான்.

 

நீங்க....

 

நான்தான் அவனோட அப்பா அவர் சுட்டிக்காட்டிய திசையில் சில தினங்களுக்கு முன்பு அதுவா இருந்த அச்சிறுவன் அவனாகச் சிரித்துக் கொண்டு இருந்தான். 

 

வாங்க என்று அறைக்குள் அழைத்துச் சென்றார் அவர். முகத்தில் சில நாட்களின் தாடி முளைத்திருந்தது. கண்களில் சொல்லொண்ணா சோம் துளிர்த்திருந்தது. 

 

அறைக்குள் நுழைந்தார்கள். மாயா தன் போனில் நோட்பேடைத் திறந்தாள். அறையை சுற்றிலும் ஒரு பார்வையிட்டு சில குறிப்புகளை எழுதிக் கொண்டாள்.

 

அறை முழுவதும் பணத்தின் செழுமை படர்ந்திருந்தது. விலையுயர்ந்த படுக்கை, கிரிக்கெட் பேட், சுவரோரமாய் கம்ப்யூட்டர் அதன் அருகில் சுவரின் பிளக்பாயிண்ட்டில் மொபைல் போன்களுக்கு உயிரூட்டும் சார்ஜர்கள். சுவரில் பெரியதாக கோலியும், டோனியும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறு அலமாரியில் சில பொம்மைகள் அதன் நடுவில் பாடப் புத்தகங்கள் பக்கத்தில் ஒரு மொபைல் போன் அநாதையாய் கிடந்தது. 

 

இது....

 

என் பையனோட போன். ஆன்லைன் கிளாஸ்க்காக வாங்கித் தந்தது. 

 

போலீஸ் இதை எடுத்துப் போகலையா ?

 

இல்லை ஸார் அவன் இறந்தப்போ போலீஸ் வந்து விசாரிச்சப்போ இது எங்கே இருந்ததுன்னே தெரியலை நேத்து அவனின் ஈமக்காரியங்களுக்காக அவன் உபயோகிச்ச பொருட்களை எடுக்கும் போது கிடைச்சதுன்னு வேலைக்காரம்மா கொண்டுவந்து கொடுத்தாங்க. 

 

மாயா அதைக் கையில் எடுத்தாள் நான் காஸ்ட்லியான வஸ்த்து என்று அது சிரித்தது. சார்ஜர் பாதி தீர்ந்து போயிருக்க தொடுதிரையில் செக்யூரிட்டி வளையம். 

 

பாஸ்வேர்டு ....

 

எனக்கு தெரியாது ஒருவேளை என் மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் ஆனா எதையும் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. ஒரே பையன்னு செல்லம் கொடுத்து அவனுக்காகவே கால நேரம் பார்க்காம உழைச்சோம் சார் ஆனா பாருங்க எல்லாத்தையும் .....!

 

உங்க வருத்தம் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அவன் எப்படி ரொம்ப மூடி டைப்பா இல்லை நல்லா பேசுவானா ? 

 

ரொம்ப பேசமாட்டான் ஸார். அவனுக்கு பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அவளோட உடல்நிலை ஒப்புக்கலை அதனால இவன்தான் எங்களுக்கு எல்லாமா இருந்தான். இங்கே நின்றால் எனக்கு அவன் நினைவு அதிகமாக வருகிறது என்று நகர்ந்தவர் உங்களுக்கு குடிக்க ஏதாவது என்று கேட்டார்.

 

வேண்டாம் ஸார் .... என்றனர் ஒரே குரலில் கோரஸாய் மாறனும், மாயாவும்.

 

அதேநேரம் வாசலில் ஒரு அரவம் கேட்டது. ஒரு சிறுவன் அங்கிள் கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம் உங்க வீட்டு பால்கனியில் எங்க பால் விழுந்திட்டது என்ற குரல். மாறன் அக்குரலில் ஈர்க்கப்பட்டு வெளியே வந்தான். 

 

பால்கனிப் பந்திற்காய் காத்திருக்கும் ஆர்வம். நீளமான டிராக்ஸூம், மஞ்சள்நிற டீ-சர்ட்டும் அணிந்திருந்தான். பேட்டை தாங்கியபடி அவன் சற்றே சாய்வாய் நின்றிருந்த விதம் மாறனுக்கு எதையோ நினைவூட்டியது. அந்த சிறுவனின் உருவம் அவனைப்போல தோன்ற மெலிதாய் ஒரு ஈர்ப்பு எட்டிப் பார்த்தது. விசாரிப்பதற்குள் தான் தேடி வந்த பொருளைப் பெற்றுக் கொண்டு தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினான் அவன்.

