Skip to main content

சுனில் ஷேத்ரியின் வேண்டுகோளுக்கு வரவேற்பு! - டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

மும்பையில் இந்தியா மற்றும் கென்யா கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையே இன்று சர்வதேச கால்பந்தாட்ட போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு அனைத்து ரசிகர்களும் வந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரியின் வேண்டுகோளுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. 
 

SoldOut

 

கடந்த வெள்ளிக்கிழமை மும்பை கால்பந்தாட்ட மைதானத்தில் சீன அணியை எதிர்கொண்டது இந்திய கால்பந்தாட்ட அணி. அந்தப் போட்டியில் இந்திய அணி 5  - 0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி சர்வதேச அளவில் தனது மூன்றாவது ஹாட்ரிக் கோல் சாதனையைப் பதிவு செய்தார். ஆனால், இந்த வெற்றியையும், சாதனையையும் கொண்டாட ரசிகர்கள் முன்வரவில்லை. குறிப்பாக சொன்னால், இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கு கணிசமான ரசிகர்கள் இருந்தாலும், இந்திய கால்பந்தாட்ட அணியை ஒரு பொருட்டாக அவர்கள் நினைப்பதில்லை என்பதை, அன்றைய நாள் மீண்டும் உணர்த்தியது. 
 

இந்நிலையில், இந்தியாவின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான சுனில் ஷேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகின் தலைசிறந்த அணிகள், கிளப்புகளைக் கொண்டாடும் இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களே.. எங்கள் விளையாட்டையும் கொஞ்சம் பார்க்க வாருங்கள். எங்களிடம் குறை இருக்கலாம். நாங்கள் அவர்களோடு ஒப்பிடும் அளவுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், ஒருநாள் எல்லாமே மாறும். மாற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவுங்கள். மைதானத்திற்கு வாருங்கள். எங்கள் விளையாட்டைப் பாருங்கள். எங்களை விமர்சியுங்கள், எங்களை நோக்கி கத்துங்கள், திட்டுங்கள், எங்கள் குறைகளைப் பற்றி விவாதியுங்கள். நீங்கள் நினைத்தால் மிகப்பெரிய மாற்றம் பிறக்க வாய்ப்பிருக்கிறது’ என இருகரம் கூப்பி உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 

SoldOut

 

சுனில் ஷேத்ரியின் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட ஒரே நாளில், மும்பை கால்பந்தாட்ட மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனில் ஷேத்ரியின் வேண்டுகோளுக்கு இந்திய அளவில் பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ரசிகர்கள் தங்கள் அன்பை இன்று மைதானத்தில் செலுத்த இருக்கின்றனர். இன்றைய போட்டி இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரியின் நூறாவது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.