Skip to main content

முதல் விண்வெளி வீராங்கனையை அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்! 

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

first uae women astronaut

 

ஐக்கிய அரபு அமீரகம், தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியிருந்த நிலையில், சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் இந்த சாதனையை நிகழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகம், கடந்த 2020ஆம் ஆண்டு அனுப்பிய விண்கலம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.

 

இதேபோல் கடந்த சில வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகம், பெண்கள் முன்னேற்றத்திற்கான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு சமமான ஊதியத்தை வழங்கும் சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அமல்படுத்தியது. அமீரகத்தின் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்திற்கு, சாரா அல் அமிரி எனும் பெண் அமைச்சர் தலைமை தாங்கினார். இவர் அமீரக அமைச்சரவையில், நவீன அறிவியல் துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் விண்வெளிக்குச் செல்லும் முதல் வீராங்கனையை அந்நாடு அறிவித்துள்ளது. நோரா அல்-மெட்ரூஷி என்னும் 27 வயதான பெண், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் முதல் பெண்ணாக விண்வெளிக்குச் செல்லவுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள அவர், தற்போது பெட்ரோலிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

 

ஐக்கிய அரபு அமீரகம், தாங்கள் எண்ணெய் வளத்தை சார்ந்திருப்பதைக் குறைக்கும் விதமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொள்ள முயன்று வருகிறது. அதற்கு விண்வெளி திட்டங்களைப் பயன்படுத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், 2024ஆம் ஆண்டு நிலவுக்கு விண்ணூர்தியை அனுப்பவும், 2117ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.