 

மாறன்...இங்கே வாங்களேன் மாயாவின் குரலில் வழிந்த டெசிபல் அவனை பின்னோக்கி நகர வைத்தாலும் மனம் முழுக்க அச்சிறுவன் வியாபித்திருந்தான்.
 

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #13

Published on 13/07/2022 | Edited on 04/08/2022

 

tt

 

‘முட்டாள்’ என்ற வார்த்தைகளும் நீரஜ்ஜின் சாபமும் இணைந்து கொண்டதோ என்னவோ, ரதி டெக்ஸ்டைல்ஸின் வாசற்படி டைல்ஸ் தன் மடியில் மைக்கேலை வாங்கிக் கொண்டது. தன் கேபினின் ஜன்னல் வழியாக மதன் எட்டிப்பார்க்க கூடவே நீரஜ்ஜூன் கண்களும் சேர்ந்து கொண்டன. அவனின் உதடுகள் கோபத்திலும், அவமானத்திலும் நடுங்கிய மைக்கேலின் உடலைப் பார்த்து மீண்டும் ஒருமுறை ‘முட்டாள்’ என்று கூறிக்கொண்டன.
 
“யார் அவன்? உனக்குத் தெரியுமா நீரஜ்?”
 
நண்பன் சில மணித்துளிகளுக்கு முன்புவரையில் இந்த பகுதிக்கு நான் தேர்ந்த கமெண்டர்களில் ஒருவன். நேர்மை நியாயம் என்ற பேசிவிட்டு இப்போது அடிபடுகிறான்.
 
“பேசிப்பார்க்கலாமா?”
 
“வாய்பில்லை மதன் நான் நிறைய பேசினேன் அவன் எதற்கும் ஒப்புக்கொள்வதாக தெரியவில்லை, நன்றாக வாழ்ந்து கெட்டவன். பாதிப் பட்டினியிலும் நாணயம் போகவில்லை.”
 
“நீரஜ், இம்மாதிரி ஆட்கள் மனசாட்சிக்குப் பயந்தவர்கள், இவர்களை இலகுவாக வளைத்து விடலாம்.” மதன் தன் இண்டர்காமை எடுத்து யாரிடமோ பேசினான். தயங்கித் தயங்கி தன் காயங்களையும் கலைந்த உடைகளையும் பார்த்தபடியே வெளியேறிய மைக்கேலை நோக்கி இருவர் ஓடினார்கள். மேலும் தன்னை தாக்க வருகிறார்களோ என்று பயந்த அவன் ஓட எத்தனிக்கும் போதே,
 
“ஸார், உங்களை எம்.டி. கூப்பிடறார்.” என்றான் வந்தவர்களின் ஒருவன். மைக்கேல் நம்பாமல் பார்க்க, ரிசப்ஷனில் உட்கார வைக்கப்பட்டான். குளிர்பானம் ஐஸ்கட்டிகள் மிதந்து தரப்பட்டது.
 
“எடுத்துக்கோங்க, என்ன ஸார் எனக்குத்தான் தெரியாது. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லக்கூடாது நான் எம்.டிக்கு வேண்டியவன்னு, என் வேலைக்கே உலை வைக்கப் பார்த்தீங்களே தம்பி?!”
 
பவ்யமாய் அருகில் நின்ற அவரை வியப்பு தடவிய கண்களோடு பார்த்தான் மைக்கேல். சற்று நேரத்திற்கு முன்பு ‘வேலைக்கு சேர வந்த நாளே தாமதம் இதில் அட்வான்ஸ் வேற கேட்கிறே? இதென்ன உங்கப்பன் கட்டிவைச்ச கடையா’ன்னு, கேள்வி கேட்டு வார்த்தை முத்தி, அடித்து வெளியே விரட்டிய மனிதர். கிழிந்த பொட்டலம்போல் தூக்கி வீசியவர். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் மனிதர்கள்தான் சட்டென்று எத்தனை நிறம் மாறுகிறார்கள். மைக்கேல் ஏதும் பேசாமல் அமைதியாய் பார்த்தான். குளிர்பானத்தையும் தொடவில்லை.
 
