Skip to main content

‘என் அம்மாவுக்குப் பிறகு தான் எல்லாமே...’ - போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

 youth threatened the police

 

வேலூர் அடுத்த தொரப்பாடி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சங்கர் (37). இவர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு அமர்ந்து உடைந்த கண்ணாடித் துண்டை கழுத்தில் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாகத் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் போதை ஆசாமி சங்கர் "காவல்துறையினர் தன்னை நெருங்கினால் நான் கழுத்தில் குத்திக் கொண்டு இங்கேயே இறந்து விடுவேன்" எனத் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

 

இது குறித்து சங்கரிடம் கேட்டபோது, “நான் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருக்கும்போது என்னை ஒரு பேருந்து ஓட்டுநர் மோதுவது போல் வந்தார். அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை அவர் தாக்கியதால் அவரை நான் தாக்க முற்பட்டேன். அதற்குள் அங்கு வந்த இரண்டு காவல்துறையினர் என்னை அவதூறாகப் பேசி தாக்கி விட்டனர். என்னைப் பற்றியும் எனது அம்மாவைப் பற்றியும் அவதூறாகப் பேசும் அதிகாரம் யார் அவர்களுக்கு கொடுத்தது? நானும் மனிதன் தான், மிருகம் அல்ல. நான் அவர்களை கொலை செய்தால் என்னை விட்டு விடுவீர்களா? எனவே என்னை அவதூறாகப் பேசி தாக்கிய காவல்துறையினர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரைக்கும் நான் விடமாட்டேன். என்னை யாராவது நெருங்க முயற்சித்தால் கழுத்தில் வைத்துள்ள கண்ணாடி துண்டால் கழுத்தை அறுத்து இங்கேயே இறந்து விடுவேன்” எனக் கூறினார்.

 

இதனை அடுத்து ஒருபுறம் காவல்துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த சங்கரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது சாதூரியமாகச் செயல்பட்ட சத்துவாச்சாரி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் நாராயணன், பின்பக்கமாக வந்து தற்கொலை மிரட்டல் விட்ட சங்கர் மீது பாய்ந்து கீழே விழுந்து கையில் வைத்திருந்த கண்ணாடித் துண்டை பிடுங்கி அதிரடியாக காப்பாற்றினார். இதனை அடுத்து சக காவலர்கள் போதை ஆசாமி சங்கரின் கையை இறுகப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

 

மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே இரவில் தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியாலும், அவரைப் பாய்ந்து பிடித்த காவல்துறையினரின் அதிரடி செயல்பாட்டாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.