Skip to main content

"உலகக்கோப்பைல இவங்க மூணு பேரும் சேர்ந்து கலக்குவாங்க"- கங்குலி உற்சாகம்...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

வரும் மே 30 ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து நாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் விரைவில் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.

 

ganguly about kohli captainship in upcoming worldcup series

 

 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கோலியின் கேப்டன்ஷிப் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "ஐபிஎல் தொடருக்கும், உலகக்கோப்பைக்கும் எந்த தொடர்பில்லை. விராட் கோலியின் ஐபிஎல் அனுபவங்கள் எக்காரணம் கொண்டும் உலகக்கோப்பையை பாதிக்காது என நான் கருதுகிறேன். ஒருநாள் போட்டிகளில் கோலியின் சாதனைகள் இதுவரை சிறப்பாகவே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் தோனியின் அனுபவம், ரோஹித் ஷர்மாவின் துணை ஆகியவை கோலிக்கு பக்கபலமாக இருக்கும். இந்த மூவர் கூட்டணியை வெல்வது கடினமே. அதுபோல  ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்" என கூறினார்.

மேலும் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்படி இருக்கும் என கேட்ட போது, "இங்கிலாந்து மைதானத்தில் பாகிஸ்தான் எப்போதும் சிறப்பாகவே விளையாடும் என்பது அவர்களது கடந்தகால சாதனைகளை பார்த்தாலே நமக்கு தெரியும். இருந்தாலும் கோலி, தவான், தோனி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்திருக்கும் இந்தியாவை அவ்வளவு எளிதாக அவர்கள் வீழ்த்த முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

முன்னணி நடிகரின் நடிப்பில் திரைப்படமாகிறது கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

GANGULY

 

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகவுள்ளது.

 

இதனை கங்குலியே உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நான் பயோபிக்-கிற்கு ஒப்புக்கொண்டுள்ளேன். அது இந்தியில் எடுக்கப்படும். ஆனால் இயக்குநர் யார் என்பதை தற்போது கூற முடியாது. அனைத்தையும் தயார் செய்ய மேலும் சில நாட்கள் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கங்குலியாக ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், கங்குலியின் பயோபிக் திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கங்குலி ஏற்கனவே தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? - பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

GANGULY

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் கரோனா உறுதியானது.

 

இதையடுத்து, பாதுகாப்பு வளையத்தை மீறி, வீரர்களுக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்த கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரிடம் பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் மீறினார்களா? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கங்குலி, "நான் அப்படி நினைக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த அறிக்கைப்படி வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறவில்லை. இது (வீரர்களுக்கு கரோனா ஏற்பட்டது) எப்படி நடந்தது என்பதைக் கூறுவது கடினமான ஒன்று. நாட்டில் எப்படி இத்தனை அதிகமான மக்கள், கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கூறுவது கடினமானது" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து, உலகம் முழுவதுமுள்ள பாதுக்காப்பு வளையத்தை உருவாக்கும் தொழில் வல்லுநர்களால் கூட, பாதுகாப்பு வளையத்திற்குள் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிய கங்குலி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் (இங்கிலாந்தின் கால்பந்தாட்ட தொடர்) நடைபெற்றபோது, சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகள் ஆறு மாத காலம் நடைபெறும் என்பதால், அவர்களால் அப்படி செய்ய முடிந்தது. ஆனால், நமக்கான கால அவகாசம் குறைவானது. நாம் வீரர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும். அதனால் மீண்டும் போட்டிகளை நடத்துவது கடினமானது" என கூறியுள்ளார்.

 

மேலும் கங்குலி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் (கடந்த ஆண்டை போலவே) நடத்த ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போது இந்தியாவில் இந்தளவிற்கு கரோனா பரவல் இல்லை என்பதால் இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.