Skip to main content

முதல் வெற்றி; டெல்லியை பதம் பார்த்த பஞ்சாப் கிங்ஸ்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Punjab Kings recorded their first win after defeating Delhi

ஐபிஎல் 17வது சீசனின் இரண்டாவது போட்டி டெல்லி கேபிட்டல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மகாராஜா யாதவந்திர சிங் மைதானத்தில் சண்டிகரில் இன்று மாலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல் அணிக்கு வார்னர் மார்ஸ் இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்தது. வார்னர் 29 ரன்களும் மார்ஸ் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த சாய் ஹோப் அதிரடியாக விளையாடி 25 பந்துகளின் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளின் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புய் , ஸ்டப்ஸ் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.  இறுதி கட்டத்தில் அக்சர் படேல் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் திருப்புமுனையாக கடைசி கட்ட வீரர் அபிஷேக் பொரேல் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அக்சர்  படேலின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் என 24 ரன்கள் குவித்தார். 

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174  ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்திப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். ரபாடா, ஹர்பிரித், ராகுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்பு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் பேர்ஸ்டோ இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்தது. இருப்பினும் அடுத்தடுத்து இருவரும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷாம் கரண் இணை ஓரளவு அதிரடி காட்டி ஆடியது. பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் சாம் காரனுடன் லிவிங்ஸ்டன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷாம் கரண் அரை சதம் கடந்து 63 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஷாந்த் சிங் டக் அவுட் ஆனாலும், லிவிங்ஸ்டன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 38 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார். 19.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

- வெ.அருண்குமார்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.