அதே ஆசாமி, “சின்னவர் மேல கூப்பிடறார்.” என்று பவ்யமாக சொல்லிவிட்டு, ஒரு ஊழியருடன் முதல் மாடிக்கு அனுப்பினான். இதுவரையில் கண்களில் இகழ்ச்சியும் சக மனிதன் அவமானப்படுகிறானே என்ற அக்கறையின்றி உதட்டை கன்னத்தின் கடைக்கோடிவரை இழுத்து சிரித்த அனைவரின் கண்களிலும் இப்போது ஒருவித மரியாதையைப் பார்க்க முடிந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை.
 
பணம் சட்டைப் பையினை மீறி வெளியே எட்டிப்பார்த்தபோது,
 
“சார்... சார் என்ன வேண்டும்?”
 
“மச்சி அங்க போகணும்டா நீ?!” கார் கதவை பவ்யமாய் திறந்துவிட்டு, “வெல்கம் யூ” தலைசரித்து வணங்கியதும், பில்லுக்கு மீறிய டிப்ஸ்க்குகாக அடிவயிறுவரை சரிந்து வணங்கியதும், ‘இதெல்லாம் அந்த மோசமான நாளுக்குப் பிறகு, அப்படியே தலைகீழாக மாறிப்போனதே ஏன்? நான் இப்படி சபிக்கப்பட்டேன்.’
 
“சார் நீங்க உள்ளே போகலாம்...” மீண்டும் அதே பெரியவர்?! மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“ஹாய் மைக்கேல்?!” என்று மதனின் பின்னால் நின்று குரல் கொடுத்த ராஜீவ்வைப் பார்த்தவுடன் தனக்கு கிடைத்த மரியாதையை சட்டென்று புரிந்து கொண்டான் மைக்கேல். அன்று ஆரம்பித்த பழக்கம். இந்த இழிநிலையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறு இல்லைன்னு மனசுக்குள்ளே தோண ஆரம்பிச்சது.
 
“இரண்டு வருஷம் இப்படியே போச்சு அதற்குப்பிறகுதான் பிரச்சனையே?”
 
“அப்படியென்ன தொழில் பண்ணீங்க? கள்ளக்கடத்தலா?”
 
“இல்லை நவீன தொழில் நுட்பங்களோடு நூதனமா ஒரு திருட்டு.” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான் மைக்கேல்.
 
தன் வீட்டின் முன்னால் வந்து நின்ற வேனைப் பார்த்து அம்மா அதிசயித்தாள், மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“இந்த பிரிட்ஜ், கேஸ் ஸ்டவ் எல்லாம் கிச்சன்லே வைச்சிடுங்க. அப்பறம் அந்த மர பீரோவை எடுத்துட்டு புது பீரோவை வைங்க. சோபா இங்கே சுவரோரமா இருக்கட்டும். டிவி கூட, செல்ப்பில் வேண்டாம் சுவற்றில் அடிச்சிடுங்க...” தன் முன்னால் நின்ற நான்கைந்து இளைஞர்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் மைக்கேலை அம்மாவும், தங்கையுமாய் ஆர்வமாய் பார்த்தார்கள்.
 
“என்ன மைக்கேல் இது? அண்ணா புது டீவியா ஏதுன்னா காசு?”
 
“பிரண்ட் ஒருத்தனோட சேர்ந்து புதுசா தொழில் தொடங்கியிருக்கேன்.” வேலைகளை மேற்பார்வையிட்டபடியே சொன்னவன்.
 
“புது தொழிலா? மூலதனம் இல்லாம எப்படி மைக்கேல்?!” அம்மாவின் சந்தேகப் பார்வையைத் தவிர்த்துவிட்டு,
 
“உலகத்திலே எல்லாரும் கெட்டவங்களா இருக்கப் போவது இல்லைம்மா, நாம நல்லாயிருந்தப்போ நம்மால யாரோ ஒருத்தர் பயன்பட்டு இருப்பாங்களே அவங்களில் ஒருத்தன்தான் இவன். எப்படியோ நம்ம கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போச்சு இன்னும் நல்ல லாபம் வந்தா சொந்தமா வீடு வாசல்லன்னு செட்டில் ஆகிடலாம் தங்கச்சிக்கு நல்ல இடத்திலே கல்யாணம் செய்யலாம். முதல்ல இந்தா பிடி இதிலே இருபத்தைந்தாயிரம் இருக்கு வீட்டுவாடகை கரண்ட் பில் எல்லாம் செட்டில் பண்ணு.” மைக்கேல் அம்மாவின் கரங்களில் திணித்துவிட்டு தங்கையிடம் ஒரு பார்சலைத் திணித்தான்.
 
