சேலத்தில், போலியாக கூட்டுறவு சங்கத்தை நடத்தி, 58 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் நிர்வாகியைப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி வழங்கப்படும் என அறிவித்தனர். இதை நம்பிய ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலத்திற்குப் பிறகும் அசல் மற்றும் வட்டியைத் தராமல் இழுத்தடித்து வந்தனர்.
இந்நிலையில்தான் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர், சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அதில், அமுதசுரபி கூட்டுறவுச் சங்கத்தில் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த நிறுவனம் தனது அசல், வட்டியைத் தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. ஜெயவேல் மற்றும் தங்கபழம் உள்ளிட்டோர் சேர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அமுதசுரபி நிறுவனத்தின் பெயரில் 86 கிளைகளைத் தொடங்கியுள்ளனர். அவற்றின் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து 58 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இந்நிறுவனத்தின் மீது இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக அமுதசுரபி நிறுவனத்தின் தலைவர் ஜெயவேல், இயக்குநர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்டமாக ஜெயவேல், கணக்காளர் கண்ணன், இயக்குநர் தங்கபழம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள், கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த இந்நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான சரண்யாவை (31) பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜூன் 25 ஆம் தேதி கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பிரேம் ஆனந்தை தேடி வருகின்றனர்.