Skip to main content

கர்ப்பிணி பெண்ணின் சாபம்; தோசையைக் கூட வீட்டில் சுடாத கிராமங்கள்

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

thiruvannamalai temple festival

 

கல்யாணம், காதுகுத்து, கருமாதி, ஆடித்திருவிழா, ஊர் திருவிழா, குடும்ப விழா, பொதுவிழா எதற்கும் எண்ணெய்யில் செய்யப்படும் வடைகள், அதிரசம், முறுக்கு, எள்ளடை, மீன் வறுவல் செய்யாமல் இருக்கமாட்டார்கள். ஆனால் திருவண்ணாமலை அருகே சிலகிராமங்களில் காலம் காலமாக எண்ணெய் பலகாரங்கள் செய்யாமல் இருக்கிறார்கள்.

 

திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் வடை, அதிரசம், முறுக்கு, குழி பனியாரம், வறுவல் மீன், சிக்கன் 65, காளிபிளவர், பஜ்ஜி என எதையும் தங்கள் வீடுகளில் செய்யமாட்டார்கள். ஏன் தமிழரின் பாரம்பரிய உணவாக மாறிப்போன தோசை கூட வீட்டில் சுடுவதில்லை.

 

இதற்கெல்லாம் காரணம் ஒரு கர்ப்பிணி பெண்ணின் சாபம் எனச் சொல்லப்படுகிறது.

 

ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது, இருபது தலைமுறைக்கு முன்பு எங்க முன்னோரின் குடும்பத்தில் 6 பசங்க. அதில் ஐந்து ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. பெண் பெயர் சந்தியம்மா. அண்ணன், தம்பிங்களுக்கு கல்யாணமாகி கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க. கடைக்குட்டியான சந்தியம்மா மீது அண்ணன் தம்பிகள் அதிக பாசம் வச்சி இருந்தாங்க. சந்தியம்மாவை கல்யாணம் செய்து புகுந்த வீடு அனுப்பிட்டாங்க. தலைபிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு அழைத்து வந்த சந்தியம்மாவுக்கு வாய்க்கு ருசியா யாரும் எதுவும் செய்து தரல. அம்மா இல்லாத பிள்ளையால் அண்ணிங்கக்கிட்ட உரிமையா கேட்க முடியல. அந்த ஏக்கத்திலேயே இருந்திருக்கு. அடிக்கடி பொறந்த பொண்ணுக்கும் வாழ வந்த மருமகளுகளுக்கும் சண்டை வந்திருக்கு. ஒருநாள் அண்ணனுங்க எல்லாம் விவசாய வேலைக்கு போனதுக்கப்பறம் வீட்டுக்கு வந்த மருமகளுங்க கூட்டுசேர்ந்து கேழ்வரகு (ராகி) இடிச்சி வடை சுட்டு சாப்பிட்டிருக்காங்க. புள்ளதாச்சியா இருந்த நாத்தனார்க்கு கொஞ்சம் கூடதரல, இதனால் மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா கோபத்தில் அழுதுக்கிட்டே வீட்டுக்கு பக்கத்தல இருந்த கிணத்துல விழுந்து உயிர விட்டுடுச்சி. மாலை வீட்டுக்கு வந்த அண்ணனுங்க தங்கச்சிய காணலயேன்னு தேடினப்ப கிணத்துல பிணமா மிதக்கறத பார்த்து கண்ணீர் விட்டு அழுதாங்க.

