Skip to main content

இந்தியாவின் அஞ்சு; பாகிஸ்தானில் பாத்திமா! - காத்திருக்கும் சட்ட சிக்கல்கள்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Rajastan girl married pakistan person

 

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம், பிவாடி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(35). இவருக்குத் திருமணமாகி அரவிந்த் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அஞ்சு சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா(29) என்பவருடன் பேஸ்புக்கில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அன்று தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுத் தனது பாகிஸ்தான் காதலனைச் சந்திக்கச் சுற்றுலா விசா மூலம் வாகா எல்லை வழியாகப் பாகிஸ்தான் சென்றார்.

 

அப்போது, பாகிஸ்தான் அப்பர்திர் மாவட்டக் காவல்துறையினர் அங்கு வந்த அஞ்சுவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், தனது காதலனைச் சந்திப்பதற்குப் பாகிஸ்தான் வந்ததாகக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அஞ்சுவிடம் இருந்த பயண ஆவணங்களான பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், அஞ்சு மீது நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தான் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.  நஸ்ருல்லா வீட்டில் தங்கிய அஞ்சு, நஸ்ருல்லாவைக் காதலிப்பதாக அங்கு இருந்தபடியே பேட்டி அளித்தார்.

 

இதனையடுத்து பாகிஸ்தான் இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தான் அஞ்சு இந்தியாவில் இருந்து சென்றுள்ளார் என்று செய்திகள் பரவின. அதனைத் தொடர்ந்து, பரவி வந்த செய்திகளுக்கு நஸ்ருல்லா மறுப்பு தெரிவித்திருந்தார். அப்போது அவர் “எங்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. கூடிய விரைவில் அவரது விசா காலாவதியாவதால் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஞ்சு இந்தியா திரும்பிச் செல்லுவார்” என்று கூறினார்.

 

Rajastan girl married pakistan person

 

இந்தச் செய்தி வெளிவந்த நிலையில், பாத்திமா என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய அஞ்சு, தனது காதலன் நஸ்ருல்லாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் கைபர் பக்துன்க்வாவில் உள்ள அப்பர் திர் மாவட்ட நீதிமன்றத்தில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் நஸ்ருல்லாவும், அஞ்சுவும் கைபர் பக்துன்க்வா சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றிருந்தார்கள். அப்போது, பசுமையான தோட்டத்தில் கரம் பிடித்தபடி அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது.

 

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தைச் சேர்ந்த அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனது மகளுடன் எனக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மனரீதியாகப் பிரச்சனை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் இறந்துவிட்டதாகவே கருதுகிறேன். அவள் தனது கணவரையும் குழந்தைகளையும் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது மருமகன் மீது எந்தத் தவறும் கிடையாது. அவர் மிக எளிமையான மனிதர்” என்று கூறினார்.

 

இதற்கிடையில், அஞ்சு  சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர்,  “நான் பாகிஸ்தானில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறேன்.  நான் இங்கே சட்டப்பூர்வமாக வந்திருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்தினரையோ அல்லது எனது உறவினர்களையோ யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியாவில் இந்து மத முறைப்படி அரவிந்த்தை திருமணம் செய்து கொண்ட அஞ்சு, தற்போது பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு மாறி நஸ்ருல்லாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது கணவரிடம் முறைப்படி விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்துள்ள அஞ்சு பல சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.