“இனிமே கிழிந்ததை தச்சிக் கட்டிக்க வேண்டாம் ஐந்து சல்வார் இருக்கு அடுத்த மாதம் உன்கிட்டே பணம் தர்றேன். வேணுங்கிறதை வாங்கிக்க.” என்று புதியதாக கவர் பிரிக்கப்படாமல் இருந்த சோபாவில் அமர்ந்தான் மேலே உறையாய் இருந்த பிளாஸ்டிக் கவர் நசுங்கி சிணுங்கியது அவனின் மனதைப் போலவே?!
 
கண்ணாடித்தடுப்புகளுக்கு நடுவில் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் மைக்கேல் அவனின் லேப்டாப்பின் தொடுதிரையில் பிரபல மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளின் டேட்டா பேஸ். அவற்றை எடுத்து எக்ஸலில் அப்பலோட் செய்துவிட்டு, க்ரூப் கால் கனெக்ட் செய்தான்.
 
“உங்க மொபைல்ல நம்ம குரூப்-க்கு தகவல்கள் எல்லாம் அனுப்பியிருக்கேன் இன்னும் நாலைந்து நாளுக்கு இந்த டார்கெட்ஸ் எல்லாம் முடிக்கணும்.”
 
“எஸ் ஸார்.” என்ற பதில்கள் கோரஸாக வந்தது.
 
ராக்கேஷ் மைக்கேலை நிமிர்ந்து பார்த்தான்.
 
“எஸ் ஆன்-லைன் சூதாட்டம்தான் சம்பந்தப்பட்ட நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவோம் அவங்க ரெஸ்பான்ஸ்ஸை பொறுத்து வலை விரிப்போம். எங்களோட டார்கெட் பேராசைப் பிடித்த ஆசாமிகள்தான். ஆன்லைன் விற்பனைகள் அதிகரிச்சிட்டு வந்ததால தங்களோட தொலைபேசி இணைப்புகளை அதில் குறிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அந்த தளத்தில் செயல்படறதுக்காக கேஷ்பேக், சில பரிசுக்கூப்பன்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்படும், இதே போல் மொபைல் நெட்வொர்க்கில் அவங்க நெம்பரை ஹேக் பண்ணிட்டா அவங்க பங்கேற்ற தகவல்கள் அந்த போனின் எண் எந்த இடத்தில் எல்லாம் லாகின் ஆகுன்னு தெரியும்.
 
உங்களுக்கு ஒரு ஆபர் இருக்குன்னு இரண்டு மெசேஜ் போகும், பார்க்கலைன்னா கவர்ச்சிகரமான குரலில் ஒரு பெண்ணை பேச வைப்போம். பாதிபேர் அதிலேயே மயங்கி விவரங்களை கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. எங்களோட சைட்டில் விவரம் கேட்பாங்க, டம்மியா சில கேள்விகள் கேட்போம். குழந்தை கூட பதில் சொல்வதைப் போல இலகுவா, பத்தாவது கேள்விக்கு பிறகு அவங்க எங்க லிங்கை அவங்க நண்பர்களுக்கும் குழுக்களுக்கம் ஷேர் பண்ணச் சொல்லுவோம். எல்லாம் முடிந்து இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு பெரிய பரிசை வின் பண்ணியிருக்கீங்கன்னு மெசேஜ் தருவோம். அந்த கங்கிராட்ஸ்க்கு மேல விழற கலர் பூக்கள் தான் நாங்க அவங்களுக்கு விரிக்கிற வலை.
 
இது ஏதும் தெரியாதவங்க அடுத்த கட்டத்துக்கு நகர்வாங்க. ஐபோனும், லேப்டாப், காஸ்ட்லி திங்க்ஸ் வெறும் கேள்விக்கு பதில் சொல்லி கிடைச்சா யார் விடமாட்டாங்க. இந்த போட்டிக்கு உள்ள டிமாண்ட்ஸை அவங்களுக்கு புரியாத வியாபார வார்த்தைகள் மூலம் அனுப்பி சப்மிட் பட்டனை கிளிக் பண்ணா?! இந்த பரிசை இத்தனை மணி நேரத்தில் நீங்கள் வெல்லலாம் அதற்கு ஒரு 20ஆயிரம் 30 ஆயிரமின்னு பொருளோட விலைக்கு ஏத்தாமாதிரி டெபாசிட் பண்ண சொல்வோம்.
 