 

thiruvannamalai temple festival

 

சடங்குகள் செய்து அடக்கம் செய்த அண்ணன் தம்பிகளுக்கு, தங்கச்சி ஏன் செத்துச்சின்னு தெரிஞ்சிக்க முடியல. குலதெய்வம் அய்யனார்க்கு கிடாவெட்டி வேண்டிக்கிட்டதும், அண்ணனுங்க 5 பேர் கனவுலயும் அய்யனார் வந்து உங்க பொண்டாட்டிகளாள மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா தற்கொலை செய்துக்கிச்சி. உங்க தங்கச்சி சாகும்போது, இனிமே நான் பிறந்த வம்சத்தல யாரும் எண்ணெய் பலகாரங்கள் செய்யகூடாது, மீறி பாலகாரங்கள் செய்தால் அந்த குடும்பத்தில் உள்ளவங்களுக்கு எண்ணெய் கொப்பளம் போட்டு இறந்து போய்டுவாங்கன்னு சாபம் விட்டிருக்குன்னு சொன்னார் அய்யனார். அதன்பின் இறந்துபோன சந்தியம்மாவ எங்க முன்னோர்ங்க தெய்வமாக்கி கோயில் கட்டி வணங்க தொடங்கினாங்க. நாங்களும் அப்படியே செய்யறோம். எங்கள் வம்சம் பெருகி இப்போது 5 கிராமங்கள்ள, வெளிநாடுகள்ள இருக்காங்க. நாடுவிட்டு நாடு போனாலும், எவ்வளவு வசதி வாய்ப்பிருந்தாலும் நாங்க வாழும் வீட்டில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டோம். எங்க வம்சத்தல பொறக்கும் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வீட்ல எதுவும் செய்யமாட்டாங்க. கல்யாணம் செய்துக்கிட்டு கணவன் வீட்டுக்கு போனபிறகு அவுங்கள அந்த சாபம் கட்டுப்படுத்தாது. அவுங்க புகுந்த வீட்ல எண்ணெய் பொருட்கள் செய்யலாம்.

 

20 ஆண்டுகளுக்கு முன்பு, சிலகுடும்பத்தார் சாபத்த மீறி எண்ணெய் பொருட்கள செய்தாங்க. அப்படி செய்து சாப்பிட்ட மூனாவது நாள் அந்த வீடுகளில் இருந்த எல்லார்க்கும் கொப்பளம், கொப்பளம்மா உடம்புல வந்துடுச்சி, ஆஸ்பிட்டல் போனாங்க சரியாகல. கடைசியா அய்யனார்க்கிட்டயும், சந்தியாம்மன் கிட்டயும் கிடா வெட்டறன்னு வேண்டனதுக்கப்பறம் அவுங்க உடம்புலிருந்த கொப்பளம் தழும்பேயில்லாம மறைந்தது. அதுக்கப்பறம் யாரும் அந்த விஷப்பரிச்சையில இறங்கறதேயில்ல என்றார்கள்.

 

thiruvannamalai temple festival

 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் குலசாமி அய்யனார்க்கும், சந்தியம்மனுக்கும் திருவிழா எடுக்கிறார்கள் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள். திருவிழாவின்போது சந்தியம்மன் கோவில் வளாகத்தில் தங்கள் வம்சத்தில் பிறந்த வயதான பெண்மணி விரதமிருந்து எண்ணெய் சட்டியில கொதிக்கும் நெய்யில் வடை, பனியாரம் சுட்டு சந்தியம்மாளுக்கு படைப்பர். ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துக்கொள்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் அந்த வம்வசத்தில் பிறந்த பெண்கள், வீட்டுக்கு வெளியே சாலையோரம் அடுப்பு வைத்து எண்ணெய் வானலில் வடை சுட்டு தான் பிறந்த குடும்பத்துக்கு தருவார்கள், அப்போதும் வீட்டுக்கு வந்த மருமகள்கள் செய்யமாட்டார்கள். தீபாவளி, பொங்கல், அம்மாவாசை மட்டும்மல்ல அதன்பின் எப்போதும் வீடுகளில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டார்கள். குழந்தைகள் வடை வேண்டும், அப்பளம் வேண்டும் எனக்கேட்கும்போது கடைகளில் வாங்கி தந்து அவர்களை சமாதானம் செய்கிறார்கள்.

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.