சில பேர் பண்ணிடுவாங்க, அவங்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் கால்வாசி கூட இல்லாத இந்த டெபாசிட் பெரிசா தெரியாது. சிலர் எஸ்கேப் ஆயிடுவாங்க அவங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். எங்க வெப்சைட்டின் தகவல்கள் அனுப்புவோம் பாருங்க இந்த சைட்டில் நாங்க இதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் ஒரு 50 அல்லது 60 ஐடி கிரியேட் செய்து ரிவ்வியூஸ் பதிவு செய்து அவங்க நம்பிக்கையை அதிகப்படுத்துவோம். பணம் வந்ததும் அந்த ஐடி எங்க ஆப்பில் இருந்து அன்கன்சிடர் பகுதிக்குப் போயிடும் சர்வரோட கனெக்ட் செய்யவும் முடியாம, பணத்தை இழந்தவர்கள் அதிகம்.”
 
“இது தப்புன்னு உனக்குத் தோணலையா மைக்கேல்?!”
 
“சரி தப்பைப் பார்த்தா நான் எப்படி பிழைக்க முடியும். அதிலும் நான் யாரை ஏமாற்றினேன் பேராசை பிடித்த மனிதர்களை எல்லாமே இலகுவா கிடைச்சிடும்ன்னு குறுக்கு வழியில் முயற்சிக்கிற மனிதர்களை அவர்களை ஏமாற்றுவது எனக்குத் தப்பா தெரியலை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. எல்லாம் என் ஏரியாவிற்கு வந்த புது இன்ஸ்பெக்டரை சந்திக்கும் வரையில்!
 
ஆன்லைன் சூதாட்ட ஏமாற்றத்தில் இரண்டு பேர் தற்கொலை செய்திட்டாங்கன்னு பேப்பரில் நீயூஸ் படிச்சதும் மேற்கொண்டு இதை தொடறணுமான்னு தோணிச்சி. இரண்டு மனசா நான் தவிச்சிக்கிட்டு நின்னப்போ போலீஸ் விரிச்ச வலைன்னு தெரியாம அவங்களுக்கு எங்க டீமில் உள்ள பையன் கால் பண்ணிட்டான் ட்ரேஸ் பண்ணி அவனைப் பிடிச்சி என்னையும் அதே நேரம், நான் என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருந்தேன்.
 
எத்தனை சுலபமா வளர்ந்தேனோ அத்தனை இழந்தேன் ராக்கேஷ், எல்லாம் காலேஜ் பசங்க அவங்க தப்பிக்க அப்ரூவர் ஆகி என்னை கை காட்டிடாங்க, நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். டிராக்டிங் ஐடி லாக் பண்ணலை, நீரஜ் தன் வரையில் தப்பிக்கணுன்னு கம்பி நீட்டிட்டான். தங்கச்சியோட கல்யாணம் நின்னுபோச்சு அவ தற்கொலை பண்ணிகிட்டா அந்த ஏக்கத்திலேயே அம்மாவும் எல்லாத்தையும் இழந்திட்டேன் ராக்கேஷ்.”
 
மைக்கேல் கதறி அழுதான்.
 
“ஜெயிலுக்கு வந்தபிறகு கூட எனக்கு பிரச்சனைகள் ஓயலை. நீரஜ் பற்றிய உண்மையைச் சொல்லக் கூடாதுன்னு ஒரே மிரட்டல். இங்கே யாரையும் நம்ப முடியலை, யாரைப் பார்த்தாலும் என்னை கொல்ல வர்றா மாதிரியே இருக்கு. எப்படியோ தப்பிச்சிகிட்டே வர்றேன். நீரஜ் பற்றி வாய் திறக்கலை எல்லாமே என்னோட பிளான்னு ஒத்துக்கிட்டேன். குற்றத்தை ஒப்புக்கிட்டதாலே தண்டனை கொஞ்சம் குறைஞ்சது.”
 
“ம்...ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சிக்கல்.” மைக்கேலின் தோளின் மீது ஆதரவாய் கை வைத்தான் ராக்கேஷ்.
 
“எவன் குடிய கெடுக்க இன்னமும் கண்ணு முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று லாட்டியில் கம்பியைத் தட்டியபடியே கன்னடத்தில் கேட்ட செக்யூரிட்டியைப் பார்த்துவிட்டு இருவரும் தங்கள் உறங்க எத்தனித்தார்கள். மனத்தைப் போலவே விழிகளும் மூடாமல் வெறித்தன.